Thursday, March 19, 2015

குங்குமம் தோழியும், நானும்.

தோழியில் கொடுத்த விவரங்கள்..கேள்விகளும், பதில்களும் முழு வடிவம். நன்றி குங்குமம் தோழி.


கிர்த்திகா.
​நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக ..

கிர்த்திகா, கீர்த்தி, அம்மா, அக்கா ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பதவி , பட்டம்..அந்த அந்த வயதில் அவற்றை அனுபவித்தே இருக்கிறேன்...மனுஷியாக வாழ்வதே சவாலாக இருக்கும் காலத்தில் திரும்பி பார்க்கும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம். காலம் ஒவ்வொரு பருவத்திலும் மனிதர்களை சேர்க்கிறது, விலக்குகிறது..அனைவரிடமும் முடிந்தவரை அன்பு பாராட்டி நதி போல ஓடிக்கொண்டு இருப்பதே சாதனை. தாய் என்பது மிகப்பெரிய பதவியும், பொறுப்பும்..வாசிக்க, எதையும் கவனிக்க, கேள்விகள் கேட்க, பதிலகள் தேட மட்டும் கற்றுகொடுப்பது மட்டும் பெற்றோர்களின் பொறுப்பு என்று நம்புகிறேன். கல்வியை கற்றுக்கொடுப்பது நம் கடமையல்ல..அது திணிப்பாக மாற வாய்ப்பு உண்டு. நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். பிறகு அவர்களே கற்றுக்கொள்வார்கள். இன்றும் நான் ஐந்து வயது தோழமை கூட பேசிகொள்வது வரம்..ஐந்து நிமிட தோழமைகள் கூட மறக்காமல் இருப்பது வரமோ வரம்.

2. பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது
பள்ளி பருவத்தில் ஒரு பட்டாம் பூச்சியாக என்னை இருக்க விட்டது மிகப்பெரிய விஷயம். இப்போ இருக்கும் பள்ளிகளை போல சிறகை ஒடித்து அடைத்து ருசிக்காமல்..  சிறகை விரித்து பறக்க விட்ட காலம். மதிப்பெண்கள் பற்றி கவலை தேர்வு நேரங்களில் மட்டும். உற்சாகம், சந்தோஷம், விளையாட்டு, பேச்சு, பேச்சு, பேச்சு நிரம்பிய காலம் பள்ளி காலம். பெரிய பள்ளியில்  ஆசிரியர்கள் அறிய இருப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் நெருக்கமும் இருந்தது. அந்த நெருக்கமே அவர்கள் போதிப்பதை நெருங்கி பார்க்க செய்தது. வீட்டில் படித்த நினைவே இல்லாமல் இருக்கு..இப்பொழுது யோசித்து பார்த்தால் அதற்கு ஆசிரியர்கள் காரணமாக இருந்து இருக்கின்றனர்.

3.. இப்போ வசிக்கும் ஊர் குறித்து கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும் . அங்கே ரசிக்கும் உணவு மற்றும் கலாசாரம்

ஆஹா..மிக ரசிப்பான கேள்வி. இருவது வருடம்  வசிக்கும் இடம் என்று சொல்லி தள்ளி வைக்க முடியாது பெங்களூரை...அதன் நீரை அதிகம் குடித்து, அதன் காற்றை சுவாசித்து இந்த ஊர் என் மெய்யோடு கலந்து வருடங்களாகி விட்டது. ஆரம்பத்தில் என் மாநிலம் தமிழ்நாடு என்று சொன்னது போய் கர்நாடக வாழ் தமிழர் என்று சொல்லும் அளவுக்கு கலந்து விட்டது.
பல மொழிகள் , பல கலாசாரம், கல்வி முறைகள், உடை வகைகள், பரந்த சிந்தனை, மாடர்ன் மனசு, எதையும் சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்கு. தனியாக மொழி தெரியாமல் எங்கும் போய் சமாளிக்கும் தன்னம்பிக்கை கை வந்தது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதியில் உணவு முறைகள் வேறுப்படும். அது போல உடுப்பி கடுபு, மங்களூர் ஹோலிகே, வட கர்நாடக ஜோலா தோசை, கத்திரிக்காய் கொஜ்சு, பெங்களூரு போண்டா சூப், மதுர் வடை, ராகி உருண்டை தொட்டுக்க பசார் கீரை குழம்பு, கர்நாடக ரசம், ரோட்டோர பானி பூரி, மசால் பூரிகள்,  எம்.டி.ஆர் ரவா இட்லி, வீணா ஸ்டோர் இட்லி, சட்னி... ஐயர் கபே வடை, காபி, CTR வெண்ணெய் தோசை..ஒன்றா இரண்டா உணவு வகைகள்..அனைத்தையும் ஒரு கை பார்ப்பதே நம் வேலை.

4. பிடித்த புத்தகங்கள்
சுஜாதா..மிகப்பெரிய ரசிகை. சிறு வயதில் மகா பாரதம், ராமாயணம், தேவி பாகவதம் , குமுதம், விகடன், கல்கி, துக்ளக் , அம்புலி, கோகுலம் அதை தவிர பாலகுமாரன், ராஜ்ஜேஷ் குமார், சுபா, பட்டுகோட்டை பிரபாகர் ..அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகன் , சுந்தர ராமசாமி, காப்கா, புதுமை பித்தன், அசோக மித்திரன்..ஜி.நாகராஜன், வைக்கம்..அடுத்து பெருமாள் முருகனின் மிகப்பெரிய ரசிகை..கொங்கு நாடு பற்றிய அறிமுகம் அவர் நாவல்கள் மூலமே..இன்னும் இரு படைப்புகள் படிக்க வேண்டும். இன்னும், இன்னும் நிறைய எழுத்தாளர்கள்...தற்பொழுது வாசித்துக்கொண்டு இருப்பது அம்பை சிறுகதைகள். அதை தவிர இணையத்தில்  பெரும் எழுத்தாளுமைகளின் பக்கங்களை வாசிப்பதும் மிக பிடிக்கும். இதுதான் என்று இல்லை..நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க பிடிக்கும்.

5 குடும்பம் . குறித்து ..
இருவது வருடமாக கூட்டு குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மாமியாருடன் இருக்கிறேன். அம்மா, அப்பாவோடு இருந்ததை விட அவரோடு அதிகம் இருக்கிறேன். இனி கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்று தெரியாத வேளையில் குழந்தைகளுக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது வரம். பக்கத்திலாவது சித்தப்பா, அத்தை, பாட்டி, கசின் என்று யாராவது குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அப்பொழுது குடும்பத்தின் ஆணி வேர் பலமாக குழந்தைகளின் மனதில் ஊன்றப்படும் என்ற நம்பிக்கை உண்டு. எல்லார் அன்பும் நிறைக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு இருக்கும் வேளையில் பெரியவர்களோடு குழந்தைகள் ஐக்கியமாக விட வேண்டும். நம் பிரச்னைகளை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும். கணவர் மருத்துவர்...இரு ஆண் குழந்தைகள்..ஆண்களால் அழகாக சூழப்பட்ட வாழ்க்கை.

6. hobbies புத்தகம், இணையம், நண்பர்கள், பயணம்..அதை தவிர எதையும் ஒரு முறை.

7. இயற்கை 
பையன் ஒரு கேள்வி கேட்டான். வெளிநாட்டில் தண்ணிருக்கு அடியில் கண்ணாடி குழாயில் இருந்துகொண்டு மீன்கள், டால்பின்கள், சுறாக்கள் பார்க்க முடியுமே ஏன் நம்ம ஊரில் அந்த வசதி இல்லை..நாம் எப்படி பார்ப்பது என்றான்..உன்னை கண்ணாடி வீட்டில் குடியிருக்க சொன்னால் இருக்க முடியுமா என்று கேட்டேன்..ஹையோ..நான் பாத்ரூம் போகனும்..அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும்..முடியாது என்றான்..அதேபோல்தான் மிருகங்களும்..அதுவே நீருக்கு மேலே வரும்..இல்லையென்றால் நீச்சல் கற்றுக்கொண்டு மூழ்கி போய் பார்க்கலாம்..நட்பா அளாவலாம்..அதை விட்டுவிட்டு வேடிக்கை பொருளாக்கி பார்க்க கூடாது என்றேன்..இயற்கையும் அப்படிதான்...காய்ந்து இலையும் சருகுமாக இருக்கும் காட்டு செடிகளை, மரங்களை அழித்து கொரியன் புல் வளர்ப்பது, பூச்செடிகள் போடுவது  இயற்கை காட்சி  அல்ல..இயற்கையாக இயற்கையை விடுவதே இயற்கை..விட்டு காப்பாற்றி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

8. தண்ணீர் சிக்கனம். plastic பயன்பாடு
இரண்டு மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவதை முடிந்தவரை தவிர்கறேன்.. முக்கியமாக தமிழ்நாட்டில் மிக அதிக பிளாஸ்டிக் பை உபயோகம் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது..அதை எல்லா இடங்களிலும் வீசி இருப்பது வருத்தம். இங்கு ஒரு மூலையில் நான்கு , ஐந்து BBMP குப்பை லாரிகள் நின்று கொண்டு இருந்தன..ஈர குப்பைகள்  தனியே உரத்துக்கு..பேப்பர் குப்பைகள் விலைக்கு என்று அனைத்தையும் அழகாக கழித்து விட்டனர்..டம்ப் செய்வது பெரும்பாலும் குறைக்கப்பட்டு இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது..மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு வந்தால் வாழும் இடம் சொர்க்கமாகும்.

பள்ளியில் ஒரு நாள் குழந்தைகளுக்கு பாடம் எடுத்தேன்..நீங்கள் குடிக்கும் தண்ணீரை வெளியே எடுங்கள் என்றேன்.அது எவ்வளவு ப்ரெஷ் என்று கேட்டேன்..அனைவரும் இப்பதான் என்றார்கள்..எங்கம்மா பழைய தண்ணி வைக்க மாட்டாங்க என்றார்கள். எங்கிருந்து வந்தது என்றேன்..பைப், டாங், அக்வா கார்ட் என்று பதில்கள்..பிறகு..என்றதற்கு ஆறு, ஏரி நிலத்தடி நீர்..இன்னும் ரிவர்ஸ் ல் போக சொன்னேன்..மழை, மேகம், பனி..இன்னும் பின்னே..கடல், ஆறு, ஏரி, குளம், குட்டைகள்..பிறகு..சுற்றி, சுற்றி வந்தது..

நாம் குடிக்கும் நீர் பல மில்லியன் காலங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது..நம்மால் ஒரு சொட்டு கூட ஆய்வு கூடத்துக்கு வெளியே முடியாது என்பதே உண்மை..நம் பாட்டிலில் இருக்கும் நீர் நம் கொள்ளு தாத்தா உச்சாவாக கூட இருக்கலாம்..ஆனால் அதில் விஷம் கலந்தால் நமக்குதான் திரும்பி வரும் என்றேன்..சுத்தப்படுத்த மிக அதிக செலவாகும்..மரங்கள் ஓவர் டுட்டி செய்ய வேண்டும்..சிக்கனமாக இருப்பது நல்லது என சொல்ல..மாணவர்கள் அழகாக ஏற்றுக்கொண்டனர்..கதையால் சிக்கனம் சொல்லலாம்..அறிவுரை யாருக்கும் பிடிக்காது.

9. சமூக அக்கறை எப்பவும் உண்டு..இப்பவும் இரு பொருளாதாரத்தில் பின் தங்கிய  பள்ளிகளுக்கு போய் பாடம் எடுக்கிறேன். கல்வியின் மூலமே ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டிய நிர்பந்தம்.ஆனால் அந்த முறை சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போவது சமூக கேடு. அனைவரும் அவர்களின் விருப்பத்துக்கு வாழ வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூகத்துக்கு சிறு பங்காவது செய்ய வேண்டும்..பலர் செய்வதை பார்த்து நம்பிக்கை வருகிறது.

10. மனிதர்கள் 
அனைவரும் நல்லவர்கள்..மிக குறைந்த விகிதமே வேறு போல உள்ளனர். நாம் குறை, பகை இல்லாமல் அன்பாக இருந்தால் நம்மிடம் அன்பு செலுத்த மனிதர்களுக்கு தடை ஏதும் இல்லை. நாம் நட்ரியுடன், பிரியத்துடன் நேசத்தை செலுத்தினால் உலகம் அழகாகும். நமக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் சக்தி மட்டுமே உண்டு.

11 . பிறந்த ஊர் . சொந்தங்கள்.. கற்றுக் கொண்டவை 

கொல்லுமாங்குடி.கும்பகோணம் அருகில்..இன்னமும் கிராமத்தின் வெள்ளந்தி தனத்தை ஒளித்து வைத்து இருப்பது வரம். கிரிகெட், சீரியல்  உள்ளே நுழையாத காலம்..அதனால் பளிங்கு, கிட்டிபுல், கபடி, பாண்டி, ஊஞ்சல் என்று உற்சாக பறவையை கட்டிக்கொண்டு பறந்த காலம். கற்றுக்கொள்ள வாழ்கை எத்தனையோ வைத்து இருக்கு.சிறு வயதில் அப்படியே விளையாடி அனுபவிக்க வேண்டும்..குழந்தை பருவம் மிக இனிமை..அதை இந்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே கற்றுக்கொண்ட பாடம்.

12. நேர நிர்வாகம் 
அப்படியெல்லாம் எதுவுமில்லை..எத்தனை வேலை இருந்தாலும் முடித்து விட வேண்டும்..சும்மா இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்க வேண்டும்..நேரம் நமக்காக இப்பொழுது என்ன தேக்கி வைத்து இருக்கிறதோ அதை  எடுத்துக்கொண்டு போக வேண்டும்.

13. சமையல் 
இரண்டு மணி நேரம் மேல் இருக்க பிடிக்காது.ஆனால் சுவையா சமைக்க பிடிக்கும். திறமையான பல பெண்கள் சமையல் அறையில் நேரத்தை வீணடிப்பது ஒப்புதல் இல்லை..எளிமையாக இரு மணி நேரத்தில் ஒரு நாளுக்கு சமைத்து விடலாம். அதை இன்னொருவரிடம் தொழில் ரீதியாக ஒப்படைத்தால் அவர் குடும்பத்துக்கும் வருமானம் கிடைக்கும்..IIM, டாக்டர்  என்று  படித்து விட்டு பெருமையாக சமைக்கிறேன்..என்பது சீட் வேஸ்ட், அரசாங்க பணம் வேஸ்ட்..இருவரின் வாழ்கையை கெடுத்தது போன்ற குற்ற வகையில் சேர்ப்பேன்.. பெண்கள் மட்டும் சமையல் என்ற கேள்வி பொது பத்திரிக்கைகளில் பொது கேள்வியாக வர வேண்டும். இங்கு இல்லாமல்..

14  பிற கலைகள்
 
எல்லா கலைகளையும் ரசிக்க மிக பிடிக்கும்..சினிமா, டிராமா, எழுத்து, ஓவியம, புகைப்படம் , நாட்டியம்..ஏன் பஜன் கூட..

15 . organizing at home and office 

கற்றுக்கொண்டு இருக்கிறேன். எத்தனை ஒழித்தாலும் குப்பை சேருவதை தடுக்க முடியவில்லை..அதனால் அப்படி அப்படி ஏற்றுக்கொண்டு இப்படி இப்படி வேலை செய்து முடிக்கிறேன்.

16. கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது என்பது குறித்து
மிக அழகான பாதை. கிராமத்தில் பிறந்து வளர்ந்து , விவசாயம் கூட இருந்து..டவுனில் படித்து..நகரத்தில் வாழ்ந்து..உலகத்தை சுற்றும் குழந்தைகளை வளர்த்து...நல்ல குடும்பம், நட்புகளை வரமாக பெற்று..வேறென்ன வேண்டும்..

17. சினிமாத் துறை
நல்ல சினிமாக்களை பார்ப்பது பிடிக்கும்.மசாலாவும் பிடிக்கும், ஜேம்ஸ் கேமரூன், மணிரத்னம், மிஷ்கினும் பிடிக்கும்..பிடித்த ஹீரோக்களில் அரவிந்த் சாமி முதல் ஜார்ஜ் க்ளூனி வரை ரசனை நீள்கிறது..தரமான உலக படங்களும் பிடிக்கும்.தற்பொழுது தமிழ் படங்கள் உச்சத்தை நோக்கி பயணம் செய்வதாக தோன்றுகிறது..ஜிகர்தண்டா, சதுரங்க வேட்டை, மெட்ராஸ் என்று இயக்குனர்கள் பட்டையை கிளப்புகிறார்கள்..அந்த பக்கம் பார்த்தால் கலர்புல்லாக காவிய தலைவன்..மிக அழகாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமா நகர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

18. உடல் நலம் மன நலம் இரண்டும்
ஒன்றுகொன்று தொடர்பு உடையவை..ஒன்று நன்றாக இருந்தால் இன்னொன்றும்..

19.  நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை
எழுதுவது அனைத்துமே பிடித்துதான் எழுதுகிறோம்..எனினும் சிலவற்றை மறக்க முடியாது..முன்பு பேட் டச், குட் டச் பற்றி அதிகம் தெரியாத நேரத்தில் அதை பற்றி விளக்கமாக எழுதி அது பேஸ்புக் ல் நிறைய ஷேர் செய்யப்பட்டு வலம் வந்தது..அடுத்து அப்பா பற்றி எழுதியது ..அனைத்தும் உணர்வு பூர்வமானவை.

20 . இசை மனதுக்கினிய எந்த ஒலியும் இசை..அன்பின் ஹலோ, குழந்தையின் அழைப்பு, பையனின் ஸ்கைப் கால் அனைத்துமே இசைதான்..சிலரின் பேச்சுகள் கூட இசையாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

21.பிடித்த ஆளுமைகள் 
தமிழ் இணையத்தில்

இணையத்தில் ஈரோடு கதிர், ரவி நாக் , அமுத தமிழ் இன்னும் பலர். அன்பின் ஆளுமைகளும் அதிகம் உள்ளனர்.  வெளியில் படேல், அம்பேத்கர், காந்தி. அதை தவிர அனைத்து தன்னம்பிக்கை பெண்களையும்..

22. பிடித்த பெண்கள் - குடும்பத்தில், வெளியில் 
அம்மா, அக்கா, தம்பி மனைவி  வெளியே கிரண் மசூம்தார் தொழில் அதிபராக....ஜெயலலிதா, இந்திரா அவர்களின் தன்னம்பிக்கைகாக..தெரசா சேவைக்கு..

23. நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்
ஒன்றா, இரண்டா..எத்தனையோ காமெடிகள். காமெடி திருவிழாவே நடக்கும் நம்மை சுற்றி.  

24. ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும் கற்றது கொஞ்சம் எழுத்து, தமிழ், மன உறுதி..பெற்றது அன்பு, நட்புகள், இது போன்ற வாய்ப்புகள்..இழப்பதற்கு எதுவும் இல்லை..

25. அழகென்பது 

தன்னம்பிக்கை.

26. வீடு interiors and decoration
மிக ஆசை..ஆனால் பையன் கொஞ்சம் சுட்டி என்பதால் அவன் பொம்மைகளை தவிர வேறு எதுக்கும் இடமில்லை..சுவரில் இத்தனை நாள் அவன் கிறுக்கல்களே ஓவியம்..ஆனால் ஒரு பூவை கூட ஒரு இடத்தில் வைத்தால் வீட்டை அழகாக்கும் சூத்திரம் மிக பிடிக்கும்.


27. வாழ்க்கை குறித்து 
நதி போல அணைத்து, கழுவி, வீழ்ந்து, எழுந்து, வேகம் கொண்டு, சுழித்து, பயன் பெற்று, பயன் அளித்து..ஓடிக்கொண்டே கலக்க வேண்டும்.

28. recycling 
அதை என்பதை விட மினிமலிசம் நல்லது..தேவை இல்லாமல் சுமத்துவது லக்கேஜ் சுமக்கும் அபாயம் அதிகம்.

29. எழுத்தும் வாசிப்பும் 
அனைத்து எழுத்துகளும். போண்டா பேப்பர் உள்பட..

30.புகைப்படக்கலை (or)  உங்கள் பொழுதுபோக்குக் கலை
ஒரு கணத்தை ஓராயிரம் விழிகளுக்கு படைப்பது..அத்தனை எளிதல்ல அந்த கணம்..அதை மனதில் பிடிப்பதா, காமிராவில் பிடிப்பதா என்ற சண்டையில் காமிரா தோற்க நேரும்..மனமும், காமிராவும் ஒன்று சேரும் கணத்தில் காட்சி கவிதையாகிறது.

31. இவை தவிர நீங்கள் கூற விரும்புபவை...
ரசனை நொடிகள்..நிமிடங்கள் அழகு..வாழ்தல் மிக இனிது.

32. குங்குமம் தோழி இதழ் பற்றி உங்கள் கருத்துகள்
அனைத்துக்கும் இடம் அளிக்கும் இதழ். வெறும் சமையல் , குழந்தை

 வளர்ப்பு என்று இல்லாமல் அனைவரின் தைரிய , தன்னம்பிக்கை பக்கங்களையும் காட்டும் இதழ்..உண்மை சொல்ல வேண்டுமானால கொடுத்த காசுக்கு மேலயே கொடுக்கும் ஒரு பத்திரிக்கை..

33. குங்குமம் தோழி இதழில் இடம் பெற வேண்டிய புதிய பகுதிகள் / விஷயங்கள்

அரசியல்..இன்னும் விவரமாக..கவுன்சிலர் முதல் கனடா, பாரிஸ் அரசியல் வரை சுவாரசியமாக கூறலாம். பொருளாதார விஷயங்கள்.அழகான பொது கட்டுரைகள்..விவாதங்கள் இன்னும் லிஸ்ட் இருக்கு. பொதுவான இரு கருத்து உள்ள விஷயங்களை எடுத்து விவாதிக்கலாம். பொது பத்திரிக்கை போன்று உயரலாம். ஆண்களும் படிக்கும் பெண்கள் பத்திரிக்கை என்ற காலம் வர வேண்டும். இப்பவும் மிக நல்ல பத்திரிக்கைதான்.  முதன் முதலில் வெளியே கோட்டை தாண்டி வந்த பத்திரிக்கை நம் குங்கும தோழி என்பதில் பெருமையும்.

No comments: