Wednesday, April 3, 2013

இண்டர்நேஷனல் பள்ளி, பாடத்திட்டம்.


இண்டர்நேஷனல் பள்ளிகளும் பாடத்திட்டமும்.

இப்போது எங்கு பார்த்தாலும் பள்ளிகள் காளான்கள் போல முளைத்து கொண்டு இருக்கின்றன..ஊருக்கு வெளியே கொஞ்சம் இடமும் ஒரு கட்டிடமும் கட்டி விட்டால் உடனே போர்ட் மாட்டி, பத்து பஸ் விட்டு இண்டர்நேஷனல் பள்ளி என்று விளம்பரம் செய்து தேவைபட்டால் ஒரு ஸ்விம்மிங் பூல் கட்டிவிட்டால் போதும்.

ஆனால் உண்மையிலேயே இண்டர்நேஷனல் பாடமுறை என்பது வேறு,இந்திய பாடமுறை வேறு..அதை பற்றிய அறிமுகமாக இந்த கட்டுரை. இன்று என் தோழி வழியில் பார்த்து இருக்கார் நேஷனல் பப்ளிக் இண்டர்நேஷனல் ஸ்கூல் என்று ஒரு பள்ளியை..பள்ளிகூட பெயர் கூட இப்படி வைக்கும் பொழுது அங்கு படிக்கும் மாணவர்கள் நிலைமை .என்னமோ நடக்குது இந்தியாவில்..

இண்டர்நேஷனல் பாடமுறையில் இந்தியாவில் அங்கீகரிக்கபட்ட முக்கியமான பாடத்திட்டம் IGCSE என்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் நடத்தும் பாடதிட்டமாகும். நம் பாடத்திட்ட முறையில் இருந்து மிக வேறுபட்ட முறையாகும்.அதை சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் அதற்கென முறையான சான்றிதழ்கள் பெற்று இருக்க வேண்டும்.அதற்கும் அவர்களே பயிற்சி கொடுகிறார்கள்.நிறைய இண்டர்நேஷனல் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சிகளும் நடைபெறுகின்றன.முக்கியமாக ஆசிரியர்களாக இருந்தவர்கள் இந்த பயிற்சி பெற்று இண்டர்நேஷனல் பள்ளிகளில் பணிபுரியலாம்.

உண்மையான இண்டர்நேஷனல் பள்ளி என்பது வெறும் பாடதிட்டதோடு மட்டும் சம்பந்தபட்டது அல்ல..அங்கு வரும் மாணவர்களும் அனைத்துலக அதாவது வெளிநாடு மாணவர்கள் விகிதத்தை சரியாக கடைபிடிக்கவேண்டும்.சில பள்ளிக்களில் வெறும் இந்திய மாணவர்கள் மட்டும் பயிலலாம்..ஆனால் அனைத்து விதமான கலாசாரம்,மாணவர்களை பற்றி அறிந்துகொண்டு கற்க அந்த விகிதமும் முக்கியம்.

IGCSE எனும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் ..

IGCSE என்பது மிக அருமையான பாடத்திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை..நான் இதில் உயர் பள்ளிகூட பாடத்திட்டத்தை பற்றி எழுதலாம் என்று பார்க்கறேன் ஏன் என்றால் ஐந்தாவது வரை எல்லா பாடத்திட்டங்களும் சற்றேறகுறைய ஒன்றுதான்..ஆனால் சொல்லிக்கொடுக்கபடும் முறையில் மட்டுமே குழந்தைகள் வதைக்கப்படுகிறாகள்..எளிதாக கற்றுகொடுக்கும் வழிகளை விட்டுவிட்டு ஏன் அதிக வீட்டுபாடம் ஒண்ணாவதில் இருந்தே ..புரியவில்லை..அதிக மொழிபாடங்கள்,ஸ்பெஷல் விளையாட்டு, கலை இத்யாதி வகுப்புகள் என்று எக்கச்சக்கம். இந்த பெற்றோர்களையும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சில சமயம் எனக்கு தோன்றுவது உண்டு.

இந்த பாடத்திட்டம் ஐந்தில் இருந்து பதினோரு வயது வரை ப்ரைமரி என்றும் பதினொன்றில் இருந்து பதினாலு வரை கேம்ப்ரிட்ஜ் செக் பாயின்ட் என்றும்..நம் எட்டாம் வகுப்பு போல..பிறகு ஒன்பது பத்து சேர்ந்து இரு வருடங்கள் IGCSE என்றும் அழைக்க படுகிறது.இது நம் நாட்டின் பத்தாம் வகுப்பு முறைக்கு ஒப்பானது.பிறகு கேம்ப்ரிட்ஜ் அட்வான்ஸ் AS level,A level அது நம் பன்னிரெண்டாம் வகுப்புக்கு ஒப்பானது.இது உலகம் முழுதும் பல நாடுகளில் அங்கீகரிக்கபட்ட படிப்பு. இதன் மூலம் வாங்கும் ஆங்கில மொழி சான்றிதழ் சில நாடுகளில் எற்றுகொள்ளபடுகிறது.

நிறைகள் :

மிக அருமையான பாடத்திட்டங்கள்.

சிறு வயதில் இருந்தே கணினி பாடத்திட்டம்.

அதிக சுமையற்ற பாடங்கள்.

சிந்திக்க வைக்கும் கல்வி முறை.முழுக்க அப்ளிகேஷன் முறையில் அமைந்து உள்ள பாடத்திட்டங்கள்.

மனப்பாட முறை கிடையாது.

இரண்டாம் மொழியில் பேசவும் கற்று கொடுப்பது சிறப்பு.

அதிகம் செய்முறைகள் மூலம் கற்றுகொடுப்பது.

தேர்வுமுறைகள் எளிதாக இருப்பது.

A முதல் G வரை உள்ள க்ரேடுகள்.மதிப்பெண்கள ஏற்றவாறு கொடுக்கபடும் க்ரேடுகள்.

core curriculum and extended curriculum என்ற இருமுறைகள் உள்ளன..இதில் நன்கு படிக்கும் மாணவர்கள் extended curriculum முறையையும் மற்றவர்கள் வெறும் core curriculum மட்டும் எடுத்தால் போதும்.

விருப்பபாடங்கள் மிக அதிகம்.இப்போது சில குழந்தைகள் சில பாடங்களில் விருப்ப குறைவாக இருப்பார். CBSE, மாநில பாடத்திட்டங்களில் விருப்ப பாடம் கிடையாது.அவர்கள் ஐந்து அல்லது ஆறு பாடங்கள் படித்து பாஸ் செய்ய வேண்டும். வரலாறு படிக்க விரும்பாத அல்லது உயிரியல் பாடம் மேல் விருப்பம் இல்லாதவர்கள் இருக்கலாம். ஆனால் அதை படித்தால்தான் பத்தாம் வகுப்பு முடித்ததாய் கருதபடுவர், ஏன் கணக்கு வராத மாணவருக்கு எதுவுமே வராது என்று அர்த்தம் இல்லை. ஆனால் இங்கு விருப்ப பாடங்கள் தேர்வு செய்யும் முறையால் அனைத்து விதமான மாணவர்களும் பிடித்ததை படித்து மதிப்பெண்கள் ஈட்ட முடியும்.இது நம் கல்வி துறையில் மாற வேண்டிய விஷயம்.

தனித்தேர்வு அனுமதி உண்டு.வருடத்திற்கு இருமுறை தேர்வு மே மற்றும் நவம்பர்.

உலக அளவில் பாடத்திட்டங்கள்..அதாவது வெறும் இந்திய வரலாறு,புவியியல் என்று இல்லாமல் உலக அளவில் எடுத்து சொல்வது.

மேம்படுத்தபட்ட ஆங்கில பாடம்.

குறைகள்.

சில இடங்களில் சரியான கட்டமைப்பு இல்லாத பள்ளிகள், ஏனென்றால் இந்த முறையில் செய்முறை பாடங்கள் மிக அதிகம்..அதனால் சரியான மாணவர் ஆசிரியர் விகிதம்,கட்டமைப்புகள் மிக முக்கியம்.

தேர்வுகள் மே மாதமும் ரிசல்ட் ஆகஸ்ட் மாதமும் வருவதால்..பள்ளிகளின் சேர்க்கை முடியும் காலம்..ஆனால் நிறைய பள்ளிகள் இப்போது எற்றுகொள்கிறார்கள். ஆனால் கல்லூரிகள் சேர்க்கை முடியும் அபாயம்.

இந்திய பாடத்திட்ட முறைக்கு மாறும்பொழுது மாணவர்கள் சமாளிக்க சிறிது காலம் ஆகும்.

அதீத பள்ளிகட்டணம். எனக்கு தெரிந்து வருடத்திற்கு இரண்டில் இருந்து எட்டு லட்சம் வரை பள்ளி கட்டணம்.

பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும், திரும்ப போக வாய்ப்பு இருப்பவர்களும், வசதி அதிகம் இருப்பவர்களும் முதலில் நாடுவது இண்டர்நேஷனல் பள்ளிகள்தான். போர்ட் இருப்பதால் மட்டுமே அந்த பள்ளி இண்டர்நேஷனல் பள்ளி ஆகிவிடாது.

பள்ளியின் தரம், மாணவர்கள் விகிதம், (எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் ஆறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ) வெளிநாட்டு மாணவர்களுடன் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்து பழக வாய்ப்பும் கலாச்சார பகிர்தலும், சிறந்த கட்டமைப்பு..பாடதிட்டமுறை பெரும்பாலும் IGCSE அல்லது IB. எனவே இண்டர்நேஷனல் பள்ளிகளை தேர்ந்து எடுக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை.

No comments: