Friday, July 10, 2015

காதல் நட்சத்திரங்கள்.

இணையத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சைக்காலஜி பக்கத்தில் கண் நின்றது. காதலில் உள்ள உண்மை என்று வெளிநாட்டு மனவியலார் எழுதி இருந்தார்.

வெளிநாடுகளில் பொதுவாக காதலித்து, கொஞ்ச நாள் லிவிங் டுகதரில் வாழ்ந்துவிட்டு பிறகு ஒத்து வந்தால் மட்டுமே திருமணம்..சில சமயம் குழந்தைக் கூட பிறக்கும்..ஆனால் அத்தனை எளிதாக திருமணத்தில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.

பையனுடன் டூர் வந்திருந்த அமெரிக்க குழ்நதைகளுடன் டின்னர் சாப்பிட்டேன்..இத்தனை வருட திருமணம் எப்படி சாத்தியம் என்று என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்..அதைவிட் அவர்களுக்கு பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம், டைவர்ஸ் பற்றியே நாம் யோசிக்காதது, திருமணத்தில் ஏற்படும் செலவுகள், சாஸ்திர சம்பிரதாயம் எல்லாம் வாயை பிளக்க வைத்தன..

எப்படி டேடிங் பண்ணாமல் திருமணம் செய்து கொள்ள முடியும் ..அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..ஆனால் ஒரே கணவனுடன் வாழ்வது சாத்தியமா என்று என்னிடம் கேட்டப் பொழுது என் கணவருக்கு ஒரே மனைவியுடன் வாழ்வது சாத்தியம் என்னும் பொழுது எனக்கும் அது சாத்தியம் ஆகிறது..என்று சிரித்துக் கொண்டு அந்தக் கேள்வியை கடந்தேன். இதெல்லாம் பையன் சிரித்துக் கொண்டே வேடிக்கைப் பார்த்தான்..கடைசியில் அவன் எங்க வீட்டில் அம்மா அப்பாவோடு மட்டும் இருவது வருஷமா இல்லை..என் பாட்டியுடன் கூடதான் என்று சொல்ல அவர்கள் மயக்கம் போட்டு விழாத  குறை..

இந்தக் கட்டுரைக்கு வருகிறேன்..இவர் இந்திய தம்பதியை பார்த்து சந்தித்த நாளும், திருமண நாளும் ஒன்றா..அந்த ஒரு நாளில் எப்படி வாழ்கையை அர்பணிக்க முடிந்தது என்று எல்லா வெளிநாட்டவர்கள் போல கேள்விகள்..ஒரு தம்பதி இல்லை..பல இந்திய தம்பதிகள்..அதுவும் இருவது, முப்பது, நாற்பது வருடங்கள் ஒன்றாக வாழ்பவர்களை பார்த்து வியந்து இருக்கிறார்.
அனைவரும் ஒன்றுப் போல சொன்னது..பெரியவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும் எனவே சரியான பொருத்தம் தேர்ந்து எடுப்பார்கள், நாங்கள் பெற்றோர் பேச்சை தட்டம்மாட்டோம், பெற்றோர்களிடம் மிகுந்த அன்பு வைத்து இருக்கிறேன்..அவர்களுக்கும் என்னிடம் அதிக அன்பு..எனவே அவர்கள் சொல்லுபவரைதான் திருமணம் செய்துக் கொண்டேன்..எங்களுக்கு எது பொருத்தம்...இந்த சமூகத்துடன் எப்படி ஒருங்கிணைந்து வாழ்வது என்பதை பற்றி பெற்றோர்கள் அனுபவபட்டவர்கள்..அவர்கள் பேச்சை கேப்பதில் தவறில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ஏன் இதுப் போன்ற திருமணங்கள் கூட நிலைகின்றன..நாமே பார்த்து, வாழ்ந்து பார்த்து சென்ற திருமனங்கள் வெளிநாட்டில் நிலைப்பது இல்லை என்று யோசித்து இருக்கிறார்.

திருமணம் என்பது வெறும் அன்பு, பரிமாற்றமோ, காதல் மட்டுமே இல்லை.அது வாழ்கை முழுவதுக்கும் உள்ள கமிட்மென்ட்.என்று புரிந்துக் கொண்டுள்ளார். சமூகத்துடன் ஒன்றுப்பட்டு வாழ்வது மட்டுமில்லை..கரண்ட் பில், வீடு, குழந்தைகள் வளர்ப்பு, அதன் பள்ளிகள், தினம் உள்ள வேலை அழுத்தங்கள், பணம், சொந்தங்கள் என்று தினம் தினம் ஒன்றாக சந்திக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது.  வெறும் உடல், மனம் மற்றும் திருமணத்துக்கு போதுமானதாக இல்லை..சூழல், வேலை, பணம், குடும்ப அனுசரணை போன்றவற்றின் துணையும் தேவையாக இருக்கிறது.


மணமக்கள் பார்த்து, பேசி, காதலித்து, குணம் அறிந்து, வாழ்ந்து பார்த்து என்று எந்த அஸ்திவாரமும் இல்லாமல்தான் இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. ஆனால் பெரும்பாலன வெற்றிகரமான திருமணங்களை நாம்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அது எப்படி?

காதல் என்பது ஒருவருக்குள் ஒருவர் விழுவது மட்டுமில்லை. வாழ்நாள் முழுக்க கைப்பிடி துணையாக வருவது. எல்லா கஷ்ட நஷ்டங்களிலும் துணை நிற்பது. வயதாகி தளர்ந்துப் போய் நிற்கும் பொழுது கைத்தடியாக பிடித்துக் கொண்டு அனுசரணையாக நேசிப்பது. ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ வருவதில்லை காதல்.

ஒவ்வொரு செங்கல்லாக கட்டப்படுகிறது. மிகுந்த இறுக்கத்துடன்..ஒவ்வொரு விசேஷத்திலும், ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு பெரிய வெற்றிகளிலும், துணைக்கு கைக் கொடுப்பதிலும், சச்சரவுகளை தீர்த்துக் கொள்வதிலும், பிரச்னைகளை ஒன்றாக இருந்து சமாளிப்பத்திலும் ஒவ்வொரு கல்லும் இறுக்கமாக காதலுடன் தாஜ் மகாலாக வீடும், குடும்பமும்  கட்டி இணைக்கப் படுகிறது.

காதல் இல்லாமல் வாழ்க்கைக்கான உந்துதல் கிடைக்காது. காதல் மிக முக்கியம்தான். காதலை அறிந்துக் கொள்வதும்..ஆனால் இங்கு காதல் என்பது என்ன? எல்லா  கடின சூழல்களையும், காலங்களையும்  கடந்து ஒருவருக்கு ஒருவர் நானிருக்கிறேன் ஆன வயதான தம்பதிகள் கைப்பிடிக்கும் பொழுது கண்களில் மின்னும் அந்த நான்கு நட்சத்திரங்கள்தான் காதல்.

8 comments:

ezhil said...

நல்ல பதிவு....

suresh said...

printing out a copy for my wife to read too!
thanks ji!

M.A.Ramamoorthy said...

மிகச் சிறப்பான பதிவுதாங்க. கலாச்சாரம் மிகுந்த நமது நாட்டிலும் சரி, ஒன்றிய வாழ்வு இரண்டாம் பட்சம் என்கிற நாடுகளிலும் சரி, நீண்ட வாழ்வை கணவன்-மனிவியாகக் கழித்தவர்களின் காதல், அன்பு, விட்டுக்கொடுக்கும் பண்பு, அவருக்காக இவர்-இவருக்காக அவர் என்ற மனம், பிறரிடம் தனது பார்ட்னரை விட்டுக்கொடுக்காத தன்மை எல்லாம் "வயதான காலத்தில்" நிலைத்து நின்று அவர்கலள்ன் தாம்பத்தியத்தைத் திறனாக‌வலுப்படுத்தும்.

திண்டுக்கல் தனபாலன் said...

முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்...

balaamagi said...

வணக்கம்,
தங்கள் பதிவு அருமை,
வாழ்த்துக்கள்.
நன்றி.

Avargal Unmaigal said...

அமெரிக்காவில் நான் பார்த்த வரை விவாகரத்து எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அதே அளவிற்கு சேர்ந்து வாழ்வதும் மிக அதிகமாக இருக்கிறது அவர்களும் நம்மை போலவே ஒருவனுக்கு ஒருத்தி என்பது போல நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த காலத்தில்தான் இங்கேயும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசரகதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இங்கு சேர்ந்து வாழும் தப்பதிகளுக்கும் நம்நாட்டில் சேர்ந்து வாழும் தப்பதிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இங்கு அன்பால்தான் சேர்ந்து இருக்கிறார்கள் ஆனால் நமது நாட்டில் அன்பால் என்பதைவிட சமுகத்திற்கு பயந்து அல்லது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் சேர்ந்த்து வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.


நமது குடும்பங்களில் உள்ள ஆண்கள் அல்லது பெண்களை கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவது தாங்கள் கணவ்ர் அல்லது மனைவி மிக சிற்ந்தவர்கள் எறு பொதுவெளியில் சொல்லுவார்கள் அதே நேரத்தில் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவார்கள். அப்படி சொல்லும் அவர்களிடம் நெருங்கி பழகியபின் கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்வது உல்டாவாக இருக்கும்.... பல சோகங்களை மறைத்து சேர்ந்து வாழ்வது போல நடித்து கொண்டிருப்பார்கள்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.

ராஜாமகன் said...

வாழ்த்துக்கள் அக்கா.....அருமையான பதிவு....