Wednesday, July 22, 2015

மன வேர்ப் பிடிக்கும் கிளைகள்.

எனக்கு இங்கு வந்தபொழுது ஒரு தடுமாற்றம்.. நீங்களும் எழுதலாம் என ஒரு சிறு நம்பிக்கை விதையை விதைத்து சென்றவர் ஈரோடு கதிர்.. நன்றிகள்.

கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எழுத்துகள் உதாரணம், எந்த எழுத்தும் நம் கற்பனையைத் தூண்டி காட்சிப்படுத்த வேண்டும். இவரின் ஒரு வார்த்தைக் கூட கண் முன் காட்சியைக் கொண்டு வந்து விடும். 

கட்டுரை என்றால் செய்திகள் இருக்கும், தகவல்கள், விவாதங்கள், நடைமுறைகள் என்றுப் போகும்..ஆனால் கட்டுரையைக் கவித்துவமாக படைப்பது இவருக்கு கை (கி போர்ட்) வந்தக் கலை.

எத்தனையோ வாசிக்கிறோம், கடக்கிறோம். ஆனால் ஒவ்வொன்றிலும் தனித்துவத்தை உணரச்செய்வது கதிரின் தமிழ்.

வாசிக்கும் நேரங்களில் ஒரு வார்த்தையில் சிக்குண்டு, அடுத்ததற்குப் பயணப்பட முடியாமல், அந்தக் காட்சியில் நின்று விடுவதுண்டு அது ஒரு அழகிய படக்காட்சியை ஸ்டில் போட்டுப் பார்ப்பதைப் போ. அதே சமயம் சில பாடல்களை ஒன்ஸ் மோர் போட்டுக் கேட்பதைப் போல... சில பாராக்கள் திரும்பத் திரும்ப படிக்கச்சொல்லும்..

இலக்கிய வாசிப்பு என்றால் அதன் தரத்திலும், வாசகனின் முதல் வாசிப்பு என்றால் அந்த எளிமையிலும் இருக்கும். யார் வேண்டுமானாலும் வாசித்து, எழுத்துகளோடு வசித்து பயணப்பட முடியும்.

எளிமை, அழகியல், கவித்துவம்,மென் சோகம், குறும்பு, இயல்பு எல்லாம் இருக்கும் எழுத்து..

ஒரு வரியில் புரட்டிப் போடவும், அழ வைக்கவும், இளகிடச் செய்யவும், நிமிர்ந்து உட்கார வைக்கவும், இப்படியும் இருக்கா? என யோசனை செய்யவும் வைக்கும் மாயாஜால எழுத்து..

நம் மனம் தொட்டு உலுக்கிச் செல்வது மட்டுமல்லாமல், கொஞ்சம் நல்லவழியில் மாற்றிக் கொள்ளவும், சொல்லாமல் சொல்லும் பாஸிடிவ் வரிகள் பல.

ரசனையாக எப்படியெல்லாம் இருக்க முடியும்.
அதை எப்படி அழகியலோடு வடிக்க முடியும் என்று சொல்லும் எழுத்து.

ஒரே காட்சியை ஓராயிரம் பேர் பார்த்துக் கடந்திருப்பார்கள். அது கதிரின் கண்ணில் பட்டு, கையில் வடியும் பொழுது அந்தக் காட்சி புதுவிதமாக ஆயிரக்கணகான மனதிற்குள் பயணப்பட்டிருக்கும்..

இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் உண்டு. அவை புத்தக விமர்சனத்திற்காக சேமித்து வைத்திருக்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி.
புத்தகம் போடும் கணங்கள் இன்னும் ஐம்பது முறையாவது அமைய இது தொடக்கமாக அமையட்டும்.

இனி வாசகர்களின் மனதில் கிளைகள் விருட்சமாகும்.

Monday, July 13, 2015

லா.ச.ரா

 லா.ச.ரா. 
பெங்களூரு நண்பர்கள் ஏற்பாட்டில் நடக்கும்  "இரண்டாம் ஞாயிறு" கூட்டம் அல்சூர் தமிழ் சங்கத்தில்..இந்த முறை லா.ச.ரா அவர்களின் மகன் சப்தரிஷி அவர்கள் பேசுவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒரு அழகிய எழுத்தை வாசிக்கும் பொழுது அந்த எழுத்தாளைனை  பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவல் அனைவருக்கும் வரும். அதுவும் இன்றும், என்றும் மனதை பாதிக்கும் எழுத்துகளை ஒரு நூற்றாண்டுக்கு முன் பிறந்த மனிதர் தமிழில் எழுதி இருப்பது ..அது என்று வாசித்தாலும் அழகாக இருப்பது என்பது பெரிய விஷயம்.

தேர்ந்தெடுத்த வாசிப்புகளில் இப்பொழுதான் இறங்கி இருக்கிறேன். இதில்  லா.ச.ரா கதைகள் கொஞ்சமே வாசித்து இருப்பதால்..ஏதாவது அவரைப் பற்றி கேக்கலாம் என்று சப்தரிஷி அவர்கள் கேட்டப் பொழுது மனதில் தோன்றியது இதுதான்.. அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மட்டும் எழுதுவதாக எனக்கு தோன்றியது ஏன் அப்படி!?  என்றுக்  கேட்டேன்..

மிக அழகான பதில்...ஒரு ஒரு ஏரோப்ளேன் பற்றி  எழுதனும்னா என்னை விட ஏரோனாடிக்கள் இஞ்சினியருக்கு விவரம் தெரியும்..எழுதினால் தவறுகள் ஆகலாம்..அவன் நாளைக் கேள்விகள் கேக்கலாம்..ஒரு குறிப்பட்ட  விஷயத்தைப் பற்றி எழுத சரியான தகவல்களுடன் அந்த துறை  ஜாம்பாவான்கள் இருப்பார்கள்..அவர்கள் எழுதட்டும்..எனக்கு தெரிந்தது இந்தக் கூட்டுக் குடும்பம், சுற்றியுள்ள மனிதர்கள்,..இவர்களின் வாழ்க்கை, அதை சார்ந்த சமூகம்..அதையே நான் பதிவு செய்கிறேன். அதே சமயத்தில் இதில் சிறப்பாக என்னால் செய்ய முடியும் என்பதை யோசிச்சு செய்கிறேன் என்பது லா.ச. ரா பதிலாக இருந்ததாக கூறினார்.

அவரிடம் எல்லாக் கேள்விகளுக்கும் தயாரான பதில்கள் இருப்பதாய் குறிபிட்டார். எப்படி அப்பா என்றுக் கேட்டால்..கிணற்றில் பல விஷயங்கள் விழுந்து கீழே ஆழமாக கிடக்கும்..என்றாவது மோதிரம் விழம்பொழுது பாதாள சல்லடைக் கரண்டி போட்டு எடுக்கும் பொழுது எல்லாம் வெளி வரும்..அதுப் போன்றுதான் இந்தக் கேள்விகள்..எல்லா பதில்களும் ஆழமாய் உள்ளேக் கிடக்கிறது..உன் கேள்விகள் மூலம் கொண்டு வருகிறாய் என்று சொல்வாராம்.

அவர்களின் குடும்பம் மிகப்பெரிது..கூட்டுக் குடும்பத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவரின் பாற்கடல் கதையில் வருவதுப் போல கூட்டுக் குடும்பம் என்பது பாற்கடல் போல..கடைய கடைய அமிர்தம், காமதேனு, ஆலகால விஷம் எல்லாமே எது வேண்டுமானாலும் வரலாம் ..ஆனால் அது மிக முக்கியம்..என்பதுதான் அவரின் கருத்து.

அடுத்து அவரின் வாசக அனுபவம்..நாற்றம் என்ற வார்த்தையில்  மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டும். மல்லிகைப் பற்றி எழுதினால் அந்த வாசனை நம்மை சூழ்ந்துக் கொள்ள வேண்டும்..நெருப்பு என்றால் வாய் வேகுமா..என்று ஒரு எழுத்தாளன் நினைக்க கூடாது..அவன் நெருப்பு என்று எழுதினால் அந்த சூடு படிப்பவர் உணர வேண்டும்...அதுவே நல்ல எழுத்து என்பதும் அவர் கருத்து.

அத்தனைப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் தனியே எழுத முடியாது..அவருக்கு தனிமை தேவைப் படவில்லை..குழந்தைகள் வரிசையாக ஓடி விளையாடும் பொழுது வரிசையாக பேப்பர், பேனாவை தட்டிவிட்டு செல்வார்களாம்..ஒவ்வொரு முறையும் அவர்களை கடிந்துக் கொள்ளாமல் கீழிருந்து பொறுக்கி, சரி செய்து திரும்ப எழுதுவாராம். அவர் எழுத்துக்கு தனிமை தேவைப்படவில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமகா தோன்றியது..

குடும்பத்துடன் மிக மிக ஆத்மார்த்தமாக இருந்து இருக்கிறார். குழந்தைகளுக்கான சுதந்திரம் என்பதில் இந்தக் காலத்தை விட தீர்மானமாக இருந்து இருக்கிறார். சிகரெட் உனக்கு கெடுதல் என்று குடிக்காவிட்டால்  மட்டுமே குடிக்க மாட்டாய்.. அப்பாக்கு பயந்து என்றால் நான் இல்லாத பொழுது துணிச்சல் வந்து குடிப்பாய் என்று கூறி இருக்கிறார்.  குழந்தைகள் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்து இருக்கிறது. அவரின் குழந்தை வளர்ப்பு பற்றி கேட்டப் பொழுது..இதில் நான் செய்ய ஒன்றுமே இல்லை..நீங்கள் ஐவரும் ஒழுக்கமாய் வளர்ந்து இருப்பது எனக்கு அமைந்து இருக்கிறது. இன்னொரு விஷயம்,,,லா.ச.ரா ஆத்திகர்..அதுவும் அந்தக் காலத்திலியே அவரின் பெண் நாத்திகவாதி..எத்தனை அழகாய் சுதந்திரம் கொடுத்து இருக்கிறார். தலைப்பிரசவம்..அப்பொழுது சிசெரியேன் மிகப்பெரிய விஷயம்..தியேட்டர் வாசலில் மகளின் நெற்றியில் சுவாமி விபூதியை தடவி விட்டு..இப்பயாவது கடவுளை நம்புகிறாயா என்றுக் கேட்டு இருக்கிறார்..இல்லையப்பா இந்த நொடி வரை வரவில்லை..உள்ளே வந்தால் வெளியே வந்து சொல்கிறேன்..என்று கூறியுள்ளார்..அந்தக் கருத்தையும் ஆமோதித்து இருக்கிறார். இது இதுதான் இந்தக்  பேச்சின் பாகம் லா.ச.ரா வை என் மனதில் மிகப்பெரிய உயரத்தில் வைத்தது.

அடுத்து எம்.ஜி. யார் அவர்களின் புத்தக கலக்ஷனில் லா.ச.ரா புத்தகம் இருந்து இருக்கிறது. அதுவும் வாசிக்க மிகக் கடினமான கதை. வாத்தியார் எளிமையாக காட்டிக் கொண்டு இருக்கிறார்..ஆனால் மிக ஆழ்ந்த வாசிப்பும் அவருக்கு இருக்கிறது. அவர் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம்..திருடாதே  படத்துக்கு தலைப்பு தந்த லக்ஷ்மணன் கூட விருந்து. ஜானகி அம்மையார் பரிமாறி இருக்கிறார். அப்பொழுது லக்ஷ்மணன் ஐயா இரு யுகத்துக்கு பிறகு இது நடக்கிறது என்றாராம். உடனே பையில் ஐயாயிரம் இருந்துதாம் உடனே கொடுத்தாராம். இதில் உள்ள சூட்சுமம் புரிகிறதா என்றார்சப்தரிஷி அவர்கள்....அதற்கு விளக்கமும் கொடுத்தார்..ராமன்(எம்.ஜி.ஆர்), லக்ஷம்னன் அமர ஜானகியம்மை பரிமாறுவது ராமாயணம் ஆகி இரு யுகத்துக்கும் மேல் திரும்ப நடக்கிறது  என்பதை ஒரு வாக்கியத்தில் சொல்லி இருக்கிறார்.

இதுப் போன்றுதான் அவர்கள் வீட்டிலும் பல உரையாடல்கள் இருக்கும் எனக் குறிப்பட்டார். வீட்டில் நகைச்சுவையாக சிலேடையாக பேசுவது வழக்கத்தில் இருந்து இருக்கிறது. அந்த சூழல் எல்லாம் அவரின் எழுத்துக்கு இன்னும் கைக் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.


லா.ச.ரா. இறந்தப் பொழுது சிவக்குமார் போன்ற பிரபல நட்சத்திரங்கள் வந்தப் பிறகுதான் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவர் மிகப்பெரிய எழுத்தாளர் என்பதே தெரிய வந்துதாம். இதை மனதுக்கு ஏற்றுக் கொள்ள சங்கடமாக இருந்தது. என் தோழி ஒரு முறை நடிகர் செந்தில் என் தெருதான் என்று கூறினார். இன்னொரு தோழி எங்கள் பிளாட்டில்தான் இந்த நடிகை வசிக்கிறார் என்றார்.

ஆனால் மிக அருமையான எழுத்தாளரை பற்றி அவரின் அக்கம் பக்கம் எப்படி அறிந்து வைத்து இருக்கிறது என்பதைக் கேட்டு கொஞ்சம் மனம் சங்கடப்பட்டது. ஆனால் சப்த ரிஷி அவர்கள் இதையும் பாசிடிவாகத்தான் சொன்னார்.

யாரையும், எதற்கும் நொந்துக் கொள்ளாமல், கடிந்துக் கொள்ளாமல், தனக்கு எதிராக வரும் விமர்சனங்களையும் மிக எளிமையாக, நேர்மையாக கையாண்டு ஒரு பாஸிடிவ் வாழ்கையை வாழ்ந்து இருக்கிறார். பல உளவியாளர்கள் சொல்லி..பல மக்கள் செய்ய முடியாத வாழ்க்கை இவருடையது. " அக் கணத்தில் மட்டும் வாழ்வு"..எத்தனை அழகானது.

ஒரு மகனாக மட்டும் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக, வாசகனாக தந்தையுடன் பழகும் பாக்கியம்.. அவருக்கு  தந்தை மேல் தீராக்காதல். சிவகுமார் ஆறுதலாய் சொன்னாராம்..ஐம்பது இரண்டு வருடம் தந்தை உன்னுடன் இருந்து இருக்கிறார்.. பெரிய பாக்கியம்..நானெல்லாம் தந்தையை போட்டோவில் மட்டுமே பார்த்து இருக்கிறேன் என்று..ஐம்பது இரண்டு வருடங்கள் அவருடன் வாழ்ந்து விட்டேன்..இனி எப்படி அவரில்லாமல் என்பதுதான் என் பிரச்னையே என்று இருக்கிறார். அது சொல்லும் பொழுதே குரல் மாறி ஒலிக்கிறது..இன்னும் தந்தையை இழக்க தயாராகாத பிள்ளை மனம். எத்தனைப் பெரிய எழுத்லாராய் இருக்கலாம். இதுப் போன்ற பாசமுள்ள குழந்தைகளை வளர்த்ததே அவரின் மிகப்பெரிய வெற்றி என்று தோன்றியது.

அதுப் போல வார்த்தைகளின் காதலர். வார்த்தைகளோடு அப்படி விளையாடுவாராம். ஒரு முறை உடல்நலம் சரியில்லாதப் பொழுது எழுதும் பொறுப்பை லா.ச.ரா கடினம் என்று கூறியும் பிடிவாதமாக மகன் கேட்டு வாங்கி இருக்கிறார். இரவு இரண்டு மணிக்கு எழுந்து பத்தாவது பாராவில் இருக்கும் நான்காவது வரியை அடித்து..பதினோன்றாவது பாராவில் கடைசியில் சேரு என்பாராம். வாக்கியங்களை டைப்  அடித்து போஸ்ட் செய்து விட்டு மறந்தே போகும் எனக்கு இந்த விஷயம் வியப்பு என்பதை விட...என்ன ஒரு அர்பணிப்பு என்று யோசிக்க வைத்தது..

அடுத்து எழுத்துப் பற்றி..அவரின் எடிட்டிங் சிறப்பே அதற்க்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட கட் செய்ய முடியாதது என்பதே... அப்பவே ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலமாக எழுதும் பழக்கம் இருந்து இருக்கிறது. அதை பிரசிரிதும் இருக்கிறார்கள். விகடன் கூட விதிவிலக்கில்லாமல் பிரசுரிப்பது உண்டாம்.


நான் இங்கு..இந்த தலைப்பு லா.ச. ரா என்று மட்டும் கொடுக்க காரணம்..அவர்  ஒற்றை சொல்லில் அத்தனை அர்த்தத்தை புதைத்து வைப்பவர்..அழ, சிரிக்க, பதற வைப்பவர். ..இங்கு லா.ச. ரா என்ற ஒற்றை வார்த்தைக்கும் எத்தனை அர்த்தம் என்று அவரை வாசிப்பவர்களுக்கு புரியும்.

தந்தை, மகன் இருவருக்கும் ஒரு நாளைக்கு நானூறு பக்கங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது..இன்றும் இருக்கிறது..இது சாதா, இலக்கியம் என்று ஒதுக்காமல் ஓரளவுக்கு நல்லவற்றை வாசிக்கும் பழக்கம் இருந்து இருக்கிறது .இலக்கியம் என்பது இலக்கணமில்லை என்பதும் அவர் கருத்தாம். அவருக்கு தமிழ் இலக்கணம் அத்தனை தெரியாது  என்பது கூடுதல் செய்தி.

என்னைப் பொறுத்தவரை வாசிப்பு என்பது ஒரு அனுபவம்.. ஒரு செய்தியில் கூட அந்த அனுபவம் கிடைக்கலாம். அந்த அனுபவங்களே இலக்கியம் என  நினைத்துக் கொள்வேன்.

அடுத்து வார்த்தைகளை கையாண்ட விதம்.. முதலிரவு அறையில் நுழையப் போகும் பெண் மாடிபடிக்கு கீழே நின்றுக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கு ஏறப் போகிறாள்..அவள் நினைக்கிறாள்.. "இன்றைய மாடிக்குதான் எத்தனைப் படிகள்" ..அந்த இடத்தில அந்தக் கணத்தை அழகாக குறைந்த வார்த்தைகளில் விவரித்து இருப்பதைப் பற்றி சொன்னார்.

அவரின் வார்த்தைப் போக்குப் போல அடுத்து வந்த சுஜாதாவும் சரியாக கையாண்டு இருந்தார் அதாவது விமானம் விர்ர்ர்ரென்று கிளம்பியது..போன்ற பதங்களை..


இரண்டரை நேரம் பேசியது மட்டுமில்லாமல்..இன்னும் அவரின் கதைகள், அதன் சூழல்கள் பற்றி பேசவும் அவர் தயாராக இருந்தார். அவரின் பேச்சு அவரின் தந்தை மேல் உள்ளக் காதலைப் போல தீராமல் வந்துக் கொண்டே இருந்தது.  லா. ச. ராவின் பிரமாண்டத்தில் ஒரு பகுதியை தரிசித்த மகிழ்ச்சி எங்களுக்கு..கிளம்பும் பொழுது வாசிப்பின் மேல் இன்னும் காதல் கூடி இருப்பதை மனம் உணரச் செய்தது. நன்றி..மணிகண்டனுக்கு.

கிளம்பும் பொழுது லா.ச.ரா புகைப்படம் ஒன்றை எங்களுக்கு பரிசாக வழங்கினார். காலையில் கைப்பையில் இருந்து பர்ஸ் எடுக்கும் பொழுது தட்டுப்பட அதை எடுத்து ஷோ கேசில் வைத்தேன்..ஆழமாக என்னை பார்ப்பதாக உணர்ந்தேன். இருக்கட்டும்..அவரின் எழுத்துகளை  இன்னும் நான் வாசிக்கும் வரை அப்படியே பார்க்கட்டும்.



 எதையும் பொதுமைப் படுத்துவதில் அவருக்கு ஒப்புமை இல்லை. சப்த ரிஷியும் அதையே சொன்னார். யாரையும் இப்படிதான் என்று பொதுமைப் படுத்தும் கருத்துகள் இல்லை என்றார். சுஜாதாவிடம் விஞ்ஞானி என்றால் ஏன் குறுந்தாடி, கண்ணாடி, நீளக் கோட் என்றுக் கேட்டுள்ளார்..அதற்கு என்னைப் போன்ற பல அறிவியலாளர்கள் இப்படி இல்லாமல் சாதரணமாகதான் இருக்கிறோம். இதெல்லாம் மீடியா மனதில் பதிய வைத்த விஷயங்கள்..என்று விளக்கியதாக தெரிவித்தார், ஆனால் அவரே பேச்சின் நடுவில் நான் கிராமத்துக்காரி என்றவுடன் அதிர்ச்சியாக நேரடியாக மேலும், கீழும் என்னை உற்று  பார்த்துவிட்டு பார்த்தால் கொஞ்சம் கூட தெரியவில்லையே என்றார்..மனதில் கிராமத்துப் பெண் என்றால் இப்படிதான் என்ற பதிவில் இருந்து அவரால் கூட இன்னும் மீள முடியவில்லை .இந்த சமூகத்தில் ஆழமாக சில விஷயங்கள் பதிந்து உள்ளன. எத்தனைப் படித்தவர்களாலும் அதில் இருந்து மீளுவது கடினம் என்று தோன்றியது.. அடுத்து கல்லூரியில் படிக்கும் மகன் இருக்கிறான் என்ற விஷயத்தையும்  சொல்லிவிட்டு வந்தேன். அவரின் கண்களில் உள்ள  ஆச்சரியத்தை ரசித்துக் கொண்டே..

இந்த சந்திப்பை இன்னும் இன்னொரு பார்வையில் வாசிக்க

http://www.nisaptham.com/2015/07/blog-post_13.html












Friday, July 10, 2015

காதல் நட்சத்திரங்கள்.

இணையத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சைக்காலஜி பக்கத்தில் கண் நின்றது. காதலில் உள்ள உண்மை என்று வெளிநாட்டு மனவியலார் எழுதி இருந்தார்.

வெளிநாடுகளில் பொதுவாக காதலித்து, கொஞ்ச நாள் லிவிங் டுகதரில் வாழ்ந்துவிட்டு பிறகு ஒத்து வந்தால் மட்டுமே திருமணம்..சில சமயம் குழந்தைக் கூட பிறக்கும்..ஆனால் அத்தனை எளிதாக திருமணத்தில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.

பையனுடன் டூர் வந்திருந்த அமெரிக்க குழ்நதைகளுடன் டின்னர் சாப்பிட்டேன்..இத்தனை வருட திருமணம் எப்படி சாத்தியம் என்று என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்..அதைவிட் அவர்களுக்கு பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம், டைவர்ஸ் பற்றியே நாம் யோசிக்காதது, திருமணத்தில் ஏற்படும் செலவுகள், சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் வாயை பிளக்க வைத்தன..

எப்படி டேடிங் பண்ணாமல் திருமணம் செய்து கொள்ள முடியும் ..அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..ஆனால் ஒரே கணவனுடன் வாழ்வது சாத்தியமா என்று என்னிடம் கேட்டப் பொழுது என் கணவருக்கு ஒரே மனைவியுடன் வாழ்வது சாத்தியம் என்னும் பொழுது எனக்கும் அது சாத்தியம் ஆகிறது..என்று சிரித்துக் கொண்டு அந்தக் கேள்வியை கடந்தேன். இதெல்லாம் பையன் சிரித்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்தான்..கடைசியில் அவன் எங்க வீட்டில் அம்மா அப்பாவோடு மட்டும் இருவது வருஷமா இல்லை..என் பாட்டியுடன் கூடதான் என்று சொல்ல அவர்கள் மயக்கம் போட்டு விழாத  குறை..

இந்தக் கட்டுரைக்கு வருகிறேன்..இவர் இந்திய தம்பதியை பார்த்து சந்தித்த நாளும், திருமண நாளும் ஒன்றா..அந்த ஒரு நாளில் எப்படி வாழ்கையை அர்பணிக்க முடிந்தது என்று எல்லா வெளிநாட்டவர்கள் போல கேள்விகள்..ஒரு தம்பதி இல்லை..பல இந்திய தம்பதிகள்..அதுவும் இருவது, முப்பது, நாற்பது வருடங்கள் ஒன்றாக வாழ்பவர்களை பார்த்து வியந்து இருக்கிறார்.
அனைவரும் ஒன்றுப் போல சொன்னது..பெரியவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும் எனவே சரியான பொருத்தம் தேர்ந்து எடுப்பார்கள், நாங்கள் பெற்றோர் பேச்சை தட்டம்மாட்டோம், பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு வைத்து இருக்கிறேன்..அவர்களுக்கும் என்னிடம் அதிக அன்பு..எனவே அவர்கள் சொல்லுபவரைதான் திருமணம் செய்துக் கொண்டேன்..எங்களுக்கு எது பொருத்தம்...இந்த சமூகத்துடன் எப்படி ஒருங்கிணைந்து வாழ்வது என்பதை பற்றி பெற்றோர்கள் அனுபவபட்டவர்கள்..அவர்கள் பேச்சை கேப்பதில் தவறில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ஏன் இதுப் போன்ற திருமணங்கள் கூட நிலைகின்றன..நாமே பார்த்து, வாழ்ந்து பார்த்து சென்ற திருமனங்கள் வெளிநாட்டில் நிலைப்பது இல்லை என்று யோசித்து இருக்கிறார்.

திருமணம் என்பது வெறும் அன்பு, பரிமாற்றமோ, காதல் மட்டுமே இல்லை.அது வாழ்கை முழுவதுக்கும் உள்ள கமிட்மென்ட்.என்று புரிந்துக் கொண்டுள்ளார். சமூகத்துடன் ஒன்றுப்பட்டு வாழ்வது மட்டுமில்லை..கரண்ட் பில், வீடு, குழந்தைகள் வளர்ப்பு, அதன் பள்ளிகள், தினம் உள்ள வேலை அழுத்தங்கள், பணம், சொந்தங்கள் என்று தினம் தினம் ஒன்றாக சந்திக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது.  வெறும் உடல், மனம் மற்றும் திருமணத்துக்கு போதுமானதாக இல்லை..சூழல், வேலை, பணம், குடும்ப அனுசரணை போன்றவற்றின் துணையும் தேவையாக இருக்கிறது.


மணமக்கள் பார்த்து, பேசி, காதலித்து, குணம் அறிந்து, வாழ்ந்து பார்த்து என்று எந்த அஸ்திவாரமும் இல்லாமல்தான் இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. ஆனால் பெரும்பாலன வெற்றிகரமான திருமணங்களை நாம்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அது எப்படி?

காதல் என்பது ஒருவருக்குள் ஒருவர் விழுவது மட்டுமில்லை. வாழ்நாள் முழுக்க கைப்பிடி துணையாக வருவது. எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் துணை நிற்பது. வயதாகி தளர்ந்துப் போய் நிற்கும் பொழுது கைத்தடியாக பிடித்துக் கொண்டு அனுசரணையாக நேசிப்பது. ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ வருவதில்லை காதல்.

ஒவ்வொரு செங்கல்லாக கட்டப்படுகிறது. மிகுந்த இறுக்கத்துடன்..ஒவ்வொரு விசேஷத்திலும், ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு பெரிய வெற்றிகளிலும், துணைக்கு கைக் கொடுப்பதிலும், சச்சரவுகளை தீர்த்துக் கொள்வதிலும், பிரச்னைகளை ஒன்றாக இருந்து சமாளிப்பத்திலும் ஒவ்வொரு கல்லும் இறுக்கமாக காதலுடன் தாஜ் மகாலாக வீடும், குடும்பமும்  கட்டி இணைக்கப் படுகிறது.

காதல் இல்லாமல் வாழ்க்கைக்கான உந்துதல் கிடைக்காது. காதல் மிக முக்கியம்தான். காதலை அறிந்துக் கொள்வதும்..ஆனால் இங்கு காதல் என்பது என்ன? எல்லா  கடின சூழல்களையும், காலங்களையும்  கடந்து ஒருவருக்கு ஒருவர் நானிருக்கிறேன் ஆன வயதான தம்பதிகள் கைப்பிடிக்கும் பொழுது கண்களில் மின்னும் அந்த நான்கு நட்சத்திரங்கள்தான் காதல்.