Thursday, March 31, 2016

விகடனில்..

நன்றி  ஆனந்த  விகடன்.




உன்னை ஓர் அறையில் எட்டு மணி நேரம் அடைச்சுவெச்சு, உனக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, நான் ஏதாவது சொல்லித்தருவேன். அதை நீ படிக்கணும். சில சமயம் 
A, B, C, D-கூட எட்டு மணி நேரம் சொல்லிக்கொடுப்பேன். 

நீ அமைதியா உட்கார்ந்து படிக்கணும். முடியுமா?’ - ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகன், தன்னிடம் இப்படிக் கேட்டதாகச் சொல்கிறார் கிர்த்திகா தரன். பெங்களூரில் வசித்துவரும் இவர், தன் மகனை ஹோம் ஸ்கூலிங் முறையில் படிக்க வைத்து இன்று வெற்றிகரமாக கல்லூரிக்கு அனுப்பியிருக்கும் தாய்.

``ஆறாம் வகுப்பில் `ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்று அவன் சொன்னவுடன் வேறு என்ன வழிகள் இருக்கின்றன எனத் தேடி அலைந்தோம். மாற்றுப்பள்ளிகளில் சேர்த்துப் பார்த்தோம். அங்கேயும் சரிவரவில்லை. சலித்துப்போய் கடைசியாக நின்ற இடம்தான் ஹோம் ஸ்கூலிங். அப்போது முதல் என் மகனுக்கு வீடுதான் பள்ளி. 14 வயது ஆனவுடன் IGCSE முறையில் பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுத அவனைத் தயார்ப்படுத்தினேன்.

`யாராவது பத்தாம் வகுப்பில் ஹோம் ஸ்கூலிங் செய்வார்களா? பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு நல்ல பள்ளியில் அட்மிஷன் வாங்கிடுங்க' என்று அறிவுரை சொன்னவர்கள் பலர். ஆனால், மகன் `எக்காரணம் கொண்டும் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தான். 14 வயதில் அசாத்திய உறுதி அது. ஓர் அம்மாவாக அவனின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவன் விருப்பம் என்னவோ அதன்படியே படிக்கவைத்தேன்.

3 லட்சம் முதல் 10 லட்சம் வரை வாங்கும் இன்டர்நேஷனல் பள்ளிகள், IGCSE சிலபஸில்தான் பாடம் நடத்துகின்றன. எங்களுக்குத் தேர்வு செலவு 30 ஆயிரம் மட்டுமே. லண்டனில் இருந்து சான்றிதழ் வந்துவிடும். சாதாரண தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் சான்றிதழில் பெரிய வித்தியாசம் கிடையாது. சரியாக 16 வயதில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது முழு ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் (இரட்டை டிகிரி) இன்ஜினீயரிங் படிக்கிறான்.

இந்தியாவில் ஹோம் ஸ்கூலிங் என்றால், பலரும் பயமுறுத்துவார்கள். `எதிர்காலம் கேள்விக்குறி’ என்பார்கள். அப்படி எதுவுமே இல்லை. மிகச் சரியாகத் திட்டமிட்டால் பள்ளியில் ஒரு வருடம் சொல்லிக்கொடுப்பதை, நான்கு மாதங்களில் முடித்துவிட முடியும். அவ்வளவுதான் இருக்கிறது நம் பாடத் திட்டத்தில்’’ 

Sunday, March 27, 2016

கொண்டாட்டாட்ட்ட்டடட்ட வாழ்வு.

  கொண்டாட எத்தனையோ விஷயங்களை வாழ்வு வாரி இறைத்துக்கொண்டே செல்கிறது. கோவிலுக்கு சென்றால் ஒரு வகை கொண்டாட்டம், பயணம், இசை நிகழ்ச்சி, தனிமை, மலை, இயற்கை, மழை, புது உடை, ஷாப்பிங், நட்பூக்கள்,விளையாட்டு, புத்தகம், இணையம்  சினிமா, உணவு, ஏன் பானி பூரியில் கூட சிறு கொண்டாடத்தை மறைத்தே வைத்து இருக்கிறது.

ஆனால் கொண்டாடத்தை தேடுவதை விட மனம் ஏதோ ஒரு சஞ்சலத்தை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு குடும்பம் வீட்டுக்கு வந்தார்கள். ஓரளவு வீடு, வசதி உள்ள லோயர் மிடில் கிளாஸ் குடும்பம். வேலை இல்லை..சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டிய நேரம். வந்ததில் இருந்து அவர்களுக்கு வேலை கொடுத்தவர்கள் பற்றியும், கொடுக்காதவர்கள் பற்றியும் புகார் வாசித்துக் கொண்டே இருந்தனர்.. சென்ற முறை வந்தப் பொழுதே ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தேன். அப்பொழுது மிக நொந்து இருந்தார்கள். இந்த முறை தெம்பாக எல்லாரையும் திட்ட ஆரம்பித்து இருந்தனர்.

மனைவி உள்ளே வந்து என்னிடம் தனியாக எல்லாம் புலம்பியபோழுது அமைதியாக கேட்டுக் கொண்டேன். எதிலும் குறையே பார்க்காதீர்கள். ஏதோ நன்மைக்கே எல்லாம் நடக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அரிசி இல்லை என்று புலம்புவதை விட, அரிசி வேண்டும் அதற்கு என்ன வழி என்று யோசிப்பதே இந்த நேரத்தின் தேவை.

ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளதால் அவர்கள் வழியில் சொன்னேன்..நம்மை சுற்றி ஆசிர்வதிக்க தேவதைகள் சுத்திக் கொண்டே இருக்கும். அவை நாம் என்ன நினைக்கிறோம், சொல்கிறோமோ அதற்கு ஏற்ப ததாஸ்து என்று சொல்லும். அதாவது அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம். நீங்கள் நல்லது நினைத்தாலும் சரி , எதிர்மறையாக நினைத்தாலும் சரி அப்படியே ஆகும்.
நல்லது நினைக்க நினைக்க நம்மை சுற்றி நல்ல விஷயங்கள் அழகாக அமையும். ஒரு உறவு சரியாக இல்லை என்று சந்தேகம் வந்தால் முறிவதும், நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது சேர்வதும் இதனால்தான் என்று பேசிக்கொண்டே சென்றேன்.

அவரும் மனம் கொஞ்சம் இளகி ஆர்வமாக இன்னும் சொல்ல சொன்னதால், குறை மட்டும் பேசவே பேசாதீர்கள்...முதலில் குறை சொல்லுவது உங்களுக்கு வேண்டாதவர்களுக்கு கேட்க போவதில்லை, அதனால் நன்மை இல்லை அப்படி கேட்டாலும் இன்னும் பகைமை வளரும் அதுவும் நல்லதில்லை. எனவே குறை சொல்லுவது எப்பவும் நல்லதில்லை. ரொம்ப புலம்ப வேண்டுமென்றால் மிக மிக நெருக்கமாக இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு மனதை அத்துடன் கழுவிவிட்டு வெளியே வர வேண்டும். கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்தால் சரியாகிவிடும் என்றேன்.

நமக்கு வேண்டியவர்களை குறை சொல்லுவது மிக தவறுதானே என்றார்.. ஆமாம் ..அது உறவை குலைக்கும் செயல், ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும் அதை முடிந்தவரை அப்படியே ஏற்றுக்கொள்வது, அல்லது எனக்கு பிடிக்கவில்லை என்பதை அழகாக எடுத்து சொல்வது தீர்வாக அமையுமே தவிர குறை பேசிக்கொண்டே இருந்தால் மன அமைதி போய் சிக்கலாகத்தான் முடியும் என்றேன். உடனே சத்தமாக இங்கே சீக்கிரம் உள்ளே வாங்க என்றார்..இங்க பாருங்க கீர்த்தி எவ்ளோ அழகா ஒரு விஷயம் சொல்லிருக்கா...யாரையும் குறை பேசவே கூடாதும், பேசினால் ததாஸ்து தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லுமாம், காலையில் இருந்து என்னை திட்டிக்கொண்டே இருக்கறீங்க, என்னை பற்றி ஏதாவது புகார், அது வரல இது வரல என்று மட்டம் வேறு தட்டறீங்க, அதாவது பராவாயில்லை நான்  என்ன செய்தாலும் உங்களுக்கு ஒரே குறை என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
எனக்கு பயங்கரமாக தலை சுத்தத் தொடங்கியது. 

சிறு மகாபாரத தொனி இருவரிடமும் எழ ஆரம்பித்து இருந்தது. என்றைக்காவது குரு  ஷேத்திரம் நம்ம வீட்டிலும் உண்டு. ஒவ்வொரு விஷயத்தையும் குருஷேத்திரம் ஆக்கும் கலையில் இருவரும் வித்தகராக இருந்தனர். உங்களிடம் பேசினால் நன்றாக இருக்கு என்று அவர்கள் சொல்லுவதை நம்பி நாம் பேசி விடக் கூடாது. அவர்களிடம் பேசினால் நாம் அடுத்து நன்றாக இருப்போமா என்று யோசிக்க வேண்டும் என்று புரிந்ததது.  என்ன செய்வது..முடிந்தவரை  இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று இன்னொரு மனமும் எனக்குள் சண்டையிட தொடங்கின.

இப்படி கொண்டாடங்களை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை கூட  பிரச்னையாக எடுத்துக் கொள்வது பலருக்கு கை வந்தக் கலையாக இருக்கின்றன.

யாருக்குதான் பிரச்னை இல்லை. எங்குதான் வருத்தம் இல்லை,  சோகம் இல்லை. எங்கோ இருப்பதை தோண்டிக் எடுத்துக்கொண்டு மனதில் சுமக்கும் பொழுது கண்ணுக்கு எதிரில் வாழ்வு தட்டில் ஏந்திக் கொண்டு இருக்கும் கொண்டாட்டங்கள் மறந்துப் போகிறது.

சமீபத்தில் வாசித்ததில்  மனதில் பதிந்த பகுதி  மனம் விட்டு, சுற்றம் மறந்து நடனம் ஆடுவதைப் பற்றியது. இங்கு எங்கள் பகுதியில் உள்ள வட இந்தியர்களுக்கு எல்லாவற்றிலும் நடனம் இருக்க வேண்டும். ஆண்களோ, பெண்களோ தன்னை மறந்து ஆடுவார்கள். தனக்கு என்ன தெரியும் என்பதுப் பற்றி பிரச்னையில்லை. நம்மை கவனிப்பவர்கள், கேலி செய்பவர்கள் பற்றி கவலைப்படாமல் ஆடுவதும், நடனம் என்று ஆடாமல் கை காலை நடனம் என்று நினைத்து அசைத்து சுற்றம் மறந்து ஆடுவதும் நடக்கும்.

இதில் குழந்தைகள் முதல் எழுவது வயது வரை விதி விலக்கிலை. எப்படி கெட்ட விஷயங்கள் தொற்று நோயாக இருக்கிறதோ அதுப் போல நல்ல விஷயங்களுக்கும் உண்டு. இவர்களைப் பார்த்து பார்த்து நாமும் வாழ்வை அவ்வபொழுது கொண்டாட கற்றுக் கொள்ளலாம். எங்குமே ஆடி பழகி இல்லாதவர்கள் கூட எங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு கொண்டாடத்திற்கு வந்தால் மனமகிழ ஆடிவிட்டுப் போவார்கள்
இதற்காகவே நான் நண்பர்களுக்கு அழைப்பு விடுவது உண்டு. ஆனால் என் பார்வையில் தென்ன்னிந்தியாவை பொறுத்தவரை எந்த விழா நடத்தினாலும் நேர்த்தி. திட்டமிடல் என்பதில் கவனம் செலுத்துவோம். அதில் கொண்டாட்டம பின் தள்ளபட்டு எதற்காக செய்கிறோம் என்று மறந்து மிக சின்சியராக விழா செய்வோம்.

ஒவ்வொரு விழாவும் கொண்டாடவே என்ன்னும் அடி நாதத்தை புரிந்துக் கொள்ளும் பொழுது மகிழ்ச்சி பீரிட்டு வரும். விழா  என்பது மனமகிழ்வுக்கே என்ற அடி நாதத்தை அங்கே அங்கே தொலைத்துக் கொண்டு இது எங்கள் வீட்டு பழக்கம், இது இந்த ஊர் வழக்கம் இதெல்லாம் மிக சரியா நடக்கணும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறோம். அதில் ஒரு இறுக்கம் வந்துவிடுகிறது.

சக மனிதர்களிடம் தளர்வாக இல்லாமல் இறுகும் எந்த இருப்புமே சரியாக வராது. அப்படி இருக்கும் பொழுது கொண்டாட்டத்தில் வரும் இறுக்கங்கள் அதன் தன்மையே மாற்றி விடும் இங்கு நடக்கும் புத்தாண்டு, ஹோலி, கணேசா, நவராத்திரி போன்ற நடன கொண்டாட்டங்கள் தவிர்த்து புதிது புதிதாக செய்வார்கள்.

ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து விட்டு பூமி நேரம் கொண்டாடியப்பொழுது மெல்லிய வெளிச்சத்தில் பாட்டும், அந்தாக்ஷரியும் குதூகலப்படுத்தின.

வேலேண்டைன்ஸ் டேயின் பொழுது எல்லாரும் சிவப்பு சட்டை போட்டுகொண்டு மிக சின்சியராக மாரத்தான் நடத்தினோம். ஹோலிகா தகனம் அன்று நெருப்பை வைத்து நடன காட்சி. குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் கோடை கொண்டாட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.



நம் வாழ்வை நம் விளையாட்டுகளை குழந்தைகளுக்கு நாம் கொடுக்க முடியா நகர சூழல். ஆனால் இந்த சூழலில் அவர்கள் கொண்டாட எத்தனையோ இருக்கு. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கியும், அனுமதிக்கவும் செய்யம் பொழுது நம்மைப் போல ஒரூ அழகிய இளம்பிராயம் அவர்களுக்கும் கிடைக்கும். நாமும் நம்மை மீட்டு எடுக்கலாம்.


ஒரு ஹோலி போட்டோ போட இத்தனைப் பெரிய பதிவா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் லைக்ஸ், கமெண்ட்ஸ் பற்றிய கொண்ட்டாட்ட  புன்னகை மட்டுமே மிச்சம் இருக்கிறது. 

Monday, March 21, 2016

ஒரே ஒரு நிறைய ஊரிலே..

உலக கதை சொல்லல் தினம்.

தாய், தந்தை பிறக்கும் பொழுதே கதை சொல்லிகள் பிறந்து விடுகிறார்கள். டி.வி பிறக்கும் முன்பு பிறந்து விட்டதால் கதைகளுக்கு நடுவே வாழ்ந்தவள். ஒரு கொள்ளு பாட்டி விளையாட்டுகளில் எக்ஸ்பர்ட்..சொன்ன இடத்தில சோழி விழும், உருட்டிய இடத்தில தாயம் நிற்கும். இன்னொரு பெரிய பாட்டியோ கதைகள். அவர் சொன்ன கதைகள் கற்பனையை மிக அதிகம் தூண்டுபவை.

ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களால் வார்த்து,வளர்த்து எடுக்கப்படுகிறார்கள். கதை சொல்லல் மேல் இன்னும் ஆர்வம் வந்ததிற்கு காரணம் விழியன் என்றால் கதை சொல்லும் நிகழ்வு என்று பெங்களூரில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பிரபு பாராட்டுக்குரியவர்.

மிக முக்கிய வேலை கொடுத்த தரன், மறுநாள் தேர்வு, வாசலில் ஒஜுவை விளையாட கூப்பிட வந்தசிறுவர் குழாம், 25 கி.மி தூரம் எல்லாவற்றையும் சமாளிக்க முடிந்த என்னால் மனமுருகி கேட்டுக்கொண்டிருந்த SBB யின் இளைய நிலாதாவைத்தான் சமாளிக்க முடியவில்லை. நட்புகள் வேறு ஸ்டேடஸ்களாக போட்டு இந்த மாலையை மிஸ் பண்ணிட கூடாது என்கிற அளவுக்கு மனதை இலகுவாக்கி வைத்தார்கள்.

எப்படியோ திடப்படுத்தி ஒஜுவை அவன் குழாமில் இருந்து பிரித்து அந்த ஏரியா பெயர் புதிதாக இருந்ததால் கூகிள் மேப் ல் தடவி தடவி எனக்கு மிக பரிச்சியமான சாலையில் சென்றுக் கொண்டிருந்தேன்.

முதலில் ராஜேஷ் அருமையாக ஆரம்பித்தார். மரமே இல்லாத ஊரில் விறகு வெட்டிக் கதை. நூறு வருடங்கள் பின் மரமில்லா வாழ்வை கற்பனை செய்ய தூண்டியது. அடுத்து பிரபுவின் வண்ணத்துப்பூச்சியும், எறும்பும் என்ற கி.ரா கதை மனதில் நின்றது. வரும் வழியில் ஹோர்டிங்கில் ஒரு வண்ணத்து பூச்சி பார்த்துவிட்டு ஒஜு அம்மா இதானே போய் அழுதுச்சு என்றான். நிகழ்வில் நிறைய தமிழ் வார்த்தைகள் அறிமுகம் ஆகின. முக்கியமா மொச்சைக்கொட்டை என்றால் என்ன என்று மொபைல் இமேஜ் ல பார்த்து தெரிந்துக் கொண்டனர்.







