Sunday, October 5, 2014

எங்கெங்கும் மின்சாரம்....ஷாக்.

பயணம்...வாழ்கையின் கற்றுக்கொடுக்கும் பகுதி..வாழ்க்கையின் மிகப்பிடித்த பகுதியும்....எதுவுமே அலுத்தாலும் பயணம் மட்டும் அலுப்பது இல்லை.. லட்சியங்கள் என்று சில எனக்கு இருந்தால் அவை பயணம் சார்ந்ததாகவே இருக்கிறது..

இந்த அஞ்சு நாளில் சிங்கப்பூர் ட்ரிப் முதல் சிங்காநல்லூர் அம்மா வீடு வரையான பல கதைகளை கேட்கும் குழந்தைகள் கண்டிப்பாக நம்மை வீட்டில் இருக்க விட மாட்டார்கள். கடந்த மூன்று வருடங்களாக அக்கா வீட்டில் தசரா விடுமுறைக்கு போய்விட்டு விஜயதசமி அன்று சரஸ்வதி அம்மன் கோவில் போகும் பழக்கமும் இருந்தது..அங்கு ஹால் டிக்கெட் எண்களை குழந்தைகளும், பெற்றோர்களும் வேண்டுதலோடு எழுதி வைத்து இருப்பார்கள்..அந்த நம்பிக்கை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை வரும்.

பேச்சு ஜோக் நீர்வீழ்ச்சி ஆரம்பித்து, கூர்க், மைசூர் எல்லாம் சுற்றிவிட்டு கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் வந்து நின்றது.(எத்தனையோ தடவை போக பிளான் செஞ்சு தவறிய இடம்)  முதல்நாள் முடிவெடுத்து கிளம்பியதால்..கூகிளாண்டவர் மைசூர் ரோட் வழியாக செல் என்று உத்தரவு கொடுத்ததாலும்...காமாட் லிருந்து காபி டே, எம்பயர் வரை வரிசை கட்டி நிற்கும் ஹோட்டல்களை நினைத்து நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு கிளம்பியாச்சு..வீட்டில் என்னை சாப்பாடு கட்டிக்க எடுத்து சொல்லியும் ( ஆமா இவங்களுக்கு வேற வேல இல்ல..எப்ப பாரு வீட்டு சாப்பாடுதானா....ம்ம்ம்க்கும்..என்று மனசுக்குள் தோளில்இடித்துக்கொண்டு..நேரில் எல்லாம் பயண நேரத்தில் முறைத்துக்கொள்ளப்பிடாது என்ற கொள்கை ) எதுவும் எடுத்துக்கொள்ளாமல் கிளம்பி ஆயாச்சு.ஜூஸ், பிஸ்கட் பாக்கெட்டுகள் மட்டும்.

மைசூர் ரூட் ல போகலாமா என்று தொங்கி கொண்டு இருந்த 
நெட்டு டன் உள்ள என் போனை கேட்டபொழுது..அப்படி ஒரு ரோடா..கனகபுரா வழியாக அல்லவா செல்ல வேண்டும் என ஆணையிட..இவரிடம்..ஹையோ..மைசூர் ரோட் இல்ல..தப்பா போறீங்கன்னு சொல்ல..நன்றாக வழி தெரிந்த ஆளையும் குழப்பி..நைஸ் வழியே கனகபுரா ரோட் போய் சேரலாம் என்று சொல்லி..கிளம்பியாச்சு..

நைஸ் டால் ரோட் தான்..ரொம்ப பிடித்த சாலை..அதன் நேர்த்தியை இது வரை எந்த சாலையிலும் கண்டது இல்லை..நிஜமாகவே வெளிநாட்டுத்தரம்..

இப்படியே சுற்றிக்கொண்டு  இருந்ததில் செம பசி..எப்படி இருந்தாலும் அங்கு தரமான உணவகம் இருக்கும் என்று..போறோம், போறோம், போய்க்கொண்டே இருக்கோம்....ஒரு காபி டே மட்டும் கண்ணில் பட்டது..பிறகு ஒரு அழகான உணவகம்..வாசலில் நிறைய கார்கள்.. அத்தனை பெண்களும் வேற்று நாட்டு கலாசார உடையில்..நல்ல வேளை நான் கம்பளி போர்த்திக்கொண்டுதான் சென்றேன்...எனவே எந்த ஆண்களும் என்னை மோசமாக பார்க்கவில்லை..கையை பிடித்து இழுக்கவில்லை...வேற்று நாட்டு பாணி உடையில் இருந்த அவர்கள்  கதியை நினைத்து கண் இரண்டும் கலங்கி..மனம் பதை பதைத்து..இவர்கள் பாதுக்காப்பை பற்றி நினைக்கவே உடல் நடுங்கியது..சரி..என்று கண்கலங்க வாயில் தோசையை வைத்தால் எண்ணை சகிக்கவில்லை.இட்லி கல்லுப்போல. (கனகபுரா ரோட் வழியில்)

வழியெல்லாம் உஷாரா இருந்தவர்கள் மரத்துக்கு ஒன்றாக பெட்ஷீட் விரித்து உணவு உண்டுகொண்டு இருந்தனர்...இனிமே நாமே இது போன்ற முக்கிய சாலைகளில் உணவகம் ஆரம்பித்து..ப்ரான்சைஸ் கொடுத்து..லட்சம், லட்சமா பணம் அள்ள வேண்டும் என்ற கனவை இவரிடம் புலம்பிக்கொண்டு..எதையோ சாப்பிட்டுக்கொண்டு போய் சேர்ந்தோம்...அரைபட்டினியா இவர்களும்..எதையோ அரைத்துக்கொண்டே  நானும்..

எங்கு பார்த்தாலும் மயூரா ரெஸ்டாரன்ட் என்று பலகை..(போர்ட்)..அதை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை..கர்நாடாக டூரிசம் போர்ட் வைப்பதோடு வேலையை முடித்துக்கொள்வார்கள் ..

முதலில் கங்கன சுக்கி பால்ஸ்..அது மட்டும் என்று நினைத்துக்கொண்டு போனால்...கொஞ்ச தூரம் சென்றால்தான் பற சுக்கி பாலஸ்..அதுதான் முக்கியம்..அங்குதான் நீர்வீழ்ச்சி அருகே பரிசலில் கொண்டு செல்வார்கள்..அவரிடம் எத்தனை அடி என்று கேட்டேன்..அம்பது..என்றார்..இது வரை விபத்து? குளிக்கிறப்ப சமீபமா நாலேஞ்சு பேர் போயாச்சு..அதுக்குதான் போலிஸ் என்றார்..நூற்றுக்கணக்கான மனித தலைகளுக்கு மத்தியில் இரு போலிஸ்க்காரர்கள் தெரிந்தனர்...பாதுக்காப்புக்கு.. 

ஆனாலும் கவலைப்படாம இரண்டு முறை பரிசலில்..நீர்வீழ்ச்சி அருகில் ... அதுவே முப்பது அடி தூரம் கண் சிமிட்டும் நேரத்தில் தள்ளி விடுகிறது..ஒரு நாளைக்கு எத்தனை பரிசல்களை இது தள்ளுது என்று நினைத்துக்கொண்டேன்..

வரும் வழி முழுக்க தஞ்சை நினைவு...அத்தனையும் பச்சை.. வாழை, தென்னை, நெல் ,கரும்பு, வாய்க்கால், தண்ணி...அந்த காலத்தில் நாங்களும் இப்படித்தானே என்ற பெருமூச்சு வராமல் இல்லை..ஆனால் அங்கயும் விவசாயிகள் வாழ்க்கை சொல்லிகொள்ளும்படியோ, பொறாமை கொள்ளும்படியோ இல்லை...

சாம்ராஜ்நகர் தொகுதியை தொட்டால் பதவி போகும் என்று ஒரு நம்பிக்கை உண்டு..சில முதல்வர்கள் பதவி இழந்த கதைகள் உண்டு..நல்ல வேளை எந்த பதவியும் இதுவரை  நான் ஏத்துக்கலை..

வழியில் குட்டியானையில் சீட்டு போட்டது போல ஒரு வாகனத்தில் பயணம்  போவதை நிறைய பார்த்தேன்.நம் ஷேர் ஆட்டோ போல..அதில் பின்னாடி கால் தொங்கபோட்டுகொண்டு மிக மகிழ்ச்சியாக கதையாடிக்கொண்டே வருவதை பார்க்கும் பொழுது கார்ல வருவது வரமா, சாபமா னு புரியவில்லை..ஆனால் அதில் சென்றவர்களும் சிலர்  மேல்நாட்டு பாணி உடை..அதுவும் கட்டுப்பாடான  மண்டியா மாவட்டத்தில் அணிந்துகொண்டு சென்றதை பார்த்து பக் என்று ஆனது..பாதுகாப்பு பயம்...கண்கள் தளும்பியது..நல்லவேளை போர்வையில் தான் நான் போனேன்..

திரும்ப GPS போட்டு மைசூர் ரோடு வழியா மதுர் டிபனிஸ் ல மதுர் வடை பார்சலும், அடிகாஸ்ல சாப்பாடும் முடிச்ச பிறகுதான் ஹப்பாடான்னு ஆச்சு..

ஆனால் மைசூர் ரோடு விடவில்லை..இந்த பக்கம் வந்ததுக்கு தண்டனை ட்ராபிக்..எப்படியோ நீந்தி நைஸ் ரோடு பிடித்து..முக்கிய கடமையா எழுதி தள்ளியாச்சு..

ஆசியால முதன் முதலா நீர் மின்சாரம் இங்குதானாம்..அது இன்னும் இயங்கி கொண்டு இருக்கு. அந்த நீரின் பிறந்தவீடு , புகுந்த வீடு மின்சாரமும்  இன்னும் இயங்கிக்கொண்டு.. ஆனால் காவிரிக்கு மட்டுமா  மைசூர் வரலாறு?. 

6 comments:

sivakumarcoimbatore said...

அருமையான பயணங்கள்..

Unknown said...

பயம் இல்லா பயணம் எப்போதும் சுவாரசியம் கொண்டது இல்லை.....ஆனாலும் பயணத்தை தொடர்ந்து வேண்டும் மனது.

Avargal Unmaigal said...

படங்களை பார்க்கும் போது அங்கு சென்று வர ஆர்வமாக இருக்கிறது . உங்கள் வலைதளம் பற்றி இன்றுதான் அறிந்தேன்

Rathnavel Natarajan said...

அருமையான பயணக் கட்டுரை. = எழுத்து அளவை font size கூட்டுங்கள். அப்போது தான் எங்களை மாதிரி வயதானவர்கள் படிக்க எளிதாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் சரி தான் = பயணத்திற்கு 2 வேளைகளாவது வீட்டிலிருந்து எடுத்து செல்வது நல்லது = எங்கள் அருமை மகளுக்கு வாழ்த்துகள்; தொடருங்கள். = எனது பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் = Kirthika Tharan

ஆரோக்ய பிரிட்டோ said...

அருமை

சக்தி கல்வி மையம் said...

எழுத்தை கொஞ்சம் பெரிதாக்குங்கள்..

பயணம் அருமை.. கட்டுரையும் அருமை..