Saturday, June 25, 2016

கவிதை எழுதுவது எப்படி?

கவிதை  எழுதுவது  எப்படி?   கவிஞ்சர்  ஆவது  எப்படி?

ஒரு  அனுதாப  பயணம்.

எல்லாரும்  கவிதை  எழுதறாங்க..நேற்று வந்த  ஸ்டேடஸ்  போடக்கூட தெரியாத  கத்துக்குட்டிகள்  கூட  கை மீறி  தொகுப்பு  வெளியிடும்  அளவுக்கு  போய்..தன்னலம்  பார்க்காமல் ஐந்து  வருடங்களாக  ஃபேஸ் புக்கில்  புகழ்பெற்ற   அஞ்சு பைசாக்கு  பிரயோஜனம்  இல்லாத  தன்னாலவர் வேலை  செய்யும்  நாம் முழிச்சிக்க  வேணாமா?

கவிதை  என்றாலே  காதல்தான்..அதுக்கு  முதல்ல பிடிக்க  வேண்டியது. நிலா..

காதல்  சிச்சுவேஷன்.. லிஸ்ட்  எடுத்தேன்.
நிலா
ரயில்
மலை.
மழை
(இப்படி சொன்னா  டோரா  சொல்ற  மாதிரியே  இருக்கே..நண்பர்களே  எங்கே திருப்பி  சொல்லுங்க) கவிதை  முக்கியம்.

நம்பர்  ஒன் நிலா..(மூணுக்கு  ஏன்  ஒண்ணுக்குனு சொல்றேன்னு  இந்த  மைன்ட்  வாய்ஸ் ..இத   கண்ட்ரோல்  செய்யணும்)
வெளியே  போய்  எட்டி  பார்த்தா  வெள்ளையா தகடு  போல  கொஞ்சம்  ஆங்காங்கே  மேடு  பள்ளத்துடன்  இருக்கு.. இதுல போய்  ஈர துணி  போல  கவிதையை  போய் பிழி  பிழின்னு  பிழியாறாங்களே  எப்படின்னு  யோசிச்சேன்..

ஆங்  நமக்கு தூர பார்வை வேணும்னு பிளானிடோரியம்  போய்  டெலஸ்கோப்பில் நிலாவை  பார்க்கப்  போனேன்.  ஒரு  மணி நேர  கியூ..சுத்தி என்ன  என்னமோ  பேசாறாங்க..  ஏங்க  கவிதைகள்  பற்றி  பட்டிமன்றம்  செய்யறீங்களா என்று  கேட்டேன்..உடனே  நோ, நோ..this year Indian  astronomers  may step up in moon..We r discussing about the advantages and disadvantages of moon mission from India..

அப்போ  இது  கவிதை  மிஷன்  இல்லையா..என்று  கேட்டுவிட்டு  பதில்  பார்க்காம  நிலாவை பார்த்துக்கிட்டே  வந்ததுல தடுக்கி விழ்ந்து  முகத்தில்  சிவப்பு நிலா.. லிஸ்ட்ல  நிலா அடிக்கப்பட்டது.

ரெண்டு  ரயில்.

சரி  ரயில பத்தி  கவிதைன்னு பேனாவும், பேப்பருமா ரயில்வே  ஸ்டேஷன்  போனேன்..ரயில்  பயங்கர  சத்தம்..அதுவும்  இல்லாம நிலையம்  முழுக்க ஒரே  முட்டு முட்டாய் கழிவுகள்.. நாத்தம்  வேற.. மூக்கை  பிடிசிகிட்டு  ஓடி வந்துட்டேன். ரயிலும்  கூன்னு லிஸ்ட்லேர்ந்து  ஓடிடுச்சு.

மூணு..மழை..
(குழந்தை ஒன்னுக்கு  அடிக்கிறாப்ல  விட்டு விட்டு  பெய்யுது..கவிதையாம்ல..மைன்ட்  அ  கழட்டி  தட்டி வைக்கணும்)
ஆடி  பார்த்தேன், ஓடி  பார்த்தேன்..நனைந்து  பார்த்தா  செம குளிரு..பல்லு தந்தி  அடிக்குது..சரின்னு கொண்டு  போன பேப்பரை வேஸ்ட்  பண்ண்ணாம போட்  செய்து விட்டு விட்டேன்..மழை  வரப்ப..பஜ்ஜி சாப்பிட்டு வடிவேலு  போல  மழை  கவிதை பேப்பரை எண்ணேய்  எடுக்கத்தான்  வருது..கவிதய  மழைக்குள்  நுழைந்து  தேடினா கூட கிடைக்கல்..

நான்கு..  மலை  பிரதேசம்(டோரா  வாய்ஸ்)
.  ஊட்டி  போகும் சான்ஸ்  வந்துச்சு...விடுவேனா..ஒஜு  குளிர்  கண்ணாடியில்  ஒஜு  என்று  எழுதினான்..ஆக   வந்துடுச்சு  வந்துடுச்சு  என்று  கத்தினேன்..

வீட்டுல  லேசா  கண்ணு திறந்து  பார்த்து  வந்தா போ..ஏன்  கத்தற என்று  திரும்ப  குமபகர்ணன் மோடுக்கு..போக..இனிமே கும்ப  ராசி  நேயர்களை  கல்யாணம் செஞ்சுக்க கூடாது  என்று அவசரமா  தீர்மானம்  போட்டேன்..

சரி  கவிதை  மிஷனை  விடவே  கூடாது..

"குளிரும்  கண்ணாடியில்
உன் பெயர் செதுக்கினேன்
பூத்திருக்கிறதே
அடடே'

   எப்படி  ஒரு  காதல் கவிதை..என்னை  நானே  மெச்சிக்கொண்டே  பயங்கர  சந்தோஷமா ஒரு  பக்கிக்கு அனுப்பினேன்.. அது  என்னை  கன்னாபின்னா  என்று  திட்ட  அப்படியே  வடிந்து விட்டது.
முயற்சி உடையார்  இகழ்ச்சி  அடையார்  என்று  வேதாளம்  தேடி கிளம்பினேன்..ஒரு  விக்கிரம்மாதித்தியளாய்..

சரி..காதலுக்கு  என்ன வேண்டும்  ...ஆகா..அது  ஒரு உணர்வு..அதானே  வேணும்..அது  இல்லாம  எப்படின்னு  ..சரி  எப்படியாவது  காதலிக்கனும்னு  முடிவு  எடுத்துட்டேன்.. 

"காதலிக்கணும்"..வார்தையிலையே  காதலி  இருக்காளே..ஆகா..கவித..கவித.
காதல் பீல்..  கொண்டு வந்து  கொண்டு  வந்து   நாம  ஹாப்பிலி  எவர்  ஆப்டரா  ஆயிட முடிவு  செய்தேன்..நாம்தான்  பீல்  மேல்  ஆச்சே..

நேரா  போய்..டேய்  டேய்  என்றேன்..யார்  இது  என்ன  மரியாதை  இல்லாம..பேசறே..இல்ல.இப்படிதான்  பேசணுமாம்  ..சின்ன  பசங்க  சொன்னாங்க  என்றேன்..சரி  சரி  வேலைய  பாரு என்று  கிளம்பிவிட்டார் ..என்ன  பார்க்கிறது..

ஆங்..அடுத்து ரொமாண்டிக் லுக். பார்த்து  பார்த்தே  கவிதை  எழுதணும்..ஒரு  கவிதைத் தோழி  எழுதியிருந்தா.."குறைந்தபட்சம்  உன்னை கவிஞர்  கூட  ஆக்காவிடில் என்ன  காதல்  அது" ..(Sridevi Ramya) என்று..இன்னொரு  தோழியோ.."இந்த அன்பு காதலை கூட   கொண்டு வராவிடில்  என்ன அன்பு"   என்றாள்..இந்த   கோட்  லாம் நல்லாத்தான்  இருக்கு..இனிமே  காலை  வேளையில்  கத்தாம  காதலோடு  பார்க்கணும்..பாவம்  இன்னும்  அன்பா இருந்தா அது  வந்துடும்..நாமும்  கவிதையா  போட்டு  ஐநூறு  லைக் வாங்கிடனும்..என்று  தீர்மானம்..
அடுத்து  ரொமாண்டிக்  லுக்..கண்ணாடி  முன்  நின்று  தினமும்  பிராக்டீஸ்  செய்ய  வேண்டும் என்று  வித  விதமாய்  பார்த்தேன்..கண்ணில்  காதல்  வழிய  ஒரு  பார்வை  எனக்கே  பிடிக்க  நானே  கண்ணாடியை  பார்த்து திருஷ்டி கழித்து..அடியே  ராசாத்தி  உன்னை  பார்த்தா உனக்கே  காதல் வரும்..போ  போ..இந்த லுக்கோட போனா பீல்  வந்து  பீல்மேல் கவிதைதான்..அடுத்த வருஷம் தொகுப்புதான்..விழாக்கு  அந்த கவிதை பிரபலத்தை  கூப்பிட்டா   ஆயிரம் பிரதி  கியாரண்டி..(அவரோட  புத்தகமே  நூறுதான்  போயிருக்கு என்ற  விவரம்  எனக்கு  இன்னிக்குதான்  தெரிஞ்சுது)
ஆங்..ட்ராக்  மாறுது,..

ரொமாண்டிக்  லுக்..இரவு  சாப்ட்டு வரப்ப  சரியான  நேரம்..என்று  பார்வையை  சரி  பண்ணிக்கிட்டு  எதிர்த்தாப்ல இருக்கிற  சோபால  தலையை  லூஸ்  ஹேர்ல விட்டு, செமையா  ட்ரெஸ்  பண்ணிக்கிட்டு கால்  மேல  கால் போட்டுக்கிட்டு உக்காந்தேன்.

என்னம்மா, என்னம்மா என்றார்..மனசுக்குள்..ஆகா..காதல் பொங்க போகுது..பார்வைகள் சந்தித்து  மோதி..பிரளயம் வெடிக்கும்..அதிலிருந்து  காதல்  கவிதைகள்  பிறக்கும்..என்று  மனசுக்குள்  பட்டாம்பூச்சிகள்  பறக்க..

என்னடி  நல்லாருக்கியா என கேக்க..எத்தன நாளாச்சு..நம்ம நேர்மறை  சிந்தனைக்கு  கிடைத்த வெற்றி..ரகசியம் புத்தகம்  சொன்னது  போல. சக்தி  வேலை  செய்து..என்று  சூரியன்  வெள்ளிச்சம் அடிச்சுது..சாதிச்சிட்டோம்ல. ..என்ற கர்வத்துடன்..அந்த  ரொமாண்டிக்  லுக்  கை தொடர்ந்தேன்..

"என்னடி  செய்யற..இப்படி  பார்க்காதே..என்னமோ  போல  இருக்கு"  (இன்னும்  என்னை  என்ன  செய்ய  போகிறாய்  சிச்சுவேஷன்  டியூன்  வேற  மைன்ட்ல ஓடுது ) என  சொல்ல..ஆஹா...இப்படியே  பிக்  அப்  பண்ணி  இந்த  பீல் ல  பத்து  கவிதைகள்  போட்டுடனும்னு மைன்ட்  வாய்ஸ்  திரும்ப சொல்ல.. "உங்களதாங்க அன்பா பார்த்துகிட்டு  இருக்கேன்"  என  நான் சொல்ல.. அவர்  கண்கள் மின்னும்..காதல்  பிறக்கும்..உணர்வுகள்  பொங்கும்..டுயட்  சிச்சுவேஷன்  இன்னும் தேடனும்..என்று ஒரே  கற்பனை  கவிதைகளா ஒடிச்சு...அப்படியே  சினிமாக்கும்  லிரிக்ஸ்  என்று  தறிகெட்டு  ஓடுது..எண்ணம்...அங்க..முதல்   முறையா  என்னை  பார்த்து  கலங்கிவிட்டார்..பேஸ்புக்  பைத்தியம் பிடிக்கும்னு நினைச்சேன்..இப்படி மோட்டு வளைய  வெறிச்சு வெறிச்சு  பார்க்கிற  அளவுக்கு முத்தும்னு  நினைக்கல.ன்னு  சொல்ல..தல  சுத்திடுச்சு.. "உங்களைதான்  பார்த்துக்கிட்டு  இருந்தேன்  மாமா" ன்னு  சொல்ல..தலை தெறிச்சு..தெறி படம்  பார்த்த  மாதிரி  ஓடறார்.

காதல் பிக் அப்  செய்ய  போனா..ஓடின  வேகத்துல கார்ல  போய் பிக்  அப்  பண்ற  நிலைமை  ஆயிடுச்சு.

முத்தும்..ஆக...அவர்  வாயாலையே  பாயின்ட்  எடுத்து  கொடுக்க.ஆங்  முத்த  கவிதை..இனிமே  இவங்க  ஹெல்ப்லாம்  இல்லாம சொந்தமா  யோசிக்கணும் என்று களத்தில் இறங்கினேன்..

"முதுகில் முத்தம்
ஜில்லென்று
இறங்கி கரையும்
ஐஸ்  கத்தி போல".

இதையும்  அந்த  பக்கிக்கே  அனுப்பி வச்சேன். ஏண்டி..முதுகுல  கத்தியால  கதற  கதற  குத்தற..முடியல்.. ..பீல் இருக்கணும்டி..என்று  ரிஜக்ட்  செய்ய..கிரர்ர்ர்ரர்ர்ர்ர்..ஆனால்..மனதுக்குள்  ராபின்  ஷர்மா  வந்து வெற்றி, விடா முயற்சி  கிளாஸ் எடுக்க  கவிதை நோக்கிய  பயணம்  நிற்கவில்லை.

வெண்பா  என ஒருத்தர்  தூண்டி விட..

"கற்க  காதல்  கசடற கல்லாவிடில்
கவிதைக்கு கெஞ்ச  தக".

இது  என்னனு  அந்த  பக்கி  கேட்டுச்சு..குறள் வெண்பாவில்  காதல்..அது  ப்ளாக் பண்ணிட்டு  போக.காதல் கவிதை  படிக்க வேற  பக்கி   தேட  வேண்டிய நிலைமை.

சரி  வராத  காதலை  வா  வான்ன  எப்படி வரும்..எப்படியாவது..சிச்சுவேஷன்  கவிதை  எழுதிடுவோம்னு  மண்டைய உடைச்சேன்..அப்போ  சிச்சுவேஷன்  என்னன்னா பர்பிள் லெக்கிங்க்ஸ்  காணாம போய்  தேடிகிட்டு  இருந்தேன்..வெளியே நாலு இடத்துக்கு  போய்  வந்து பிரயோஜனமில்லை..இருக்கிற  சிச்சுவேஷனை  பிடிச்சு  ஏறிட  வேண்டியதுன்னு  முடிவு  பண்ணிட்டோம்ல.
பர்பிள்  ..ஆங்  கத்திரி  பூ  கலர்..வெளிர், அடர்  என்று..இடையில் இருக்கும் நிறம்..இடர் ன்னு வரும்மா தமிழில்  என்று யோசித்தேன்.

"அடர்  கத்திரி காலை அழுத்த
இடர் செய்யும் அலமாரியை அகற்றி
படர்ந்திருந்த" 
.ம்ஹூம் அடி..முதல்லேர்ந்து..

"நான் அடர் கத்திரிப்பூவைத்தான்  தேடினேன்
பச்சை, நீலம், சிவப்பு கலைக்க
வெள்ளை, கருப்பு வா வா என கண் சிமிட்ட
நான்  கத்திரிப் பூவைத்தான்  தேடினேன் ..

நாளை கரும் மஞ்சளாக இருக்கலாம்
நேற்று  இளம் ஆரஞ்சாக இருக்கலாம்
நான் அடர் கத்திரிப் பூ வதான் தேடினேன்...

கதவின் இடுக்கில் எட்டி பார்க்கும் துப்பட்டாவை
நகர்த்தி வைத்தலில் பெண்ணியம் மிளிர 
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.

அடுத்த, முன் பொழுதுகளின்  பொருத்தம்
பொருத்தமற்று  போகும் கணத்தில்
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.

நிறமென்பது  நிறமில்லாததும்
கத்திரி   என்பதெல்லாம்  கத்திரி அல்ல.
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.
நானே  அந்த  கத்திரி ப்பூ  என்றறியாமல்."

வந்து  கொட்டிக்கிட்டே  இருக்கு..ஆஹா  கவிதை  வந்துடுச்சு..என்று  இன்னும்  நாலு சிச்சுவேஷன்..அப்புறம்  நாலு  போட்டோ  எடுத்தேன்..அருவி  போட்டா..
" உன் ஷேவிங் கிரீம் நுரையாக
அருவி  நீர்.. நிற்கும் கணத்தில்
மணம் நனைத்தது"..

ஆஹா..அருவி  நுரையும்..ஷேவிங் நுரையும்..வெள்ளை வெள்ளை..பிடிசுட்டோம் ;ல..இனிமே  என்னை  யாரும் தடுக்கமுடியாது..நானும்  கவிஞ்சர்  ஆகிட்டேன். பெண்ணியம்..பித்தளை  கவிதைகள்  போட்டு  பிரபலமாவதே  லட்சியம் இனி.
ஒரு  கவிஞர்  உருவாகி  விட்டார். 
.



16 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை... பதின்மத்தில் குரல் உடைந்த எழுத்துப் பரிமாணம்...

kadhaikkalam said...

கவிதை மனம் நனைத்தது....

ஆகா தொடருங்கள் முதல் பதிப்பு எனக்கு தான்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமை. நீங்க கவிஞர் தான்

chandrasekaran said...

வேண்டாம் இந்த விஷ பரிட்சை. விட்டு வெளியே வாங்க...

Unknown said...

ஹா ஹா ஹா ஹா.. கவிதை அருமை.. / சூப்பர்.. சூப்பர்.. செம ஹ்யுமர்...... தொடர்ந்து எழுதுங்கள்....

கோகுல் said...

மணம் நனைத்ததா

எனக்கு டி ஆர் பாடல் தான் ஞாபகத்துக்கு வருது

என் மனம் எங்கும் மணம் வீசுது

தெரிசை சிவா said...

கவிஞி

Behind the shadow..!.? said...

இது ல இவ்ளோ கஷ்டம் இருக்காங்க....பாவம் கவிஞர்கள்....

kesav said...

Kadhal Kalam! Kavi Kalam!! Irandum super Kirthika!! Vazhthukkal

சிவன் said...

எழுதித் தள்ளிட்டாலும். . . வயசான காலத்துல போய் பேரன் பேத்திய படிக்க வையும்மா :P

sathishsangkavi.blogspot.com said...

சீக்கிரம் ஊரைக்கூட்டி கவிதாயினி பட்டத்த்தை கொடுத்திடவேண்டியது தான்...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலே!
வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்க முடியுமா என்ன? வாழ்ந்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவரவர் அனுபவங்களில் வாழ்வது தானே வாழ்க்கை?
அதுபோலக் கவிதை எழுத சொல்லிக் கொடுத்தெல்லாம் சரிவராது தங்கையே! எழுதிஎழுதி, படிச்சு படிச்சு, கத்துக்கிட்டே இருக்கவேண்டியது தான்! இருந்தாலும் உங்கள் பதிவு படிக்க சுவாரசியமாக இருந்தது. தொடர்கிறேன், தொடருங்கள். வாழ்த்துகள் மா.

aana067 said...

இந்த பதிவு,அப்படியே என்னை ஒரு ஐந்து வருடங்களுக்கு பின்னால் இழுத்துச் சென்று விடுகின்றது. அப்போது, எனக்கும் கூட காதல் மூலம் கவிதைகள் அரும்பின. ப்ளக் கூட எழுதியிருப்பேன். கால மாற்றத்தின் விளைவாக அதை மறந்துபோய் விட்டிருந்தேன். காலங்கள் கடந்து இன்று அதை மீண்டும் தட்டிப்பார்த்தப் போது, ஒரே சிரிப்பாகவும் எரிச்சலாகவும் வருகின்றது. நான் எனது சிந்தனை வடிவத்தை மாற்றிக்கொண்டு வருடங்கள் ஓடிவிட்டன.

உண்மையில் கவிதை என்பது , உள்ளத்தில் உள்ளது/ உணர்வுகளின் வெளிப்பாடு என்றாலும் கூட, சமூக சிந்தனைக்கு ஊட்டமளிப்பதாக அமைகின்ற போதே அது சிறந்த கவிதையாக உருவெடுக்கின்றது.

//கவிதைகள் கற்பனையாகத்தான் இருக்க வேண்டுமா
யதார்த்தங்களாக இருக்க கூடாதா//

//நீரில் விழுந்ததற்காய்
நிழல் ஒன்றும் நனைந்து விடுவதில்லையே//

Unknown said...

very neat narration ji

Amirtham surya said...

வாசிக்க சுவையா டீன் ஏஜ் கலாட்டாவோடு மார்கழி கால விடியற்காலை டீ போல கதகதப்பான எழுத்து கிருத்திகா...கவிதை வரலேன்னா என்னா கட்டுரை வருதே அது போதும்..ஆனாநீ எழுதும் முதல் அச்சுக்கு வரும் கவிதை எங்க கல்கியில் தான்..இதை மீறினா ஃப்ரெண்ஷிப் கட்டு..எச்சரிக்கை...உன் நண்பன் அமிர்தம் சூர்யா