Tuesday, April 22, 2014

அப்பா -16

அப்பா-16..

உங்கள் குழந்தையை நம்பி எந்த வயதில் பெரிய வேலையை எப்பொழுது ஒப்படைக்க ஆரம்பித்தீர்கள் ? 

இந்த கேள்வியை கேட்டால் பெரும்பாலான பதில் பதினாறு முதல் முப்பது வயது வரை கூட வரும்.

அக்கா ஆறாவது, நான் இரண்டாவது இருவரையும் கூப்பிட்டு... கற்பனை செய்துக்கொள்ளுங்கள் எண்பதின் ஆரம்பத்தில்.. அவசரமாக ஒருவரிடம் பத்தாயிரம் கொடுக்க வேண்டி இருந்தது. மாயுரம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பெரிய ரைஸ் மில்..அங்கு வேலை செய்பவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த ஊருக்கு முன்பின் இருவரும் சென்றது இல்லை..ஆனாலும் இருவருக்கும் தன்னம்பிக்கை அதிகம்..பஸ் ஏற்றி விடும் வழக்கம் எல்லாம் எங்கள் வீட்டில் என்றும் கிடையாது. இன்று மகனை பத்திரமாக பள்ளி கூட பஸ்ஸில் ஏற்றி, இறக்கும் சமயத்தில் சுதந்திரமே இல்லையே இவர்களுக்கு என்று நினைத்து கொள்வேன்.

சித்தர்காடு என்ற ஊர்...பத்தாயிரம் ரூபாய் உள்ள பை..பத்திரமாக அக்கா வைத்து இருந்தாள். நானும் அதை கவனித்துக்கொண்டே இருந்தேன். இருவருக்கும் பெரிய மனுஷிகள் போன்ற நினைப்பு. பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய கவலையும். இன்று கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு நிகரான பணம் அது...

அங்கு பஸ் இறங்கி ஒரு கடைக்கு அருகில் நிற்க சொல்லி உத்தரவு. மில்லில் இருந்து மேனேஜர் வந்து பணத்தை வாங்கி கொள்வார்.

நேரமாகியது..மில்லில் இருந்து அவர் வரவில்லை..நாங்கள் உக்கார்ந்து இருந்தது ஒரு கிளினிக் வாசலில் .அங்கு ஒரு போர்ட்..

தலைவலி- ஒரு ரூபாய்..
ஜுரம்-இரண்டு ரூபாய்..
வயிற்றுபோக்கு-மூன்று ரூபாய்.
ஊசி -இரண்டு ரூபாய்..

இதை பார்த்துவிட்டு நானும் அக்காவும், விழுந்து, விழுந்து சிரிச்சோம்..அரை மணி கழித்து அவர் வந்து பணத்தை வாங்கி கொண்டு எங்களை தட்டிகொடுத்து சமத்து குழந்தைகள் என்று சொன்னது இன்றும் மறக்கவில்லை..

வாழ்கையில் அந்த அரை மணி நேரமும்..அக்காவும், நானும் பொறுப்புடன் உக்கார்ந்து இருந்ததும், பெருமையாகஉணர்ந்ததும் அப்பா கொடுத்த பெரிய பரிசு.

அப்பாக்கு எங்களை பற்றியும், எங்களுக்கு அப்பாவை பற்றியும் பெருமை.

மனதார சந்தோஷப்பட வேண்டுமா?..மனதிற்குள் பெருமை பட வேண்டுமா? உங்கள் குழந்தைகளை நம்புங்கள்..இது போன்று இல்லாவிடினும் ஓரளவுக்காவது பொறுப்புகளை கொடுங்கள்..பிறகு உணருங்கள்..அவர்களின் தன்னம்பிக்கையையும், பொறுப்பையும்..

எந்த பொருளையும், பணத்தையும் விட பெரிய பரிசு கிடைக்கும்.

No comments: