Thursday, April 16, 2015

சித்ர கலா பரிஷித்தில் ஒரு நாள்.

அழகான தருணங்கள் திட்டமிட்டு அமைவதில்லை. நானும், உஷாவும் ஒரு வேலையாக மல்லேஸ்வரம் செல்லும் பொழுது திடீர் என்று நினைவுக்கு வர கீதா குணாளனுக்கு போன் செய்ய..மகிழ்ச்சியில் இங்குதான் இருக்கேன் உடனே வாங்க என்றார்.

வேலைகள் முடித்துவிட்டு கவனமாக கேன்டீன் இருக்கா என்று விசாரித்துக்கொண்டு கிளம்பினோம். அங்கு கீதா அம்மா, அப்பா, சகோதரர் குடும்பம் அனைவரும் கிளம்பும் முன் எங்களையும் பார்த்துவிட்டுப் போக காத்து இருந்தனர். குடும்ப சந்திப்புகளில் நெருக்கம் ஒரு இஞ்ச் அதிகரித்துவிடுவது உண்மைதான்.

கர்நாடக சித்ர கலா பரிஷத் ஓவிய கலைக்கு  புகழ் வாய்ந்த இடமாகும். அங்கு கண்காட்சியில் இடம் கிடைப்பது என்பது சாதரண விஷயம் இல்லை. கீதாவின் உடல்நிலையை தாண்டி அவரின் கடின உழைப்பு , ஓவியத்தின் மேல் இருக்கும் ஆர்வம், விடா முயற்சி ஆகியவற்றால் இந்த இடத்தை அடைந்து இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அவரின் ஓவியங்கள் அதிக மதிப்பில் போகும் என்று நடுவர்கள் குறிப்பிட்டு விற்பனை விலை சொல்லியிருப்பதும் நல்ல விஷயம்.

கீதாவின் ஓவியங்கள் எம். எஸ் அம்மா மனதை விட்டு விலக நாளாகும். சிங்கமும், ரிப்லேக்ஷன்ஸ் எனப்படும் படகும் அதன் நிழலும் மிக அழகாக இருந்தது.


பொதுவாக அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எந்த ஓவியத்தையும் குறை சொல்லிவிட முடியாது...எளிதில் ஒதுக்க முடியாத பல நுணுக்கமான ஓவியங்களை காட்சிக்கு வைத்து இருந்தனர்.

முக்கியமாக ஒரு பெண்ணும், முகமூடியும் என்று கவிதை எழுதி வைத்து இருந்தார். முகமூடியே முகமாகி போவது, சந்தர்ப்ப முகமூடிகள், நிறத்துக்கு ஒரு முகமூடி என்று கவிதையோடு ஓவியம் கவனத்தை கவர்ந்தது. அதை விட அந்த ஓவியரின் ஆர்வமும், பேச்சும்.

Let be .என்ற பெண் ஓவியம்..உடையில்லாமல் ,மிக அழகாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இதான் பெண் என்று சொல்வது ..அந்த உணர்வுகள்.பாதி முகம்..கண்ணை விட்டு மறைய நாளாகும்.

பெண்களின் காதலன் புத்தனாக இருக்கிறான். ஆங்காங்கு ஒரு புத்தன்..இன்னொன்று கை அசைவே இசை என்று ஓவியம்..போட்டோக்களை விட தத்ரூபமாய் அதை கலையோடு சேர்த்து பல ஓவியங்கள்..நிறுத்தி நிதானித்து பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம்..பரபரப்பாக எங்கு ஓடுகிறோம்..ஓவியங்களை கூட அதிக நேரம் ரசிக்க முடியாத தினத்தின் சோசல் நம்மை எங்கு இழுத்து செல்கிறது என்று அறியாமலே ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

அடுத்தடுத்த வேலைகளும் அது கொடுக்கும் கூடுதல் அழுத்தங்களையும் வாழ்நாள் முழுக்க சுமந்துக் கொண்டு இந்த நிமிடங்களை தவற விடுவது மிகக அதிகமாக நடக்கிறது. சென்ற நிமிடங்கள் போலவே இந்த நிமிடங்களும் கை நழுவிப் போவதை கவனித்துக் கொண்டே இருக்கிறோம்.

இனி நுண்ணுணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து கலைக்கூடம் போக வேண்டும் என்ற ஆவல் சித்திரகலா பரிஷத் வாசல் வரை வந்தது. எதையும் பத்து நிமிடங்களுக்கு மேல் சுமக்க முடியாத வாழ்க்கை இழுத்து போட...ஓடிக்கொண்டே பயணம்.




 

3 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் சகோதிரி

sathishsangkavi.blogspot.com said...

// ஓடிக்கொண்டே பயணம் //

இது தான் வாழ்க்கையாகிவிட்டது நமக்கெல்லாம்....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
பயணம் இனிதாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-