அடுத்து அ, ஆ வைத்து ஒரு விளையாட்டு. பெங்களூரை பொறுத்தவரை தமிழ் சொல்லிக்கொடுக்காமல் ஒரு தலைமுறை வளர்ந்துக் கொண்டு இருக்கிறது. இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் பொழுது தமிழ் மேல் குழந்தைகளுக்கும் அதிக ஆர்வம் வரும். அங்கும் ஃபேஸ் புக் மூலம் ஒருவருக்கு அறிமுகம ஆகிருந்தேன். இணையத்தின் இணைப்புகள் மனதில் இனிமையாக.



அடுத்து நான் எங்கள் பாட்டி சொன்ன கதை சொல்லவா என்றேன். நிஜமாக எந்த தயாரிப்பும் இல்லை. சொல்லவும் யோசனை இல்லை. ஏன் என்றால் நிகழ்வு பார்த்துவிட்டு எப்படி அதுப் போல நாமும் செய்யலாம், குழந்தைகள் தமிழ் கதைகள் மேல் எந்தளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதே நோக்கம்.

பிரபு சொல்லுங்க என்றதும் மிக பரிச்சியமான கொழுக்கட்டை கதை சொன்னேன். அதில் எண்கள், உடல் உறுப்புகள் பெயர் எல்லாம் இருக்கும். 

"அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு காது உண்டோடி,
அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு மூக்கு உண்டோடி
அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு வாயும் உண்டோடி"

என்று வரிசையாக போகும். நாயகர்களுக்கு குழந்தைகளுடன் கலந்து பெயர் வைக்கப்பட்டது. பெரிய கதை. முடிந்தளவு சுருக்கியே சொன்னேன். ஆனால் அந்த நிமிடங்கள் உலகமே மறந்து விட்டது. குழந்தைகளும் நானும் ஒரு உலகத்தில் கொழுக்கட்டைகள், ரோஜா, பிள்ளையார் என்று பயணித்தோம். திட்டமிடாமல் கூட அழகாக அமைந்தது. நான் நயன்தாரா போல ஆக்ஷன் செய்வதாக நினைத்துக் கொண்டு கலாபவன் போல செய்ததை குழந்தைகள் ரசித்து சிரித்தார்கள். இருப்பினும் கொண்டாட்டம் குறைவில்லாமல்.




அடுத்த முறை இன்னும் இதை எடுத்து செல்ல ஆர்வ விதை மனதினுள். ஒஜு வரும் பொழுது கதைகளை பற்றி பேசிக்கொண்டே வந்தான். இதே கதையை எத்தனையோ முறை தனியாக சொல்லி இருக்கேன். ஆனால் இந்த முறை இன்னும் ஆர்வமாக கேட்டு இருக்கிறான். எல்லாருடனும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கும் பொழுது குழந்தைகளின் ஆர்வம் இன்னும் கூடியே இருக்கிறது.

அடுத்து கதை கேட்க நேரமில்லாமல் ஓடி வர வேண்டியதாகி விட்டது. இருப்பினும் மனது நிகழ்வை சும்ந்தப்படியே. வீட்டுக்கு வந்தவுடன் ராஜேஷ் அவர்களின் பையன் கதைக்கு feedback கொடுத்து மனதை நெகிழ செய்து இருந்தான். அதே கதையை தெலுங்கில் சொல்லி அசத்தி இருந்தான். அந்த விடியோ பதிவில் இருக்கும் குரலின் கற்பனையும், கதையும் மிக அதிக நாள் ஒலிக்கும்.

கதை சொல்லல் வீடை தாண்டி பொதுவெளியில் வர வேண்டிய அவசியம் உணர்கிறேன். இதை இன்னும் முன்னெடுத்து செல்லல நண்பர்களோடு கை கோர்க்கும் ஆர்வம் மேலெழும்புகிறது. ஒவ்வொருவருக்கும் தனி தனியே நன்றி சொல்ல மனம் விரும்புகிறது. மிக அழகிய மாலைக்கு நன்றி.

ஒரு இளைய நிலாதான் மிஸ் செய்தேன். அங்கு இருபதுக்கும் மேல் குழந்தை நிலாக்கள் மனதில் பொழிந்துக் கொண்டே இருந்தனர். இப்பவும் அவை தளும்பிக்கொண்டே இருக்கிறது. கொழுக்கட்டை கதையை விரைவில் பகிர்கிறேன். அதும் ஒரு குட்டி நிலாவின் ஒளியில் மனம் தடுமாறித்தான் போனது. வேறென்ன வேண்டும்.