Tuesday, April 22, 2014

அப்பா -10

அப்பா -10..

மிக சிறு வயதில் என் உறவினர்கள் சிலர் சேர்ந்துகொண்டு உன்னை தவிட்டுக்கு வாங்கிட்டோம் என்று கிண்டல் செய்வார்கள்.

எனக்கு அழுகையாக வரும்..எத்தனை தவிடுன்னு கேட்டதுக்கு மரக்கா தவிடுக்கே உன்னை கொடுத்துட்டாங்கன்னு சொல்ல..எனக்கு கனவுல கூட தங்கம் குவிச்சு வச்சது போல மரக்கால் அதில் நிரம்பிய தவிடு நினைவுக்கு வரும்.

அம்மாகிட்ட போய் கேட்டேன்..ஆமாம்னு அம்மாவையும் சொல்ல வச்சிட்டாங்க..அப்புறம் எதுக்கோ தலையில குட்டிட்டாங்க ,உடனே அழுதுகிட்டே இவங்க என் அம்மா இல்லையானு கேட்டுகிட்டு அப்பாகிட்ட போனேன்.

உடனே அப்பா பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.."ஆமாம்மா நீ இவங்களுக்கு பிறக்கல..ஆனா தவிட்டுக்கு எல்லாம் வாங்கல..நீ பெரிய பணக்கார வீட்டு பொண்ணு..உங்க அம்மா பெரிய பணக்காரி.. செருப்புக்கு மேட்சா இருக்கிற ஏரோப்ளேன்லதான் போவா..அத்தனை வசதி..நீ நல்ல பொண்ணா வளர இங்க விட்டுருக்கா"..ன்னு சொல்ல,

"ஆனா எனக்கு அப்பா நீதான்",அப்பாவை மட்டும் பெண்குழந்தைகள் விட்டுக்கொடுப்பதில்லை..

"அந்த அம்மா எப்ப வருவாங்க? ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல"?

வருவாங்க..ரொம்ப பிசி..எப்போதும் பறந்துக்கிட்டே இருப்பாங்க..கூடிய சீக்கிரம் வந்து பார்ப்பாங்க..

ரொம்ப நாள் எங்கம்மா செருப்புக்கு மேட்சா ஏரோப்ளேன்ல போவாங்களாம்னு சொல்லிக்கிட்டு அலைஞ்சேன்.நினைவுல அம்மா பயங்கர ஸ்டைலா..கொஞ்சம் நடிகைகள் போல..பெரிய பங்களா, சொந்தமா ஏர்போர்ட் , விதம் விதமா, கலர் ,கலரா செருப்புகள்ன்னு ....ஒரு கெத்தா திரிவேன்.. அம்மாவை பற்றிய வித வித கற்பனைகள், உடைகள், வசதிகள்..மட்டுமே..பாசம் பற்றியெல்லாம் நினைவு இல்லை..

அம்மா திட்டினா நீ ஒன்னும் என் அம்மா இல்லை..எங்கம்மா யார்ன்னு தெரியுமான்னு சவுண்டு விடுவேன்..சில தோழி குழந்தைகள்கிட்ட சொல்லி இருந்ததாய் நினைவு.

தவிட்டுக்கு வாங்கினேன்னு கேலி பண்ணினதுக்கு பதிலடி கொடுத்து ஏரோப்ளேன் சத்தம் கேட்டா ஓடி போய் பார்ப்பேன்.

கற்பனை வளத்தை அப்பா எப்படி எல்லாம் தூண்டி, சில மறக்க முடியாத நினைவுகளை கொடுத்து இருக்கார்.

லவ் யூ அப்பா..

No comments: