Tuesday, April 22, 2014

அப்பா-18

அப்பா-18,

அப்பாவின் குறும்புகள் அதிகம்..அந்த காலகட்டத்தின் ஊடாக நாம் பயணிக்க ஏதுவாக அப்பா கூறும் குறும்புக்கதைகள் சுவாரசியமானவை..

குழந்தையாக இருக்கும்பொழுது ஆறில் குளிக்க ஆசை..அப்பாக்கு அவரின் அம்மா சிறு வயதில் இறந்துவிட்டார். அதனால் பெரியப்பாட்டிக்கு மிக செல்லம். அவருக்கு, தாத்தாக்கும் ஆற்றில் போய் தனியாக குளிப்பது எல்லாம் பிடிக்காது.

அப்பாக்கோ ஊர் பசங்களுடன் பள்ளி முடிந்தவுடன் ஆற்றில் குளிக்கஆசை. ஆனால் தாத்தாக்கு தெரியக்கூடாது. தோல் உறிஞ்சுடும் அப்பல்லாம் தப்புக்கு...ஸ்கூல்ல தப்பு செஞ்சா ஸ்கேல் அடி, வீட்டுல பிரம்பாலன்னு பசங்களை அடிக்க யோசிக்கவே மாட்டாங்க. அடியாத மாடு படியாதுன்னு கூட இருக்கிறவங்களும் இன்னும் போட்டுக்கொடுப்பாங்க.

இப்ப என் பையனை லேசா அடிச்சா அவங்கப்பா என்னையவே அடிக்க வந்துடுவார்..பாட்டியோ என்னை கொடுமைக்காரி போல பார்ப்பாங்க..அதை விட மோசம் நான்.. அவன் அழுதா ஸாரி சொல்லிட்டு நானும் அழுதுடுவேன்..அடிதடின்னா அண்ணன், தம்பிகளுக்குள்ள மட்டும்தான் இப்ப..

பள்ளி விட்டு வந்தவுடன்..உடைகளை களைந்துவிட்டு மதகில் இருந்து குதித்து இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கத்துக்கு நீச்சல் அடிப்பார்கள். ஆற்றில் நீச்சல் போட்டி, இக்கரையில் இருந்து அக்கரைக்கு போறது, உள்நீச்சல்ன்னு செமயா ஆடுவாங்க.பிறகு உடையை போட்டுகொண்டு வீட்டுக்கு போவாராம். தாத்தா தலையை தொட்டு ஈரத்தை வைத்து கண்டுபிடித்து விடுவாராம். உடனே பனிஷ்மென்ட்தான்.

அப்பாகிட்ட கேட்டேன் என்னப்பா செய்வார்ன்னு ..உனக்கு தெரியாது..இப்ப மாதிரி எங்கப்பா செல்லம கொடுக்க மாட்டார்..தலைகீழா கட்டிவிட்டுட்டு கீழே மிளகாய் போட்டு எரிப்பார்..கண்ணு பயங்கரமா எரியும்..இல்லாட்டி பிரம்பு, சாட்டைதான் தோல் உறிஞ்சுடும்னு சொன்னார். கண்ணை இறுக்க மூடி கற்பனை செஞ்சு பார்த்தேன்..பயந்துட்டேன்..அப்பாவை கட்டிக்கொண்டேன். நாம எவ்ளோ செல்லமா இருக்கோம்..அம்மா என்னிக்கோ குட்டுவது, அப்பா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் அவ்வளோதான் நமக்கு..ஆனா அப்பா பாவம்னு தோணிச்சு.தாத்தா மேல கொஞ்சம் கோவமா வந்துச்சு..

இந்த கதையை பெரிய பையன்கிட்ட சொன்னேன். விழுந்து, விழுந்து சிரிக்கிறான். அம்மா ஜட்டி ஈரம் ஆகாமா எப்படி குளிக்க முடியும்? முகத்தை பார்த்தாலே போதும்..அது எதுக்கு தலையை தொட்டு பார்த்து கண்டுபிடிக்கனும்..எப்படி தலைகீழா தொங்கவிட்டார்ன்னு கேட்டியான்னு கேட்டான்.

இப்படி எல்லாம் கேக்க தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கோம்? அப்பா சொன்னதையும் நம்பறோம்..பசங்க சொல்றதையும் நம்பறோம்..

வேறன்ன செய்யறது நம்பிக்கைதானே வாழ்கை......

No comments: