Tuesday, September 23, 2014

நானும், புத்தகமும்..

என்னை பாதித்த புத்தகம்..

"இது யாருடைய வகுப்பறை" ஆசிரியர்..ஆயிஷா.இரா.நடராசன்.

கல்வி முறைகள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எப்பவும் எனக்குள் உண்டு..எங்காவது கல்வி பற்றிய புத்தகம் பார்த்தால் போதும்..வாங்கி விடுவது வழக்கம்..பல்வேறு பாடத்திட்டங்கள், மெக்காலே கல்வி முறைகள் பற்றியே படித்திருந்த எனக்கு கல்வி உளவியல், வரலாறு, அதன் வகைகள், பல்வேறு நாட்டு கல்வி முறைகள் பற்றி எழுதியதை படித்து விட்டு மனம் இன்னும் வெளிவரவில்லை..

உழைப்பு, உழைப்பு அத்தனை அபார உழைப்பு ..ஒரு பத்தி எழுத ஒரு தலையணை அளவு புத்தகத்தை படித்து இருப்பார், அதை தவிர
கள ஆய்வுகள்..பொது தகவல்கள்...எத்தனையோ புத்தகங்களின்  சாரத்தை ஒரே புத்தகத்தில் வாசித்து விடலாம்..

கல்வி முறைகள் பற்றி அறியாத பெற்றோர்களும், ஆசிரியர்களும் கையில் கட்டாயம் வைத்து இருக்க வேண்டிய புத்தகம்...கைகட்டி , வாயில் விரல் வைத்து இறந்து போன கும்பகோணம் பள்ளி பிள்ளைகள் கூட இந்த கல்வி முறையின் துக்கம் என்பதை அறிந்துக்கொள்ளும் பொழுது கனக்கிறது புத்தகமும்....ஒரு பேரிடர் மேலாண்மை பற்றி கூட அறியாத மாணவர்களும், ஆசிரியர்களும் இருக்கும் இந்தியாவில் ஒரு பக்கம் கல்வி சீர்திருத்தம் , CCE முறைப்படி பாடத்திட்டங்கள் மதிப்பீடு, அமெரிக்காவின் பொறாமை, என்று தொட்டு செல்லாத விஷயங்களே இல்லை..

ஒவ்வொரு பத்தியையும் எடுத்து ஒரு விவாத மேடை அமைக்கலாம், அதை பற்றி யோசிக்கலாம், ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பலாம்..அத்தனை செறிவுள்ளதாக இருக்கும் வரிகள்..கையில் எடுத்த புத்தகத்தை மூச்சு விடாமல் வாசித்து விட்டேன்..ஆனால் புத்தக முடிவில் புத்தகத்தை முடித்துவிடும் வேகத்தில் மிக அதிக , அறிந்த தகவல்களை சுருக்கி விட்டாரோ என்று தோன்றுகிறது..

அதிக நாள் கழித்து படித்த உபயோகரமான தமிழ் புத்தகம்..அதை அறிமுகப்படுத்திய   விழியன் உமாநாத் அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்..நல்ல நட்புகள் உருவாக நல்ல புத்தகங்கள் வழி செய்யும்..இனி என்னுடைய  பரிசு பொருள் பட்டியலில் இந்த புத்தகமும் கண்டிப்பாக இடம் பெறும்...அடுத்து எந்த பெற்றோருக்கு வழங்குவது என்று யோசிக்க துவங்கி விட்டேன். இது ஆசிரியரின் ஆய்வுக்கும், உழைப்புக்கும், அறிவுக்கும் கிடைத்த வெற்றி,,

நல்ல புத்தகம் என்பது முடிவை தேடாமல் நிறைய கேள்விகளை நம்முள் உருவாக்க வேண்டும்..இரண்டு நாளாவது அதை அசை போட வேண்டும்..இன்னொரு வாசிப்பை கையில் எடுக்க விடாதவாறு அதை பற்றி பகிர ஆசைப்பட வைக்க வேண்டும்.அதை செய்ய வைத்து இருக்கிறது ..

"இது யாருடைய வகுப்பறை"

விரைவில் குழந்தைகளுக்கு வசப்படும் இந்தியாவிலும் வகுப்பறைகள்..நம்பிக்கையுடன்..



1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
புத்தகத்தை பற்றி சொல்லும் போது படிக்க வேண்டும் என்ற வெகுளி. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-