Friday, May 15, 2015

மலையகத் துயரமும், பெங்களூர் கூட்டமும்.

"தோட்டக்காட்டீ"

மலையக தமிழர்களின் துயர சரித்திரம்.

இதை எழுத நமக்கு எந்தளவுக்கு தகுதி இருக்கு என்று கேள்வி கேட்டுக் கொள்ளும் நேரம்.

ஒரு மூன்று மணி நேரம் என்ன செய்யும்..

அப்படியே ஆணி அடித்து உக்காரச் செய்தது..

மூன்று நபர்கள்..அதில் ஒருவர் சாட்சி..அத்தனையும் எழுத்தில் கொண்டு வந்தவர்...இன்னொருவர் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவர்..இன்னொருவர்..பாதிக்கப்பட்ட மக்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தின் பிரதிநிதி..

இந்த முறை பெங்களூரு மாதாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட புத்தகம்..தோப்புக்காட்டீ..

எரியும் பனிகாட்டின் இலங்கை சரித்திரம்.. பரதேசிக்களின் பஞ்சம் பிழைக்க சென்ற அவலம்..

இருநூறு வருடங்களுக்கு முன் சென்ற தமிழர்களின் துயரம்..

இன்றும் கொஞ்சம் கூட முன்னேறாத சமூகத்தின் சோகம்..

இன்று கார் கடந்து  சென்றால் கூட சேற்றில் இறங்கி மரியாதை காட்டுவார்களாம்.

எப்பவும் தலை குனிந்தே இருப்பார்களாம்..

பள்ளிக் கூடங்கள் இன்றும் அதிகம் எட்டிப் பார்க்கவில்லை..

லயம் எனப்படும் எந்த வசதியும் இல்லாத வீடுகளில்தான் குடியிருப்பு..

பிள்ளை மடுவம் என்று ஒரு இடம்..அங்கு புதிதாக பிறந்த குழந்தைகளை தாய்மார்கள் தூளியில் போட்டுவிட்டு பால் சுமந்த நெஞ்சு வலிக்க  தேயிலை பறிக்க வேண்டுமாம்..பிள்ளை மடுவதுக்கு பராமரிக்க பணமும் கொடுக்க வேண்டுமாம்..

அட்டை பூச்சிகள் இல்லாத நாட்டை கண்டிராதவர்களின் வாழ்வும், உழைப்பும் இன்றும் அட்டை முதலாளிகளால் உறிஞ்சப்படும் அவலம்..

ஒரு சேஞ்சுக்கு இந்திய முதலாளிகளும் களம் இறங்கி உள்ளார்கள் போல..

சிங்களவரை திருமணம் செய்துக்கொண்டால் கூட ஏற்றுகொள்ளும் தமிழ் இனம்..தோப்புக்காட்டியை வீட்டில் சேர்ப்பது இல்லை..

பட்டினிக் கோடுகளை மட்டும் பார்த்தவர்களின் உடலில் துரோக கோடுகள் வரையப்பட்டு ஒதுக்கப்படுகிறார்களாம்..

அதையும் விட முள்வேலி முகாம்களில் கூட ஒதுக்கப்பட்ட இனமாகவே இருந்தனராம்..

கதைகள் கேட்க கேட்க மனம் பதறியது..நாம் ஒன்றும் இதில் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் நம் மக்களுக்கு குரல் கொடுக்க எத்தனையோ தலைவர்கள்..அத்தனை எளிதில்லை இங்கு அடிமைப்படுத்தல்.

இரா.வினோத் தோட்டக்காட்டீ  புத்தகம் வலி மிகுந்த கவிதைகளால் நிரம்பியது..அவர்களின் வாழ்கையை நேரடியாக களத்தில் நின்று பதிவு செய்து இருக்கிறார். அவர் அங்கு ஒரு இரவு படுத்து எழுந்தப்பொழுது அட்டைகளால் வெள்ளை சட்டை சிவப்பாக மாறியதாம்.. ஆனால் அவர்கள் வாழ்வே அங்குதான். சோளகர் தொட்டி, எரியும் பனிக்காடு  போன்ற  புத்தகங்களின் விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் நினைவுக்கு வந்து சென்றது..

இன்று சாய் பாபா வை வழிபடவும் ரஜினியை துதிக்கவும் அறிந்து வைத்து உள்ளதைப் போல..தங்கள் உரிமைகளை பற்றி அறியாமல் கைகட்டியே பேசுகிறார்கள் என்று தெரிய வந்தது. நடேச அய்யர், முதன் முதலில் பள்ளிக் கட்டிய ஆசிரியர், அவரின் மகன் எழுத்தாளர் ஜோசப் (என்றே நினைவு) என்று பல கிளைக் கதைகள் விரிந்துக் கொண்டே சென்றது...அசைய முடியவில்லை..உணர்வுகளால் சிறை வைக்கப்பட்டு இருந்தோம் அனைவரும்.

இன்னொன்று இனம் கருவறையில்  அழிக்கப்படுவது கூட உணரா மக்கள்..எத்தனையோ வருடங்களாக இவர்களின் மக்கள் தொகை ஏறவே இல்லையாம்.. கொடுமை.

கூட்டத்துக்கு வந்திருந்த மலையக தமிழர் லோகேஷ் சொன்ன விஷயம்..அவர்கள் இந்திய வம்சாவளியாக இந்திய அரசாங்கம் அவர்களை ஏற்றுக்கொண்டு வருடத்திற்கு நூறு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியும் அதைப் பற்றி தெரியாததால் சிங்களவர்கள் கூட அதில் படிக்க வந்துவிடுகிறார்கள். அடுத்து அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதது..அடுத்து எட்டாம் வகுப்பு வரை படித்தால் கொழும்புக்கு அல்லது யாழ்பாணத்துக்கு வீட்டு வேலை செய்ய அனுப்பிவிடுவார்களாம்..மிக குறைந்த அளவுக் கூட கல்லூரிப்பக்கம் எட்டிப்பார்ப்பது இல்லை.

யாழ்பாண தமிழர் அருள் சொன்ன விஷயம்..தோட்டக்காட்டிகளை வேலைக்கு வைத்துக் கொள்வோம்..தனியே பின்னாடி இடம் கொடுத்து..ஆனால் சமூகத்தில் சரியான இடமெல்லாம் கிடைக்காது என்று வருத்தத்துடன் கூறினார்.  தோப்புக்காட்டன் என்றுதான் விளிக்கப்படுகிறார்கள் இன்றும்..வீட்டிற்குள் இன்றும் அனுமதியில்லையாம். இந்திய வம்சாவளி ஒரு இழிநிலை சமூகமாக  மாற்றப்பட்ட துயரம்.

மூவரின் பேச்சுகளும் எல்லாரையும் அசைத்தன...எழுத்தாளர் பாவண்ணன் சார்..எழுந்து மூவரையும் கட்டித் தழுவினார்..உங்கள் மூவரையும் நம் சமூகத்தில்  காசிக்கு சென்று விட்டு வந்தவர்களைப் போல எப்படிப் மரியாதையோடு போய் பார்ப்போமா அப்படி  பார்க்கிறேன் என்றார்..அவரும்  உணர்ச்சிவசப்பட்டு இருந்தது கண்களில் தெரிந்தது.

கிளம்பி வரும்பொழுது வார்தைகள் என்னிடம் ஏதுமில்லை..நன்றிகள் சொன்னதாக நினைவு..வீட்டுக்கு வந்து குழந்தைக்கு புத்தக போட்டோக்கள் காட்டி துயர சரித்திரத்தை கதையாக கூறினேன்..

இந்த இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தில் இருந்து கண்களை அசைக்க முடியவில்லை. புத்தகம் முழுக்க அவர்களின் வாழ்க்கை பதிவுகள் அபூர்வ புகைப்படங்களுடன்..


"கனல் தெறிக்கும்
காட்டுப் பனியில்
வந்து வெடித்த
முலைக் காம்பில்
பிள்ளை மடுவ முற்றத்தில்
அவசர அவசராமாய்
முட்டி முட்டிக் குடித்த
பிள்ளையின் வாயில்
தோய்ந்திருந்தது
தோட்டிக்காட்டீயின்
ரத்தம் ! "

இப்படி கடின வாழ்க்கையின் துயர பக்கங்களை   அள்ளி வீசி சென்று இருக்கும் கவிதைகள்..

நமக்குதான் அது கதை, கவிதை, உணர்வு...ஆனால் அதுதான் அவர்களுக்கு வாழ்க்கை..ப்ச்..






4 comments:

ஷாஜி said...

சிறப்பான பதிவும் பகிர்வும்.. உரையாடியதையும் விதயங்கள் பரிமாற்றத்தையும் நன்கு உள்வாங்கி எழுதியிருக்கிறீர்கள்.கடைசி கவிதை மொத்தத்தையும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டது . நல்ல பதிவு

கிருத்திகாதரன் said...

நன்றி ஷாஜி பாஸ்.

மாறன் said...

//வீட்டுக்கு வந்து குழந்தைக்கு புத்தக போட்டோக்கள் காட்டி துயர சரித்திரத்தை கதையாக கூறினேன்..// அருமை மேடம்

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது.