Tuesday, April 22, 2014

அப்பா -17

அப்பா -17,

ஊட்டி..பேரை சொன்னாலே நெஞ்சம் குளிரும். அங்கு அக்கா திருமணமாகி சென்றாள். எங்கள் ஊரில் இருந்து செல்ல பஸ் அல்லது கார்தான். அப்பாக்கு நினைத்தால் பெண்ணை பார்த்துவிட வேண்டும். என்னையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு கிளம்பினோம்.

அந்த முறை டிசம்பர் குளிர். சமவெளி மனிதர்களுக்கு ஊட்டி டிசம்பர் தாக்குப்பிடிப்பது கஷ்டம்..அப்பாக்கு இருக்கமுடியவில்லை..இரு நாட்களுக்குள் கிளம்பிட்டோம்.

திரும்பி கோவையில் இருந்து ஊருக்கு இரவுப்பயணம். அந்த காலத்து டீலக்ஸ் பஸ். வழக்கம்போல ஜன்னல் ஓரம் நான். ஜன்னல் ஓர பயணங்கள் பயணத்தை சிறக்க செய்யும் என்பது இன்று வரை நம்பிக்கை. பேருந்துக்கு பின்னால் பாய்ந்து ஓடும மரங்கள், மலைகள், கால்நடைகள், கிராமங்கள் அழகு என்றால் கீழே குனிந்து பார்ப்பேன்..பேருந்து நிற்பது போலவும் தார் பூசிய கறுப்பு ரோடு கன்வேயர் பெல்ட் போல ஓடுவது போல ஒரு தோற்றம் கொடுக்கும்..அதை மணிக்கணக்கில் ரசிப்பேன்..கற்பனைகளில் பொருத்திக்கொள்வேன்.

அப்பாவும் ,நானும்..நடுஇரவில் ஒரு குறுகுறுப்பு..பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்..ஒரு ஆணின் பார்வை, நெருக்கம், கை ஸ்பரிசம் எல்லாவற்றிலும் அன்பா, காமமா என்று எளிதாக பிரித்து விட முடியும். பார்வையே சரியில்லை என்று சொல்வது இப்படிதான்..

முதுகுக்கு பின்னால் பூச்சி ஊர்வது போல உணர்வு..அப்பா நல்ல தூக்கத்தில்..எழுப்ப மனம் வரவில்லை..அப்படி சீட்டின் இடுக்கில் நான்கு விரல்கள் நுழைந்தது..சீட்டில் நிம்மதியாக சாய்ந்து உக்கார முடியவில்லை. பெண்கள் பெரும்பாலும் இவை சகஜம் என்ற மனப்போக்கில் சீட்டின் நுனியில் அமர்வது, சீட்டை மாற்றி அமர்வது என்று அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். அடுத்து சீட்டின் கீழே விரல்கள்..அரை மணி நேரம் முடியவில்லை..சீட்டின் நுனியிலையே அமர்ந்து இருந்தேன்..மிகச்சிறிய வயது..

அடுத்து கால் உள்ளே நுழைந்தது..அருவருப்பின் உச்சம் சிறு வயதில் அனுபவித்தது..இன்று நினைத்தாலும் ஒரு வாந்தி போன்ற அருவருப்பு..வந்ததே கோவம்..எழுந்து பார்த்தால் நாற்பது வயது மனிதன்..அப்பா போல இருந்தான்..தூங்குவது போல பாவ்லா செய்தான்..சரி வம்புக்கு வரமாட்டான் என்று உக்கார்ந்தால் திரும்ப ஆரம்பித்தான்..கோவம் தாங்கவில்லை..பஸ் முழுக்க அனைவரும் தூக்கம்..அப்படியே ரத்தம் சூடாகி தலைக்கு சென்றது..செருப்பை எடுத்தேன்..பொளிச்..பொளிச்.பொளிச்...செருப்பால் அடித்தும் தூங்குவது போலவே பாவ்லா செய்தான்.

கோவம் தாங்கவில்லை...உடம்பு கோவத்தில் நடுங்கியது..பேருந்தை நிப்பாட்ட சொல்லி கத்தினேன்..அனைவரும் எழுந்தார்கள்..அப்பாக்கு ஒண்ணுமே புரியவில்லை..அனைவரும் நைய புடைத்தார்கள்..நான் பிடிவாதம் பிடித்து போலிஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை அனுப்ப வேண்டும் என்று அதிக பிடிவாதம் பிடித்தேன். அனைவரும் ஒப்புக்கொண்டு பக்கத்து ஊர் போலிஸ் ஸ்டேஷன் நோக்கி பஸ் சென்றது.

அனைவரும் இறங்கினர். நானும் கம்ப்ளயின்ட் கொடுக்க எழுந்தேன்..அப்பா என்னை அமர்த்திவிட்டு கூப்பிடறப்ப வந்தா போதும் என்று இறங்கினார்கள்..எதுவும் பேசவில்லை.. அனைவரும் ஏறி பஸ் கிளம்ப பார்த்தது..எனக்கு கோவம் என்னப்பா FIR பதிய என் கையெழுத்து வேண்டுமே என்று கேட்டேன்..அதற்கு வேறு கேஸில் உள்ளே தள்ளிட்டோம் என்று சமாதானம் செய்தார்கள். பெரும்பாலும் பெண்களை போலிஸ் ஸ்டேஷன் படியை மிதிக்க விடாத காலம்...

எல்லாம் முடிந்து தூங்க போகலாம் என்று நினைக்கும் வேளையில் முதல் வார்த்தை அப்பா சொன்னார்கள்..ஏம்மா கையால தடவ வந்தான் என்று வெளியில் சொன்ன..செயின் அறுக்க வந்தான்னு சொல்லி இருக்கலாம் இல்லையா என்று..

அப்பாக்கள் என்றுமே பெண் குழந்தைகளின் பெயரை காப்பாற்றத்தான் நினைப்பார்கள். அதுக்கு துணிச்சலை ஊட்டிய என் அப்பாவும் விதிவிலக்கல்ல..

No comments: