Tuesday, April 22, 2014

அப்பா-13

அப்பா-13. 

நான் நான் அஞ்சாப்பு, அக்கா ஒன்பதாப்பு ...அப்படி என்றே நினைவு...அந்த நாள் வரை விடுமுறை நாட்களில் வயலில் வேலை இருந்தால் அப்பாக்கு இருவரும் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவோம். 

வீட்டில் என்னை தவிர அனைவருக்கும் முடி மிக நீளமாய் இருக்கும்..எனக்கு சுருட்டை.. சாப்பாடு கொடுத்துவிட்டு போர்செட்டில் குளிப்பது வழக்கம்.

அழகான பச்சை கம்பளம்..ஓரமாய் போர்செட்..தண்ணீர் பீச்சி கொண்டு கொட்டும் போர் ரூம் உள்ளே எலெக்ட்ரிக் மோட்டர் வச்ச போர் தண்ணி குழாய். அவசரத்துக்கு அதிக தண்ணீர் வேண்டி வெளியே வைத்த டீசல் போர் செட். அது தள்ளிக்கொண்டு போகலாம். கருப்பா புகை வரும் அதில்.

இரண்டும் நீரை பாய்ச்சி கொண்டு இருக்கிறது. மிக வேகமாக..அப்பாக்கு உணவு கொடுத்துட்டு அக்காவும், நானும் போர் பாயும் இடத்தில் இறங்கி செம குளியல் போட்டுட்டு, போர் ரூமில் உடை மாற்றிவிட்டு வெளியே வந்தோம். கொஞ்ச நீள பதிவுதான் இது.

போர் ரூம் சுற்றி குழந்தை கால் வைக்கும் அளவுக்கு இடம்..அதில் நடப்பது எனக்கு பிடிக்கும். டீசல் போர் செட்டில் வெந்நீர் சின்ன குழாய் மூலம் வரும்.அது மிக வேடிக்கையாக இருக்கும். அக்கா நீள முடியை உலர்த்திக்கொண்டே போய் அப்பாக்கிட்ட போயிட்டு வரேன்னு சொல்லு..என்று சொல்ல..நான் விளையாட்டாக அந்த போர் ரூமை சுற்றி இருக்கும் விளிம்பில் சுவற்றை பல்லி போல பிடித்துக்கொண்டே போனேன். பத்து நிமிஷம் ஆச்சு போர் ரூமின் பின்பக்கம் வர..விளிம்பில் நடந்துக்கொண்டே இருக்கும் பொழுது அப்பா, அத்தான், ஆட்கள் என்னை நோக்கி கத்துவது காதில் விழுந்தது.

என்ன என்று என்னால் குதிக்க முடியவில்லை..அப்படியே பல்லி போல சுவற்றை ஒட்டிக்கொண்டு போவதற்குள் அத்தனை பேரும் ஓடிப்போனார்கள்..கிட்டக்க போய் பார்த்தால் போரிலிருந்து நீர் கொட்டும் குளம் ரத்தமாகி இருந்தது..அக்கா டீசல் போர் வீல் மேல் படுத்து இருந்தாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை..நீரில் ஒரு பூபந்து போல தலைமுடியின் பந்து ரத்தத்தோடு மிதந்து சென்றது இன்று வரை கண் முன்னால். அப்பாக்கு ரத்தத்தை அதுவும் தன் பெண்ணின் ரத்தத்தை பார்த்தவுடன் ஆறடி உடம்பு , எதற்கும் கலங்காத,ஊரில் பிரச்சனை என்றால் ஒற்றை ஆளாக போய் நிற்கும் அப்பா, திருடனை நடுராத்திரியில் துரத்தி பிடிக்கும் வீரமுள்ள அப்பா, கண் கலங்கி மயக்கத்துடன் கீழே மடங்கி விழுந்ததை பார்த்தேன்.

உடனே அத்தான் பைக் எடுத்துக்கொண்டு பின்னாடி வேலையாளை ஏற்றி அக்காவை மடியில் போட்டுக்கொண்டு பக்கத்து ஊர் மருத்துவமனைக்கு சென்றார்கள். பயங்கரமாக கலங்கிவிட்டார் அப்பா. அதற்குள் ஊர் முழுக்க செய்தி பரவி அப்பாவை கூட்டிக்கொண்டு போக பைக் வந்துவிட்டது.

நான் வீட்டுக்கு போகிறேன்பா என்று சொல்லிவிட்டேன். அம்மாக்கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அப்பொழுது அக்காவின் காது மடலின் ஒரு துண்டு விழுந்து இருந்ததை ஒரு கவரில் எடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அப்பா மிகவும் உடைந்து இருந்தார்.

அங்கு இருந்து கார் பிடித்து பக்கத்து டவுனுக்கு ஆபரேஷன் செய்ய கூடிக்கொண்டு போனார்கள். அதன் நடுவே அம்மாவை வீட்டில் வேலை செய்யும் பையன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மிதிக்க முடியாமல் மிதித்து கொண்டு வருகிறான். நான் மட்டும் தனியே வீட்டுக்கு செல்கிறேன்.

அக்கா நான் சென்றவுடன் தாகத்துக்கு வெந்நீர குடிக்கலாம் என்று அந்த டீசல் போர் மெஷின் அருகே குனிந்து இருக்கிறாள்...நீள முடி பறந்து சுற்றும் சக்கரத்தில் மாட்டி அவள் மயக்கம் போட்டு விழுந்து முடியின் அடர்த்தியினால் அவ்வளவு பெரிய போர் இன்ஜின் நின்று அதன் மேல அவள் படுத்து இருந்தாள். அவள் அன்று தப்பித்ததை இதை என்ன செயல் என்று சொல்வது? ..கடவுள் புண்ணியம் என்றுதான் அம்மா சொன்னார்கள்.

ஒரே நாள் வீடு தலைகீழாக மாறியது.அம்மா, அப்பா யாரும் வீட்டில் இல்லை. என்னை பாட்டி வீட்டில் விட்டதாக நினைவு..உடனே ஆபெரேஷன்,இருவது நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரி வாசம், அந்த சமயத்தில் கண்ணாடி காட்டாமல் வைத்து இருந்தார்களாம்..பெற்றோரின் வேதனைகளை சம்பவமாக உணர்ந்த தருணம் அது..அக்காக்காக பல வேண்டுதல்கள்.பல இடங்கள் புனித பயணம்.

திருப்பதியில் முடி இறக்க வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு அக்காவின் முடி கொடுக்கப்பட்டது.. திடீர் என்று என் தோளை யாரோ ஆந்திராவாளா முடி இறக்கியவர் தொட்டார். என்ன புரியலியா என்று கேட்க..அது அப்பா..மீசை, தலைமுடி எதுவுமில்லாமல்..

ஏன்பா ,உனக்கு வேண்டுதல் இல்லையே..என்று கேட்க இந்த வயதில் என் பெண்ணுக்கு முடி இல்லை..அது எனக்கும் தேவை இல்ல..என்று சொன்னது அவரின் தியாகம், பாசம், அன்பு ஒரு குடும்பம் என்றால் குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக திகழ்ந்ததை எப்படி மறக்க முடியும்.

அன்றில் இருந்து அக்காக்கு முடி வளரும் வரை எத்தனையோ தொப்பிகள்..எங்கு போனாலும் தேடி, தேடி வாங்குவார்..அவளுக்கு முடி இல்லாத வருத்தம் எந்த வயதிலும் வந்து விடக்கூடாது என்று கவனமாக இருப்பார். இங்கிலாந்து இளவரசி போல அக்காவும் அந்த தொப்பிகளோடு மிக ஸ்டைலகா இருப்பதை பார்த்து சின்ன பொறாமை வந்தது தனி கதை.

அந்த ஆஸ்ப்பதிரியில் பக்கத்து பெட் பெண்ணும் அடிபட்டு மாவுகட்டோடு இருந்தார். ஹை ஹீல்ஸ் வழுக்கிவிட்டதாம். அன்றில் இருந்து ஹை ஹீல்ஸ் எங்களை போட விடவில்லை.

ஒரு நாள் நினைவு கூறலின் பொழுது எனக்கு புத்திர சோகம் வந்துவிடக்கூடாது கடவுளே என்றுதான் நினைத்தேன் அந்த வேளையில் என்றார்....கண்கலங்கியபடி..

No comments: