Tuesday, April 22, 2014

அப்பா -20

அப்பா-20.. கொஞ்சம் பெரியயயயயயய பதிவு.

இரண்டு நாள் டென்ஷன்ல அப்பா கொஞ்சம் ஒதுங்கி விட்டார்.விடுவோமா பல்லில் ஒட்டி இருக்கும் முந்தாநாள் பாக்கு போல துழாவி, துழாவி மூளையின் மூலையில் உக்கார்ந்து இருக்கும் நினைவுகளை தோண்டி எடுத்து எழுதிவிட்டுதானே மறுவேலை. அப்பாவே வந்து போதும்மா, போதும்னு ஆவி அமுதா வழியா வந்து சொல்ற வரை விடப்போறது இல்லை.

அக்கா திருமணமாகி நாலுமாதம் வயிற்றில் குழந்தையுடன். ஊட்டியில் இருந்தார்கள். வெளியே பிக்னிக் செல்வதாய் பிளான்.
அந்த முறை அக்காவை அனுப்ப மாமாக்கு கொஞ்சம் யோசனை..ஆனால் அக்காவை விட்டுட்டு நாங்கள் மைசூர் போக விருப்பம் இல்லை. அப்புறம் முடிவு செஞ்சு எல்லாரும் போகலாம்னு வேனில் கிளம்பிட்டோம். மைசூர் போய் எல்லாம் சுத்தி பார்த்தவுடன் பெங்களூர் போகனும்னு அப்பாகிட்ட சொன்னோம்.எப்போதும் உற்சாகமா கிளம்பற அப்பா அன்னிக்கு அரை மனசா போகலாம்னு சொன்னார். ஜாலியா கிளம்பிட்டோம்.

பெங்களூரு விடிகாலை போய் சேர்ந்தோம் என நினைவு..எல்லைக்கு வந்தா ஊரே வெறிச்சோடி இருக்கு..கொலை வெறியோடு கும்பல்கள் அலைந்து கொண்டு இருக்கின்றன..தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் கொளுத்தப்படுகின்றன. செல்போன்கள் இல்லாத காலம். என்ன ஆகியது என்று கேட்டால் கண்ணாடியை தட்டி ராஜீவ் காந்தியை சுட்டு கொன்னுட்டாங்க..சென்னைக்கு பக்கத்துல..எங்கயோ..(அப்பொழுது ஸ்ரீ பெரும்புதூருக்கும் சென்னைக்கும் சம்பந்தம் இல்லை..) உடனே தமிழ்நாட்டை நோக்கி கிளம்புங்க..ஜாக்கிரதை என்று சொல்லி பரபரப்பு ஆக்கினார்கள்.

வண்டியில் குழந்தைகள், நாலு மாதம் குழந்தையை சுமக்கும் குழந்தை..என்னதான் நம் குடும்பம் என்றாலும் மாமாக்கும் பதில் சொல்லும் பொறுப்பு..ஊரில் அனைவரையும் கொண்டு சேர்க்க வேண்டிய பயம் எல்லாம் சேர்ந்து கொண்டது. அப்பாவிடம் உள்ள நல்ல குணம் எதற்கும் பதறாமல் யோசிக்க ஆரம்பிப்பார்.. கோவமாக இருந்தாலும், டென்ஷனாக இருந்தாலும் செயலில் பதற்றம் இருக்காது.

வண்டி மைசூர் நோக்கி சென்றது..உடனே அப்பா கறுப்பு துணிகள் கேட்டார்..ஜாக்கெட், என் துப்பட்டா எல்லாம் இருந்தது. துப்பட்டாவை எடுத்து முன்னாடி கட்டி ஓரளவுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை மறைத்தார்..அவ்வபொழுது கூட்டம் தென்படும் இடங்களில் என்னை கறுப்பு துணியை ஆட்டிக்கொண்டே வர சொன்னார். கறுப்பு துணி இருக்கும் வண்டிகள் மீட்டிங் அல்லது அஞ்சலி செலுத்த போவதால் அதற்கு மட்டும் அனுமதி.

வழியே உணவு என்று எதுவுமே இல்லை..ஒரு பெட்டிகடையில் பிஸ்கட் கள் கிடைத்தன..காலை உணவுக்கு வழி கிடைத்தது. ஊட்டியோ காங்கிரஸ் கோட்டை..கொந்தளித்து கொண்டு இருந்தது..பல உயிர்கள், ஆம்புலன்ஸ்கள், பிரசவ அவசரங்கள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. மறியல், மறியல் மட்டுமே.. பால் இல்லை..ஒரு கிராமத்துக்கு புகுந்து மாடு கறந்து காய்ச்சி அப்பா கொடுத்தது இன்னும் மறக்க முடியவில்லை. வேனில் எப்பொழுதும் ஸ்டவ் எடுத்துக்கொண்டு போகும் வழக்கம் உண்டு.

வழியில் நாகப்பழம் தூரத்தில் பொறுக்குவதை பார்த்து வண்டியை நிறுத்தி அனுமதி கேட்டு அனைவரையும் வயிறு நிரம்ப நாகபழத்தை உண்ண செய்தார்.. எல்லா மெயின் ரோடுகளும் மறியலில் இருந்தன. ஒவ்வொரு கிராமமாக புகுந்து தமிழ்நாட்டு எல்லையை தொட்டால் ஊட்டி சாலை முழுக்க மரத்தை வெட்டி போட்டு இருந்தார்கள். படுபயங்கரமான பயணம். ஒத்தை எஸ்டேட் ரோடுகளில் புகுந்து, புகுந்து சென்றோம்..கிடு கிடு பள்ளம்..இதில் எதிர் பக்கம் வண்டி வந்து ரிவர்ஸ் வேற..இறங்கிடுவோம் என்று நினைக்கும் அளவுக்கு பட படப்பு..இறங்கி தங்கினால் நிலைமை சரியாக கியாரண்டி இல்லை..உணவும் இல்லை..போய் ஆக வேண்டிய கட்டாயம். எப்படியோ வந்து சேர்ந்தோம்.

அப்பா அக்காவை வீட்டில் விட்டுவிட்டு கலங்கி விட்டார்கள். மிக பெரிய ரிஸ்க் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். சின்ன வயசு ஆதலால் எனக்கு சாகச பயணம் சென்றது போல இருந்தது..இப்ப நினைத்து பார்த்தால் அப்பாவின் பொறுப்பும், ரிஸ்க் ம் நடுக்கத்தை தருகிறது.

ராஜீவ் காந்தி கொலை பற்றிய செய்திகள் வரும் நேரங்களில் பெட்ரோல் கேன்களுடன் அலைந்தவ்ர்களும், நாங்கள் உயிர் பிழைத்து ஊருக்கு வந்து சேர்ந்ததும்தான் நினைவுக்கு வருகிறது..நாங்கள் தப்பினோம் அப்பாவால்..எத்தனை பேர் எங்கெங்கோ..ஒரு உயிருக்காக..

வாழ்க இந்தியா..வாழ்க மறியல்கள்..

1 comment:

மாறன் said...

உண்மையிலே மிகுந்த நெகிழ்ச்சியாக இருக்கிறது அப்பா 1 முதல் 20 வரையிலான கட்டுரைகளை படிப்பதற்கு.. அவ்வளவு அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் திடுதிப்பென்று வெல்லுமா நேசம் என்று எழுதி முடித்தது வருத்தமாக இருக்கிறது. உங்கள் வலைப்பூவில் படிப்புக்கான கட்டுரைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆகச்சிறந்த கட்டுரைகள் இந்த அப்பா 1 முதல் 20 வரையிலான கட்டுரைகள் மட்டும்தான். இப்போது மட்டுமல்ல இனிவரும் காலங்களில் இதுதான் சிறந்தவையாக இருக்கும் என்றே நம்புகிறேன். பாராட்டுக்கள் மேடம்