Tuesday, April 22, 2014

நானும், தோழியும்

நானும், தோழியும்..

ரொம்ப நாளாக எழுத நினைத்த 
மனதில் சுமந்த கட்டுரை..தள்ளிக்கொண்டே போகிறது.
ஒவ்வொரு முறை படிக்கும் வேளையிலும் ஒவ்வொரு விதமான கட்டுரை மனதில் பொங்குவதும்
அப்படியே வேறு வேலைகளின் காரணமாய் அச் சூடு தணிந்து அமுங்கிப் போவதும் வழக்கமே.
இன்று எழுத யோசிக்கவில்லை..உடனே எழுதிவிட்டேன்
மனதில் படுவதை மட்டுமே எழுதுவது என் வழக்கம்..அபப்டித்தான் இப்பவும் எழுதி இருக்கேன்.
மேலும் மனசை அலங்காரமான சொற்களால் கோர்க்க கை வருவது இல்லை..ஏனெனில் நாம மனதோடு பேசும் இனம்.

எப்போதுமே பெண்கள் பத்திரிக்கை பற்றி மிகபெரிய அபிப்ராயம் கிடையாது..காரணம்..
பெண்களுக்கு ஏன் தனி பத்திரிக்கை என்றுதான்..
ஆண்களுக்கு என அதிகம் தனி பத்திரிகைகள் இல்லை..
அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கான பத்திரிகைகள் ஆங்கிலத்திலோ , தமிழிலோ உள்ளே அழகும், சமையலும் போட்டி போட்டுகொண்டு இருக்கும்.
அதனால் கொஞ்சம் புரட்டுவதோடும் சில கட்டுரைகள் மேம்போக்காக பார்ப்பதோடும் சரி.

எல்லா பெண்கள் பத்திரிக்கைகளும் ஒரு பேட்டர்ன் இருப்பது போல தோன்றும்.ஒரு பேட்டி, ஒரு பாசிடிவ் முடிவு யூகிக்க கூடிய கதை, ஒரு மெகா சீரியல் குடும்ப தொடர், சில கட்டுரைகள், போட்டி, சமையல், அழகு குறிப்புகள்..இவ்வளவுதான்.

இப்ப இந்தியாவில் உள்ள எந்த மாலுக்குள் போனாலும் என்னால் எளிதாக வழி கண்டுபிடிக்க முடியும்.
அவர்களின் ஸ்டைல் அத்துபடி..ஒரு மேக்ஸ், பெண்டலூன், சூப்பர் மார்கட், லைப் ஸ்டைல்..தூள் துப்பட்டி கடைகள்..மேலே உணவு கோர்ட் இன்னும் மேலே சினிமா..மற்றும் விளையாட்டு இடங்கள்..இரண்டு அல்லது மூன்று தளங்கள் கார் பார்க்கிங்கள்..கொஞ்சம் லேசாக முன்ன பின்ன ..அவ்வளவுதான்..
அது போல பெண்கள் பத்திரிக்கை அமைப்பும் எந்த மொழியில், எந்த ஊரில் இருந்து வந்தாலும் கொஞ்சம் அப்படி இப்படி மாறி உள்ளே இருக்குமே ஒழிய உள்ளே உள்ள விஷயங்கள் அநேகமாய் அதேதான்

மால்களில் புது பொருள்கள் விற்றாலும் மால் அமைப்பில் மாற்றம் இல்லாததால் கொஞ்ச நாளில் அலுத்தும் போகிறது..
முதன் முதலில் குங்குமம் தோழியைப் படித்த பொழுது உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அதிகம் கவரவில்லை..ஆனால் நாள் ஆக நாள் ஆக கொஞ்சம் கொஞ்சமாக படிக்க ஆரம்பித்தேன். மாலை(mall) கொஞ்சம் இடித்து செப்பனிட ஆரம்பித்து இருப்பது சந்தோஷமே..

பேஸ்புக் கில் எழுதும் அருமையான எழுத்துகளின் சொந்தக்காரர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்
அதுவும் அவை அனைத்தும் மிக தரமான இலக்கியமும், ஜன ரஞ்சகமும் சார்ந்த கட்டுரைகள்..
பொது அறிவை வளர்ப்பதுவும் புது புது துறைகளை அறிமுகப்படுத்துவதும்..
உணவுக்கான தொழில் முறை போட்டோகிராபி போன்ற புது துறைகளில் சாதிக்கும் பெண்களைப் பேட்டி எடுத்து எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கு என்று அறிமுகப்படுத்துவதும்.செய்கிறார்கள்..

.கூடவே சாதனைப் பெண்மணிகள் ,வரலாற்றுப் பெண்மணிகள் பற்றிய சஹானா கட்டுரை, தமிழினி, வைதேகி அவர்களின் அழகான கட்டுரைகள்..மகிழ்ச்சி என்பது யாதெனில் அப்புறம், ..தோழிகளின் ஒரு வரி பேட்டிகள்..இப்படியாக ஒவ்வொரு பக்கம் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.கூடவே அவர்கள் தருவது பல சாமானிய தோழிகளுக்கு தங்களது முகத்தையும் அச்சில் பார்க்கும் ஒரு சந்தோஷம்..

சமையல் என்றாலும் சமைக்கும் ஆண்கள் பற்றி எழுதுவதும், குழந்தை வளர்ப்பு பற்றி மொக்கை போடாமல் அவர்களுக்கு நல்ல தொடுகை, செக்ஸ் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைகள் வெளிவருவதும், பல தொழில்கள் அறிமுகமும், சட்டங்கள் அறிமுகமும் அட போட வைக்கிறது.

கொடுத்த காசுக்கு மேலேயே ஜோதிகா நடிகிறார் என்று கல்லூரி காலங்களில் பேசுவோம்..அது போல கொடுத்த காசுக்கு மேலேயே கன்டென்ட் கள் அதிகம்..
அவ்வளவு விஷயங்கள் இருக்கு..இன்னும் பெண்கள் பற்றியே கட்டுரைகள் இல்லாமல் பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அரசியல், இனம், பொதுஅறிவு, டெக்னாலஜி கட்டுரைகள் வந்தால் மிக சிறப்பாக இருக்கும். இனி வரும் காலங்களில் வரப்போகும் பெண்கள் பத்திரிக்கைகள் மேல் நம்பிக்கை துளிர்க்க வைக்கிறாள் தோழி

மிகுந்த ரசனையாக இருக்கு சில பக்கங்கள்..
உலகின் டாப் 50 டிரிங்க்ஸ், உலகின் பல்வேறூ டாப் டென் விஷயங்கள் உணவுகள்,சுற்றுலா இடங்கள் Etc.. என்று படத்துடன் வந்த /வரும் தொகுப்புகள் ரசிக்கத்தக்கவை..
அதைத் தவிர பல இடங்களில் வெற்றி பெண்மணிகள் கதைகள் வந்தாலும் அதை ரசனையோடு தொகுத்த விதத்தில் வித்தியாசப்படுகிறாள்..

தமிழினியின் வீடு பற்றிய தொடர்..அருமை..
ஆங்கிலத்தையும், தமிழையும் அழகாகக் கலந்து ஒரு காக்டெயில் பரிமாறுகிறாள்..
எனர்ஜெடிக் விஷயங்கள், பொருளாதாரம் , பொது அறிவு பற்றி கூறினாலும் இன்றும் பெரும் அளவில் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவிகளின் ரசனைகள், சாதனைகளையும் வெளிக்கொணரத் தவறுவது இல்லை தோழி.

முக்கியமாக நம் பேஸ்புக் தோழிகள் எழுதும் வாரத்தை ஜாலம் பகுதி இன்னும் கவர்கிறது..அநேகமாக உலகப் பெண் பத்திரிகை வரலாற்றில் மொழிக்கான முதல் பத்தி இதுதான் என நினைக்கிறேன்.. நம் தோழிகள் தீபா ராமும் அனிதா ஜெயராமும் கலக்குகிறார்கள்.. இது சிறந்த முயற்சி மட்டுமல்ல.புது முயற்சியும் கூட..
இது மட்டுமல்லாது தோழியின் மற்ற எல்ல புதிய முயற்சிகளும் அழகு.

குடும்பத் தலைவிகள் சம்பாதிக்கவில்லையே என்று சோரும் சமயத்தில் உற்சாகத் தோள் கொடுக்கும் தோழியாகவும் விளங்குகிறாள்..

பெண்கள் மட்டும் சுற்றுலா போக நிறுவனம் நடத்தும் தோழி பற்றியும் அதே சமயத்தில் சுற்றுலா போக கொஞ்சம், கொஞ்சமாக சேமிக்கும் தோழி பற்றியும் குறிப்பிட்டு வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் நமக்குக் காட்டித் தருகிறாள் தோழி...ஆக மொத்தம் சின்னச் சின்ன ரசனைகளை ஆங்காங்கே பாசிட்டிவாக தூவி கொண்டே போகிறாள் தோழி..

இந்தளவுக்கு பாராட்ட ஏதாவது காரணம் இருக்கும் இல்லையா.ஆமாம் இருக்கு..கிட்டத்தட்ட ஒரு வருடமாக எனக்குத் தோழியாக இருப்பதால் நான் அவளுடன் இன்னும் அதிக அந்யோன்யத்தை உணர்கிறேன் ..சென்ற முறை தோழி பற்றி பல பேருக்குத் தெரியாமல் இருந்தது..இப்பொழுது தமிழ்நாடு சென்ற பொழுது ஒவ்வொரு கடையிலும் முதல் வரிசையில் தோழியைப் பார்த்தபொழுது அழகிய நட்பை நல்ல நிலைமையில் பார்த்த பெருமையும் , மகிழ்ச்சியும்.
சிலரிடம் நல்லாருக்கு படிங்க என்று சொன்னபொழுது..அட, ஆமாம் என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்கள்..

மகிழ்ச்சி என்பது யாதெனில்..

யாம் பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து
அனைவரையும் மகிழ்சியாக்குதல்.

No comments: