Monday, June 2, 2014

வனம் புகும் மனம்.



வனம்..வசீகரிக்கும் வார்த்தை..பந்திப்பூர் போக திட்டமிட்டவுடன் வன அழகி மனதில் அமர்ந்து கொண்டாள்..இயற்கையை எந்த இடையூறும் இல்லாமல் ரசிப்பது வரம்.

வரிசையில் நிற்கும் வேளையில் குழந்தைகள் ஒரு ஜீப்பில் அமர்ந்து விளையாடினார்கள். ஓட்டுனரை விசாரித்தவுடன் ஜீப் தனியாக வாடகைக்கு கிடைக்கும் என்றவுடன் மகிச்சியுடன் நாங்களும், இன்னொரு குடும்பமும் அவசர உடன்பாடு செய்து தனியாக வாடகைக்கு அமர்த்தினோம்.

காத்திருக்கும் நேரத்தில் அந்த குடும்பத்தினரிடம் பேச்சு கொடுத்தேன். அவர்கள் கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலும் இயற்கை சுற்றுலா கிளம்புவார்களாம்..கபினி போங்க..அது போன்ற அனுபவம் எங்கும் இல்லை என்றும் சொன்னார்கள்.

ஜீப் காட்டுக்குள் பயணித்தது..குறுக்கே பன்னி கூட்டம்..குட்டிகள் மிக அழகு..ஆனால் மந்தை போல கூட்டமாய் சென்றது..எப்படி இத்தனை குட்டிகள் என்ற ஆச்சரியம்..காட்டு பன்னிகளிடம் ஒரு அழகு..அடுத்து வழக்கம் போல எக்கச்சக்கமாய் மான்கள்.





பாம்பு ஒன்று மிக வேகமாய் புற்றுக்குள் போனது...மேலே பார்த்தால் பாம்பு தின்னும் கழுகு சுற்றிக்கொண்டு இருந்தது.. பாம்பாய் பாதுகாப்பு விஷம் தேக்கியும் எதிரிகள்  சுற்றிகொண்டுதான்..மனித வாழ்க்கை எத்தனை எளிமை..ஒவ்வொரு நிமிடமும் தப்பி பிழைக்கும் போராட்டம் இல்லை..அதற்கு பதிலாக நாமே போர், மாசுப்படுத்தல், கொலை,விபத்து, நோய், கெட்ட பழக்கங்கள் என்று உருவாக்கி தற்கொலை செய்து கொள்கிறோம்..இயற்கையின் சமநிலை விதியாகவும் இருக்கலாம்.

வண்டி தடத்தை தவிர எதுவுமில்லை..வனம் புகும் நிகழ்வு அற்புதம். ஏதோ ஒரு காலத்தில் நம் மூதாதையர்கள் ஏதோ ஒரு வனத்தில் வசித்து இருக்கிறார்கள். நம் தாய்மடி வனம். ஜீப் தடத்தை தவிர அனைத்தும் அடர்வனம்..பெயர் தெரியாத மிக அழகிய பறவைகள், காட்டெருமைகள் மேய்ச்சல் . வித வித மான்கள் காட்சிகளாக விரிந்தது. மானின் கண்கள் எப்பவும் ஒரு மிரட்சியை தேக்கி வைத்து இருக்கிறது..மருண்ட பெண்கள் போல...

மாலை வேளை..ஓட்டுனர் நீர் குட்டைகளை சுற்றி சுற்றி வந்தார். நிறைய மிருகங்கள் தென்படவில்லை. ஆனால் பயணத்தில் ஒரு காட்சி..அடர் வனத்தின் நடுவே தீ சுட்ட பாலை..ஆம் காட்டுத்தீ அறுநூறு ஏக்கர்களை நாசம் செய்து இருந்தது..எந்தனை பறவைகளின் வசிப்பிடமோ..எத்தனை குரங்குகள் இறந்தனவோ..கணக்கில் அடங்காத இழப்பு..தீ அணைப்பு வண்டி வந்து நிறுத்தி இருகிறார்கள்..மூங்கில் மரங்கள் உரசுவதால்  ஆன தீயாக இருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

அதிகம் மிருகங்கள் இல்லாதது கூட அதிர்ஷ்டம்..இன்னும் அடர் வனத்துக்கு அழைத்து சென்றார். வண்டியை நிறுத்த சொன்னேன். நாங்கள் சென்றது ஓபன் ஜீப் ..வாக்கி டாக்கி இருக்கு ஆபத்து இல்லை என்று டிரைவர் சொன்னாலும் சிறு திகில்  மனதுள்.

முக்கியமாக வனத்தின் ஓசையை அந்த நல்ல காற்றுடன் சுவாசித்து அமைதியாக கேக்க வேண்டும் என்ற ஆசை.. முதல் நாள் மழையால் வனம் பச்சை போர்த்திக்கொண்டு இருந்தது. ஜீப் அணைந்தவுடன் கிரீச் சப்தங்கள்..இரவில் கிராமத்தில் கேக்கும் பூச்சி, மழை தவளை சத்தங்கள் போல்தான்..வித்தியாசமாக எதுவும் இல்லை..இருப்பினும் அடர்வனமும், பச்சை நறுமணமும், தனிமையும், சிக்னல் இல்லாத செல்போனும்,குளு,குளு அரவணைப்பும், திறந்த வண்டியும்..ஒரு திகிலை, அழகை, ஆரவாரமில்லாத அமைதியை, பரபரப்பை, அன்பை, தாய்மடியை, மனதுக்கு பிடித்த நறுமணத்தை,  சொல்ல முடியா உணர்வுகளை அள்ளி தந்தது.

மிருகங்கள் நுண் உணர்வுகள் கொண்டவை..தூரத்தில் கேட்கும் சிறு சத்தம் கூட அவற்றை விழிக்க வைக்கும்..அதனால் பெரும்பாலும் வன சுற்றுலா யானை, காட்டு மாடுகள், மான்கள், குரங்குகள், பறக்கும் பறவைகளோடு முடிந்து விடும்.

திரும்ப வரும் வழியில் தீ அழித்த இடம்..அது நெடுஞ்சாலையில் இருந்து  ஒரு கி.மி க்குள் இருந்ததால் மனதில் பல சந்தேகங்கள்..
குழுக்கள் ஆட மூட்டப்ட்ட தீயாக  (camp fire)  இருக்கலாம் என்று..பலர் விடுமுறைகளை குடித்து கும்மாளமிட கூட்டம், கூட்டமாக வருகிறார்கள்.ஜங்கிள் லாட்ஜ் விளம்பரங்கள் எங்கும்.. குதூகலமாக இருப்பது அவரவர் இஷ்டம்..ஆனால் அது அடுத்தவரை பாதிக்க கூடாது. மனிதர்கள்  எப்பவுமே அடுத்தவர்களை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்..அங்கு வசித்த ஆதி பழங்குடிகளை வெளியேற்றியதால் வாழ்விடம் போய்  சாதாரண மக்களோடு கலந்துவிட்டர்களாம்..இந்த தலைமுறை வனத்தை மறந்துவிட்டார்கள். சந்தோஷ, சுதந்திர வாழ்கையை விட்டுவிட்டு அரசாங்கம் கொடுக்கும் சிறு வீடுகளிலும், அவர்கள் தரும் சொற்ப உதவிகளிலும் காலத்தை ஒட்டுவதாக கேள்வி.
 வனம் என்று இல்லை..அனைவருமே சொந்த வசிப்பிடத்தை விட்டுவிட்டு வாழ்கிறோம்..வாழ்கிறோமா என்று கேள்வியுடன்..ரிலாக்ஸ் வேண்டும் என்று தேடி செல்கிறோம்..போகிற இடத்தில் அங்கயும் அழிப்பு வேலையை செய்கிறோம்..
நிம்மதியாக வாழும் விலங்குகளை தொல்லைப்படுத்தி வன சுற்றுலா தேவையா என்றும்..வரும் தலைமுறையினற்கு வனம் தெரிய வேண்டாமா என்றும்..மனிதனின் கால் பட்ட இடங்கள் எல்லாம் அழிவின் வளர்ச்சி ஆரம்பம் ஆவதையும் நினைத்து சிந்தனை குழப்பத்துடன் வெளியே வந்தேன்..

"மௌன வனம் கண்ட மனம் இரைச்சலாய் சப்தமிட்டது"


"கால்நடைகளால்
வீழாத புல்வெளி
கால் நடைகளால்
அழிய ஆரம்பித்தது 
மனிதனுக்கு  
காலன் கால்கள்"



1 comment:

DD said...

கிர்த்திகா ரொம்ப அருமையாக நானும் உங்களோடு பயணித்தேன் ,நன்றி