Thursday, March 19, 2015

குங்குமம் தோழியும், நானும்.

தோழியில் கொடுத்த விவரங்கள்..கேள்விகளும், பதில்களும் முழு வடிவம். நன்றி குங்குமம் தோழி.


கிர்த்திகா.
​நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக ..

கிர்த்திகா, கீர்த்தி, அம்மா, அக்கா ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பதவி , பட்டம்..அந்த அந்த வயதில் அவற்றை அனுபவித்தே இருக்கிறேன்...மனுஷியாக வாழ்வதே சவாலாக இருக்கும் காலத்தில் திரும்பி பார்க்கும் வாழ்க்கை திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம். காலம் ஒவ்வொரு பருவத்திலும் மனிதர்களை சேர்க்கிறது, விலக்குகிறது..அனைவரிடமும் முடிந்தவரை அன்பு பாராட்டி நதி போல ஓடிக்கொண்டு இருப்பதே சாதனை. தாய் என்பது மிகப்பெரிய பதவியும், பொறுப்பும்..வாசிக்க, எதையும் கவனிக்க, கேள்விகள் கேட்க, பதிலகள் தேட மட்டும் கற்றுகொடுப்பது மட்டும் பெற்றோர்களின் பொறுப்பு என்று நம்புகிறேன். கல்வியை கற்றுக்கொடுப்பது நம் கடமையல்ல..அது திணிப்பாக மாற வாய்ப்பு உண்டு. நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். பிறகு அவர்களே கற்றுக்கொள்வார்கள். இன்றும் நான் ஐந்து வயது தோழமை கூட பேசிகொள்வது வரம்..ஐந்து நிமிட தோழமைகள் கூட மறக்காமல் இருப்பது வரமோ வரம்.

2. பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது
பள்ளி பருவத்தில் ஒரு பட்டாம் பூச்சியாக என்னை இருக்க விட்டது மிகப்பெரிய விஷயம். இப்போ இருக்கும் பள்ளிகளை போல சிறகை ஒடித்து அடைத்து ருசிக்காமல்..  சிறகை விரித்து பறக்க விட்ட காலம். மதிப்பெண்கள் பற்றி கவலை தேர்வு நேரங்களில் மட்டும். உற்சாகம், சந்தோஷம், விளையாட்டு, பேச்சு, பேச்சு, பேச்சு நிரம்பிய காலம் பள்ளி காலம். பெரிய பள்ளியில்  ஆசிரியர்கள் அறிய இருப்பதே பெரிய விஷயம். அவர்களிடம் நெருக்கமும் இருந்தது. அந்த நெருக்கமே அவர்கள் போதிப்பதை நெருங்கி பார்க்க செய்தது. வீட்டில் படித்த நினைவே இல்லாமல் இருக்கு..இப்பொழுது யோசித்து பார்த்தால் அதற்கு ஆசிரியர்கள் காரணமாக இருந்து இருக்கின்றனர்.

3.. இப்போ வசிக்கும் ஊர் குறித்து கற்றுக் கொண்டதும் பெற்றுக் கொண்டதும் . அங்கே ரசிக்கும் உணவு மற்றும் கலாசாரம்

ஆஹா..மிக ரசிப்பான கேள்வி. இருவது வருடம்  வசிக்கும் இடம் என்று சொல்லி தள்ளி வைக்க முடியாது பெங்களூரை...அதன் நீரை அதிகம் குடித்து, அதன் காற்றை சுவாசித்து இந்த ஊர் என் மெய்யோடு கலந்து வருடங்களாகி விட்டது. ஆரம்பத்தில் என் மாநிலம் தமிழ்நாடு என்று சொன்னது போய் கர்நாடக வாழ் தமிழர் என்று சொல்லும் அளவுக்கு கலந்து விட்டது.
பல மொழிகள் , பல கலாசாரம், கல்வி முறைகள், உடை வகைகள், பரந்த சிந்தனை, மாடர்ன் மனசு, எதையும் சகித்துக்கொண்டு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைத்தையும் கற்றுக்கொண்டது இங்கு. தனியாக மொழி தெரியாமல் எங்கும் போய் சமாளிக்கும் தன்னம்பிக்கை கை வந்தது.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதியில் உணவு முறைகள் வேறுப்படும். அது போல உடுப்பி கடுபு, மங்களூர் ஹோலிகே, வட கர்நாடக ஜோலா தோசை, கத்திரிக்காய் கொஜ்சு, பெங்களூரு போண்டா சூப், மதுர் வடை, ராகி உருண்டை தொட்டுக்க பசார் கீரை குழம்பு, கர்நாடக ரசம், ரோட்டோர பானி பூரி, மசால் பூரிகள்,  எம்.டி.ஆர் ரவா இட்லி, வீணா ஸ்டோர் இட்லி, சட்னி... ஐயர் கபே வடை, காபி, CTR வெண்ணெய் தோசை..ஒன்றா இரண்டா உணவு வகைகள்..அனைத்தையும் ஒரு கை பார்ப்பதே நம் வேலை.

4. பிடித்த புத்தகங்கள்
சுஜாதா..மிகப்பெரிய ரசிகை. சிறு வயதில் மகா பாரதம், ராமாயணம், தேவி பாகவதம் , குமுதம், விகடன், கல்கி, துக்ளக் , அம்புலி, கோகுலம் அதை தவிர பாலகுமாரன், ராஜ்ஜேஷ் குமார், சுபா, பட்டுகோட்டை பிரபாகர் ..அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஜெயமோகன் , சுந்தர ராமசாமி, காப்கா, புதுமை பித்தன், அசோக மித்திரன்..ஜி.நாகராஜன், வைக்கம்..அடுத்து பெருமாள் முருகனின் மிகப்பெரிய ரசிகை..கொங்கு நாடு பற்றிய அறிமுகம் அவர் நாவல்கள் மூலமே..இன்னும் இரு படைப்புகள் படிக்க வேண்டும். இன்னும், இன்னும் நிறைய எழுத்தாளர்கள்...தற்பொழுது வாசித்துக்கொண்டு இருப்பது அம்பை சிறுகதைகள். அதை தவிர இணையத்தில்  பெரும் எழுத்தாளுமைகளின் பக்கங்களை வாசிப்பதும் மிக பிடிக்கும். இதுதான் என்று இல்லை..நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க பிடிக்கும்.

5 குடும்பம் . குறித்து ..
இருவது வருடமாக கூட்டு குடும்பம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மாமியாருடன் இருக்கிறேன். அம்மா, அப்பாவோடு இருந்ததை விட அவரோடு அதிகம் இருக்கிறேன். இனி கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்று தெரியாத வேளையில் குழந்தைகளுக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைத்தது வரம். பக்கத்திலாவது சித்தப்பா, அத்தை, பாட்டி, கசின் என்று யாராவது குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். அப்பொழுது குடும்பத்தின் ஆணி வேர் பலமாக குழந்தைகளின் மனதில் ஊன்றப்படும் என்ற நம்பிக்கை உண்டு. எல்லார் அன்பும் நிறைக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தை விட்டு விலக விரும்ப மாட்டார்கள். வாய்ப்பு இருக்கும் வேளையில் பெரியவர்களோடு குழந்தைகள் ஐக்கியமாக விட வேண்டும். நம் பிரச்னைகளை அவர்கள் முன் தவிர்க்க வேண்டும். கணவர் மருத்துவர்...இரு ஆண் குழந்தைகள்..ஆண்களால் அழகாக சூழப்பட்ட வாழ்க்கை.

6. hobbies புத்தகம், இணையம், நண்பர்கள், பயணம்..அதை தவிர எதையும் ஒரு முறை.

7. இயற்கை 
பையன் ஒரு கேள்வி கேட்டான். வெளிநாட்டில் தண்ணிருக்கு அடியில் கண்ணாடி குழாயில் இருந்துகொண்டு மீன்கள், டால்பின்கள், சுறாக்கள் பார்க்க முடியுமே ஏன் நம்ம ஊரில் அந்த வசதி இல்லை..நாம் எப்படி பார்ப்பது என்றான்..உன்னை கண்ணாடி வீட்டில் குடியிருக்க சொன்னால் இருக்க முடியுமா என்று கேட்டேன்..ஹையோ..நான் பாத்ரூம் போகனும்..அம்மாவை கட்டிக்கிட்டு தூங்கணும்..முடியாது என்றான்..அதேபோல்தான் மிருகங்களும்..அதுவே நீருக்கு மேலே வரும்..இல்லையென்றால் நீச்சல் கற்றுக்கொண்டு மூழ்கி போய் பார்க்கலாம்..நட்பா அளாவலாம்..அதை விட்டுவிட்டு வேடிக்கை பொருளாக்கி பார்க்க கூடாது என்றேன்..இயற்கையும் அப்படிதான்...காய்ந்து இலையும் சருகுமாக இருக்கும் காட்டு செடிகளை, மரங்களை அழித்து கொரியன் புல் வளர்ப்பது, பூச்செடிகள் போடுவது  இயற்கை காட்சி  அல்ல..இயற்கையாக இயற்கையை விடுவதே இயற்கை..விட்டு காப்பாற்றி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

8. தண்ணீர் சிக்கனம். plastic பயன்பாடு
இரண்டு மூன்று வருடங்களாக பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவதை முடிந்தவரை தவிர்கறேன்.. முக்கியமாக தமிழ்நாட்டில் மிக அதிக பிளாஸ்டிக் பை உபயோகம் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது..அதை எல்லா இடங்களிலும் வீசி இருப்பது வருத்தம். இங்கு ஒரு மூலையில் நான்கு , ஐந்து BBMP குப்பை லாரிகள் நின்று கொண்டு இருந்தன..ஈர குப்பைகள்  தனியே உரத்துக்கு..பேப்பர் குப்பைகள் விலைக்கு என்று அனைத்தையும் அழகாக கழித்து விட்டனர்..டம்ப் செய்வது பெரும்பாலும் குறைக்கப்பட்டு இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது..மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு வந்தால் வாழும் இடம் சொர்க்கமாகும்.

பள்ளியில் ஒரு நாள் குழந்தைகளுக்கு பாடம் எடுத்தேன்..நீங்கள் குடிக்கும் தண்ணீரை வெளியே எடுங்கள் என்றேன்.அது எவ்வளவு ப்ரெஷ் என்று கேட்டேன்..அனைவரும் இப்பதான் என்றார்கள்..எங்கம்மா பழைய தண்ணி வைக்க மாட்டாங்க என்றார்கள். எங்கிருந்து வந்தது என்றேன்..பைப், டாங், அக்வா கார்ட் என்று பதில்கள்..பிறகு..என்றதற்கு ஆறு, ஏரி நிலத்தடி நீர்..இன்னும் ரிவர்ஸ் ல் போக சொன்னேன்..மழை, மேகம், பனி..இன்னும் பின்னே..கடல், ஆறு, ஏரி, குளம், குட்டைகள்..பிறகு..சுற்றி, சுற்றி வந்தது..

நாம் குடிக்கும் நீர் பல மில்லியன் காலங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது..நம்மால் ஒரு சொட்டு கூட ஆய்வு கூடத்துக்கு வெளியே முடியாது என்பதே உண்மை..நம் பாட்டிலில் இருக்கும் நீர் நம் கொள்ளு தாத்தா உச்சாவாக கூட இருக்கலாம்..ஆனால் அதில் விஷம் கலந்தால் நமக்குதான் திரும்பி வரும் என்றேன்..சுத்தப்படுத்த மிக அதிக செலவாகும்..மரங்கள் ஓவர் டுட்டி செய்ய வேண்டும்..சிக்கனமாக இருப்பது நல்லது என சொல்ல..மாணவர்கள் அழகாக ஏற்றுக்கொண்டனர்..கதையால் சிக்கனம் சொல்லலாம்..அறிவுரை யாருக்கும் பிடிக்காது.

9. சமூக அக்கறை எப்பவும் உண்டு..இப்பவும் இரு பொருளாதாரத்தில் பின் தங்கிய  பள்ளிகளுக்கு போய் பாடம் எடுக்கிறேன். கல்வியின் மூலமே ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டிய நிர்பந்தம்.ஆனால் அந்த முறை சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போவது சமூக கேடு. அனைவரும் அவர்களின் விருப்பத்துக்கு வாழ வேண்டும். இளைஞர்கள் அனைவரும் சமூகத்துக்கு சிறு பங்காவது செய்ய வேண்டும்..பலர் செய்வதை பார்த்து நம்பிக்கை வருகிறது.

10. மனிதர்கள் 
அனைவரும் நல்லவர்கள்..மிக குறைந்த விகிதமே வேறு போல உள்ளனர். நாம் குறை, பகை இல்லாமல் அன்பாக இருந்தால் நம்மிடம் அன்பு செலுத்த மனிதர்களுக்கு தடை ஏதும் இல்லை. நாம் நட்ரியுடன், பிரியத்துடன் நேசத்தை செலுத்தினால் உலகம் அழகாகும். நமக்கு நம்மை மாற்றிக்கொள்ளும் சக்தி மட்டுமே உண்டு.

11 . பிறந்த ஊர் . சொந்தங்கள்.. கற்றுக் கொண்டவை 

கொல்லுமாங்குடி.கும்பகோணம் அருகில்..இன்னமும் கிராமத்தின் வெள்ளந்தி தனத்தை ஒளித்து வைத்து இருப்பது வரம். கிரிகெட், சீரியல்  உள்ளே நுழையாத காலம்..அதனால் பளிங்கு, கிட்டிபுல், கபடி, பாண்டி, ஊஞ்சல் என்று உற்சாக பறவையை கட்டிக்கொண்டு பறந்த காலம். கற்றுக்கொள்ள வாழ்கை எத்தனையோ வைத்து இருக்கு.சிறு வயதில் அப்படியே விளையாடி அனுபவிக்க வேண்டும்..குழந்தை பருவம் மிக இனிமை..அதை இந்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே கற்றுக்கொண்ட பாடம்.

12. நேர நிர்வாகம் 
அப்படியெல்லாம் எதுவுமில்லை..எத்தனை வேலை இருந்தாலும் முடித்து விட வேண்டும்..சும்மா இருக்கும் பொழுது சந்தோஷமாக இருக்க வேண்டும்..நேரம் நமக்காக இப்பொழுது என்ன தேக்கி வைத்து இருக்கிறதோ அதை  எடுத்துக்கொண்டு போக வேண்டும்.

13. சமையல் 
இரண்டு மணி நேரம் மேல் இருக்க பிடிக்காது.ஆனால் சுவையா சமைக்க பிடிக்கும். திறமையான பல பெண்கள் சமையல் அறையில் நேரத்தை வீணடிப்பது ஒப்புதல் இல்லை..எளிமையாக இரு மணி நேரத்தில் ஒரு நாளுக்கு சமைத்து விடலாம். அதை இன்னொருவரிடம் தொழில் ரீதியாக ஒப்படைத்தால் அவர் குடும்பத்துக்கும் வருமானம் கிடைக்கும்..IIM, டாக்டர்  என்று  படித்து விட்டு பெருமையாக சமைக்கிறேன்..என்பது சீட் வேஸ்ட், அரசாங்க பணம் வேஸ்ட்..இருவரின் வாழ்கையை கெடுத்தது போன்ற குற்ற வகையில் சேர்ப்பேன்.. பெண்கள் மட்டும் சமையல் என்ற கேள்வி பொது பத்திரிக்கைகளில் பொது கேள்வியாக வர வேண்டும். இங்கு இல்லாமல்..

14  பிற கலைகள்
 
எல்லா கலைகளையும் ரசிக்க மிக பிடிக்கும்..சினிமா, டிராமா, எழுத்து, ஓவியம, புகைப்படம் , நாட்டியம்..ஏன் பஜன் கூட..

15 . organizing at home and office 

கற்றுக்கொண்டு இருக்கிறேன். எத்தனை ஒழித்தாலும் குப்பை சேருவதை தடுக்க முடியவில்லை..அதனால் அப்படி அப்படி ஏற்றுக்கொண்டு இப்படி இப்படி வேலை செய்து முடிக்கிறேன்.

16. கடந்து வந்த பாதை எப்படி இருக்கிறது என்பது குறித்து
மிக அழகான பாதை. கிராமத்தில் பிறந்து வளர்ந்து , விவசாயம் கூட இருந்து..டவுனில் படித்து..நகரத்தில் வாழ்ந்து..உலகத்தை சுற்றும் குழந்தைகளை வளர்த்து...நல்ல குடும்பம், நட்புகளை வரமாக பெற்று..வேறென்ன வேண்டும்..

17. சினிமாத் துறை
நல்ல சினிமாக்களை பார்ப்பது பிடிக்கும்.மசாலாவும் பிடிக்கும், ஜேம்ஸ் கேமரூன், மணிரத்னம், மிஷ்கினும் பிடிக்கும்..பிடித்த ஹீரோக்களில் அரவிந்த் சாமி முதல் ஜார்ஜ் க்ளூனி வரை ரசனை நீள்கிறது..தரமான உலக படங்களும் பிடிக்கும்.தற்பொழுது தமிழ் படங்கள் உச்சத்தை நோக்கி பயணம் செய்வதாக தோன்றுகிறது..ஜிகர்தண்டா, சதுரங்க வேட்டை, மெட்ராஸ் என்று இயக்குனர்கள் பட்டையை கிளப்புகிறார்கள்..அந்த பக்கம் பார்த்தால் கலர்புல்லாக காவிய தலைவன்..மிக அழகாக அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமா நகர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

18. உடல் நலம் மன நலம் இரண்டும்
ஒன்றுகொன்று தொடர்பு உடையவை..ஒன்று நன்றாக இருந்தால் இன்னொன்றும்..

19.  நீங்கள் எழுதியதில் உங்களுக்குப் பிடித்தவை
எழுதுவது அனைத்துமே பிடித்துதான் எழுதுகிறோம்..எனினும் சிலவற்றை மறக்க முடியாது..முன்பு பேட் டச், குட் டச் பற்றி அதிகம் தெரியாத நேரத்தில் அதை பற்றி விளக்கமாக எழுதி அது பேஸ்புக் ல் நிறைய ஷேர் செய்யப்பட்டு வலம் வந்தது..அடுத்து அப்பா பற்றி எழுதியது ..அனைத்தும் உணர்வு பூர்வமானவை.

20 . இசை மனதுக்கினிய எந்த ஒலியும் இசை..அன்பின் ஹலோ, குழந்தையின் அழைப்பு, பையனின் ஸ்கைப் கால் அனைத்துமே இசைதான்..சிலரின் பேச்சுகள் கூட இசையாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

21.பிடித்த ஆளுமைகள் 
தமிழ் இணையத்தில்

இணையத்தில் ஈரோடு கதிர், ரவி நாக் , அமுத தமிழ் இன்னும் பலர். அன்பின் ஆளுமைகளும் அதிகம் உள்ளனர்.  வெளியில் படேல், அம்பேத்கர், காந்தி. அதை தவிர அனைத்து தன்னம்பிக்கை பெண்களையும்..

22. பிடித்த பெண்கள் - குடும்பத்தில், வெளியில் 
அம்மா, அக்கா, தம்பி மனைவி  வெளியே கிரண் மசூம்தார் தொழில் அதிபராக....ஜெயலலிதா, இந்திரா அவர்களின் தன்னம்பிக்கைகாக..தெரசா சேவைக்கு..

23. நகைச்சுவை நிகழ்ச்சிகள் வாழ்க்கையில்
ஒன்றா, இரண்டா..எத்தனையோ காமெடிகள். காமெடி திருவிழாவே நடக்கும் நம்மை சுற்றி.  

24. ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும் கற்றது கொஞ்சம் எழுத்து, தமிழ், மன உறுதி..பெற்றது அன்பு, நட்புகள், இது போன்ற வாய்ப்புகள்..இழப்பதற்கு எதுவும் இல்லை..

25. அழகென்பது 

தன்னம்பிக்கை.

26. வீடு interiors and decoration
மிக ஆசை..ஆனால் பையன் கொஞ்சம் சுட்டி என்பதால் அவன் பொம்மைகளை தவிர வேறு எதுக்கும் இடமில்லை..சுவரில் இத்தனை நாள் அவன் கிறுக்கல்களே ஓவியம்..ஆனால் ஒரு பூவை கூட ஒரு இடத்தில் வைத்தால் வீட்டை அழகாக்கும் சூத்திரம் மிக பிடிக்கும்.


27. வாழ்க்கை குறித்து 
நதி போல அணைத்து, கழுவி, வீழ்ந்து, எழுந்து, வேகம் கொண்டு, சுழித்து, பயன் பெற்று, பயன் அளித்து..ஓடிக்கொண்டே கலக்க வேண்டும்.

28. recycling 
அதை என்பதை விட மினிமலிசம் நல்லது..தேவை இல்லாமல் சுமத்துவது லக்கேஜ் சுமக்கும் அபாயம் அதிகம்.

29. எழுத்தும் வாசிப்பும் 
அனைத்து எழுத்துகளும். போண்டா பேப்பர் உள்பட..

30.புகைப்படக்கலை (or)  உங்கள் பொழுதுபோக்குக் கலை
ஒரு கணத்தை ஓராயிரம் விழிகளுக்கு படைப்பது..அத்தனை எளிதல்ல அந்த கணம்..அதை மனதில் பிடிப்பதா, காமிராவில் பிடிப்பதா என்ற சண்டையில் காமிரா தோற்க நேரும்..மனமும், காமிராவும் ஒன்று சேரும் கணத்தில் காட்சி கவிதையாகிறது.

31. இவை தவிர நீங்கள் கூற விரும்புபவை...
ரசனை நொடிகள்..நிமிடங்கள் அழகு..வாழ்தல் மிக இனிது.

32. குங்குமம் தோழி இதழ் பற்றி உங்கள் கருத்துகள்
அனைத்துக்கும் இடம் அளிக்கும் இதழ். வெறும் சமையல் , குழந்தை

 வளர்ப்பு என்று இல்லாமல் அனைவரின் தைரிய , தன்னம்பிக்கை பக்கங்களையும் காட்டும் இதழ்..உண்மை சொல்ல வேண்டுமானால கொடுத்த காசுக்கு மேலயே கொடுக்கும் ஒரு பத்திரிக்கை..

33. குங்குமம் தோழி இதழில் இடம் பெற வேண்டிய புதிய பகுதிகள் / விஷயங்கள்

அரசியல்..இன்னும் விவரமாக..கவுன்சிலர் முதல் கனடா, பாரிஸ் அரசியல் வரை சுவாரசியமாக கூறலாம். பொருளாதார விஷயங்கள்.அழகான பொது கட்டுரைகள்..விவாதங்கள் இன்னும் லிஸ்ட் இருக்கு. பொதுவான இரு கருத்து உள்ள விஷயங்களை எடுத்து விவாதிக்கலாம். பொது பத்திரிக்கை போன்று உயரலாம். ஆண்களும் படிக்கும் பெண்கள் பத்திரிக்கை என்ற காலம் வர வேண்டும். இப்பவும் மிக நல்ல பத்திரிக்கைதான்.  முதன் முதலில் வெளியே கோட்டை தாண்டி வந்த பத்திரிக்கை நம் குங்கும தோழி என்பதில் பெருமையும்.

Saturday, March 14, 2015

நன்றிகளும், நம்பிக்கையும்.

பத்திரிக்கையில் என்னைப் பற்றி எழுதிய இரு பக்கங்களுக்கு ..நேற்று எங்கெங்கு காணினும் வாழ்த்துகள்..வாட்ஸ் அப், போனில், பேஸ்புக்..எல்லா இடங்களிலும். பத்திரிக்கையில் வருவது சந்தோஷமே..எல்லாருக்கும் மிக சகஜமாக ஆகிவிட்ட ஒன்று. ஆனால் அதற்கு இத்தனை வாழ்த்துகள் நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை. காலம் திரும்ப தன்னை நிருபிக்கிறது. அன்பைக் கொடுத்தால் பல மடங்கு அன்பு வரும்  என்று. இன்னும் அன்பாக வாழச் சொல்லி கற்றுக்கொடுத்துகொண்டு  இருக்கிறது.


நீ எதுவாக உன்னை நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்ற சொல்லில் அதிகபட்ச நம்பிக்கை கொண்டவள் நான். வெளியே காமெடியாக இருந்தாலும், பேசினாலும்  உள்ளுக்குள் எனக்கான நம்பிக்கைகளை விட்டுக் கொடுத்ததே இல்லை. சிறு வயதில் இருந்து அப்பா, எப்பவும் நீ அதிர்ஷ்டம் என்ற சொல்லை சொல்லி, சொல்லி வளர்த்தார்.மிச்ச இருவரிடமும் என்னை விட வாஞ்சை அதிகம் வைத்து இருந்தாலும் அதிர்ஷ்டத்திற்கு என்னையே துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தார். அவருக்கும் ஒரு நம்பிக்கை தேவைப்பட்டிருக்க கூடும்  என்று இப்பொழுது உணர்கிறேன்.

ஆனால் அந்த ஒரு சொல் என்னை உருவாக்கி இன்று வரை வழி நடதுக்கிறது. எத்தனை பெரிய பிரச்சனை வரட்டும்..வாழ்வையே சூழ்நிலைகள் கலைத்து போடட்டும்..எதற்கும் அஞ்சி ஒடுங்கியதில்லை..அப்படி இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த உணர்வுகள் என்னை ஆண்டதில்லை. நான் அதிர்ஷ்டம்..எனக்கு எந்த பிரச்னையும் வராது என்று தீவிரமாக் நம்புவேன்.  நானே ஏற்படுத்திய பிரச்சனைகளை கூட இப்படிதான் சமாளிப்பேன்.

ஒவ்வொருவரும் நம் மேல் வைக்கும் நம்பிக்கை மட்டும்தான் நம் வாழ்கையை சிறிதாவது உயர்த்துகிறது ஒரு நூல் அளவுக்காவது தினமும். ஆனால் சறுக்கினால் முழுக்க சறுக்கும் அபாயத்தை வாழ்வு தன்னிடம் மர்மமாக ஒளித்து வைத்து இருக்கிறது. இங்குதான் அதிர்ஷ்டம் செயல்படும். கீழே விழுந்தால் கூட எறும்புகளை காணும் அதிர்ஷ்டமாக நாம் உணர்ந்தால் கீழே விழுந்த உணர்வே இருக்காது. என்னிடம் ஒரு மாமி உன் கையால் பணம் கொடு நான் மிக நன்றாக இருப்பேன் என்றார். சரி என்றுக் கொடுத்தேன். நிஜமாகவே இன்று ஓகோ என்று இருக்கிறார்கள். அவரின் அந்த ஒற்றை நம்பிக்கை அவரை எங்கோ கொண்டு சென்று இருக்கிறது. நான் கொடுத்து நூறு ரூபாய் இல்லை என்று எனக்கும் நன்றாக தெரியும். அதனால் காலை வேளையில் யாரிடம் பணம் கொடுத்தாலும் நன்றாக இருக்கும் உங்களுக்கு என்று மனதார சொல்லிக் கொடுப்பேன். அந்த நம்பிக்கை நன்றாக வைக்கும் என்ற நப்பாசையும்..நாளை நம்மை நன்றாக கவனிப்பார் என்ற சுயநலமும்.

வாழ்வியல் குறித்தான புத்தகங்கள் படிக்கும் பொழுது அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை  வார்த்தையின் வளமையை உணர்கிறேன்.நேற்று என்னிடம் அதீத அன்புக் கொண்டவர்கள் உடனே திருஷ்டி சுத்திப் போடு என்றார்கள். ஏன் என்றால் சிறு பொறாமைக் குணம் கூட நம்மை சுற்றி ஒரு எதிர் மறையை வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. யாரிடமும் பொறாமையுடன் இருப்பதோ, அல்லது அவர் பொறாமைப் படும் இடத்தில் இருப்பதோ நம் வாழ்வின் மீதான அடிகளாக மாற வாய்ப்பு இருக்கிறது. அந்த நம்பிக்கையை சொல்லத் தெரியாமல் அந்தக் காலத்தில் திருஷ்டி எனச் சொல்லி இருக்கலாம்.

அடுத்தவர் நம்மை விட சிறப்பான செயலை செய்யும் பொழுது பொறாமை வருகிறது. அதனால் அவரிடம் அதைக் கற்றுகொள்வதாலோ அல்லது அவரிடம் இன்னும் அன்பாக இருப்பதாலோ அந்த உணர்வை நல்ல உணர்வாக மாற்றி நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம். நம்மிடம் வரும் பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை எண் செய்வது என்று வாழ்வியல் புத்தகங்கள் சொல்லித் தருவதில்லை.

நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்..நாம சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றே வாழ்வியல் புத்தகங்கள் சொல்கிறது. ஆனால் நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியுமா? பக்கத்தில் ஒருவர் வலியிலும், வேதனையிலும் துடிக்கும் பொழுது நாம் சந்தோஷமாக இருப்பது நீரோ பிடில் வாசிப்பது போல உணரப் படாதா?  பிறகு எங்கிருந்து அன்பைப் பெறுவோம்.. சுற்றுப்புறம சந்தோஷமாக இல்லாமல் நாம் மகிழ்ச்சியாக  வாழவே முடியாது.

எதற்காக அந்தப் பொறாமை வருகிறது என்று யோசித்து  பார்த்தால் நாம் மட்டும் தனியாக கற்றுக் கொண்டு முன்னேறிக்கொண்டு இருப்பதால். நாம் மட்டும் முன்னேறினால் இந்த பிரச்சனை கண்டிப்பாக வரும். அந்த உணர்வு யாருக்காவது இருக்கு என்று நமக்கு சிறு சந்தேகம் வந்தால் கூட அவர்களிடம் இன்னும் அன்பாக இருக்க வேண்டும். அவர்களிடம் இன்னும் நன்றியாகவும்..ஏன் என்றால் அவர்கள்தான் நம் மேல் நம்மை விட அதிக நம்பிக்கையில் பொறாமை படுகிறார்கள். நம்மிடம் சரக்கு இருக்கோ இல்லையோ..எதையோ ஒன்றை வைத்தும்.

அதனால் முடிந்தவரை அவர்களுக்கான வாய்ப்புகள் பற்றி சொல்லிக்கொடுத்து அவர்கள் முன்னேற உதவி செய்ய வேண்டும். நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் பகிரும் எண்ணம இருந்தாலே போதும். எப்பவும் நம்மை கைதூக்கிவிட அதிர்ஷ்டம் ஆட்களை அனுப்புவதுப் போல..நாம் அவர்களுக்கு திருப்பி செய்துவிட்டால் வாழ்வு பேலன்ஸ் ஆகும். வெற்றிகள் வந்தாலும் நம்மை அது பாதிக்காமல், கீழே தலைகீழே குப்புறத் தள்ளாமல் இருக்கும்.

மிகப்பெரிய ஆட்கள் உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டு சர, சர வென்று இறங்குவது சரக்கு இல்லாமல் இல்லை..சுற்றி நேர்மறை மனிதர்களுடன் வாழாமல்..போலி புகழ்பாடும் மனிதர்கள்தான் நேர்மறை (
positive)என்று நம்பியதால்.

வாழ்க்கை மிகப்பெரிய பரிசாக இந்த நொடிகளை, நிமிடங்களை, இந்த மனிதர்களை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறது. அவற்றைக் கொண்டாடியும்..முடிந்தவரை உதவியும் செய்துக் கொண்டிருந்தால் போதும். காலம் நம்மை அதிர்ஷ்டக்காரர்களாக எப்பவும் வைத்து இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


நேற்றில் இருந்து மனம் நெகிழ்வில் உருகி ஓடுகிறது. இதற்கு இந்த  அன்புக்கு என்ன செய்துவிட முடியும் என்று திணறுகிறேன்..இன்னும் என்னை நம்பிக்கை மனிதராய் வாழ வைக்கும் நண்பர்களுக்கு நன்றி என்ற சொல்லை மட்டும் சொல்லி செல்வதுதான் குறையாக இருக்கு. மிச்ச அனைத்தும் நிறைவாக உணர்ந்து நன்றிகளால் நிறைகிறேன்..நிரப்புகிறேன்.

Sunday, March 8, 2015

கொண்டாட்டம் என்றும்.

இந்நேரம். காம் ல் வெளிவந்த மகளிர் தினக கட்டுரை..அதில் என்னைப் பற்றி கொடுத்துள்ள அறிமுகம் செம அசத்தல்..அதுப்போல செயல்பட வேண்டும் எனத் தூண்டும் அறிமுகம்.

ன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் நாள். ஒரு நாளைக்கு மகளிரை கொண்டாடினால் போதுமா? தினம் கொண்டாட வேண்டுமா? இல்லை அவர்களைக் கொண்டாடத்தான் வேண்டுமா?
மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளைக் கொண்டாடிவிட்டு பிறகு வருடம் முழுவதும் வேலை வாங்குவதுப் போலவா. இல்லை, நன்றி கூறும் விழாவா? இல்லை, சில மேடை சக்திகள் முழங்குவது போல் ஒரு விழிப்புணர்வு விழாவா?

சரி.  இந்த நாள் மகளிருக்கு என்ன வேண்டும் என்று பேசுவோம், மேடையில் கதறுவோம்..ஆனால் மறுநாள் வீட்டுக்கு போய் ஒரு காபி போடும்மா ப்ளீஸ் என்பதோடு மகளிரை நன்கு வைத்துக் கொள்வது முடிந்து விடும்.

நாளைய மகளிர் யார்..நம் வீட்டுப் பெண் குழந்தைகள், நம் தங்கைகள்..அடுத்து உயிருக்கு உயிராகப் பழகும் தோழிகள். அம்மா, அக்கா, பாட்டி என்று தொடரும் தலைமுறைகள் வேறு.

சரி வளர்ந்து வரும் தலைமுறை மகளிரை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?. டிஸ்கோ, பஃப் என்று தலைவிரிச்சு ஆடுகின்ற..... உடையில் முட்டிக்கு மேலே எங்கயோ இருக்க ஆடை உடுத்தும் இவர்கள்  இன்னும் என்ன சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்  என்ற அலுப்பும் வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் மகளிர் தங்கள் தேவைகளைக் கூட  தாங்கள் இன்னும் முடிவெடுத்துக் கொள்ளக் கூட இயலாமல் இருக்கின்றனர்.

பெண் குழந்தைகள் என்றாலே திருமணம்..பணம் சேர்த்து, பாத்திரம் சேர்த்து, நகை சேர்த்து.. எல்லாமே திருமண லட்சியத்தில் இருக்கும். நான் படிக்கும் காலங்களில் ஹோம் சயின்ஸ் டிகிரி பிரபலம். ஏன் என்றால் மாப்பிள்ளைகள் டிகிரி வாங்கிய படித்தப் பெண் அதே சமயத்தில் வீட்டோடு இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதால்..அதற்கு வசதியாக இருக்கிற துறை ஹோம் சயின்ஸ் என்று அதில் சேருவார்கள். ஆக மொத்தம் கல்யாணச் சந்தையில் விலை போக என்ன தேவையோ அதை லட்சியமாக கொண்டு பெண்ணைத் தயாரிக்கிற ஒரு உலகமாகத்தான் இதுநாள் வரை  இருந்து கொண்டு இருக்கிறது. அதில் கொஞ்சம் இப்பொழுது மாற்றம்..இப்போதெல்லாம் அம்பதாயிரம் சம்பாதிக்க வைத்தால் ஒரு லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைத்து விடலாம். இருவரும் நகரத்து மத்தியில் ஒரு பளாட், பெரிய பள்ளியில் குழந்தை படிப்பு, EMI வாழ்க்கை..அல்லது வெளிநாடு..இதான் பெற்றோருக்கு லட்சியம்.

ஆகமொத்தம், கல்வி, வேலை எல்லாமே திருமணத்தைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது..மகளிருக்கு என்ன தேவை..அவர்கள் எதற்காக கல்வி கற்க வேண்டும், சுய மரியாதை என்றால் என்ன, கல்வி கொடுக்கும் சிறகுகள் எவை..அவற்றைக் கொண்டு எப்படி பறக்க வேண்டும்..எதுவும் தெரிவதில்லை..நிஜமாக பெரியார் கனவு கண்ட பெண் சுதந்திரம் இதுவாக இருக்க முடியாது.

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு சிக்கலான விஷயம். அவர் குடும்பத்திற்கு அவர்கள் வீட்டிலும் காதல் மற்றும் கலப்பு திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளில் ஓரளவு பிடிப்பு இருந்து இருக்கிறது. ஆனால் இன்றோ மனதளவில் வேறு மாதிரி சிந்தித்தாலும் நடை முறை வாழ்கை பயமுறுத்தி தன்னை ஜாதிச் சங்கத்தோடு (கட்சியோடு) இணைத்துக் கொண்டு உள்ளார்.

ஏன் என்று கேட்டேன்.. நீங்கள் இப்படி இருப்பது தவறு என்று சுட்டிக் காட்டினேன்.. அவர் சொன்னார் எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.. உங்களுக்கென்ன தெரியும்.. பார்த்து பார்த்து வளர்க்கிறோம்.. ஆசைப்படும் கல்வியை கொடுக்கிறோம்.. ஆனால் அந்தக் குழந்தையை இருவது வயதுக்குள் காதலித்து ஒரு குழந்தையோடு ஆறு மாசத்தில் விட்டுவிட்டு போனால்தான் அந்தக் கொடுமை தெரியும்.. என் வீட்டுக் குழந்தைகள் நிர்க்கதியாக நிற்க முடியுமா? ..  இது போன்ற கொடுமையான காதல் திருமணங்களை எப்படித்தான் தடுப்பது.. உங்களிடம் வழி இருக்கா என்று கேட்டார்..  விஷயம் தெரியாமல் நீங்கள் பெங்களுரிருந்து என்ன வேண்டும் என்றாலும் பேசலாம்.. பெண் குழந்தைகள் நிராதரவாய் நிற்கும் வேளையில் உடனிருப்பவர்களின் வேதனை பற்றி உங்களுக்கென்ன தெரியும் என்றார்..

எனக்கு திகு திகு என்று பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் அவர் இருக்கும் சூழ்நிலை, அவர் பார்வை கோணம் வேறு என்று கொஞ்சம் அமைதியாக இருந்து பின் பேசத் தொடங்கினேன் .

பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது நீங்கள் செய்யும் பேருபகாரம் இல்லை.அது அவர்கள் உரிமை. உலகில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்க உரிமை உள்ளது. அதை என்னமோ தாராளமா பெரிய படிப்பு படிக்க வைத்தேன் என்று சொல்வதெல்லாம் தேவையில்லை..குழந்தைகள் அவர்கள்..இதில் ஆண் என்ன? பெண் என்ன? அவர்கள் விருப்பப்படும் கல்வியை நாம் கண்டிப்பாக நம் வசதிக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். இது பெற்றோரின் கடமை.

அடுத்து கல்வி கொடுத்தும்  பெண் வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் ஓடிப் போகிறாள் என்றால் எங்கு தவறு..உலக விஷயங்கள் தெரியாமல், கல்வி பற்றிய ஒரு முழுமையான அறிவை, தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுக்காமல் வளர்த்த உங்கள் சமூகம் மேல்தான் தவறு.

கண்டிப்பாக டீன் ஏஜ் சிரமமான விஷயம்..தடுமாறும் விஷயம்..ஆனால் சிறு வயதில் இருந்தே லட்சியம் நோக்கி பயணப்படுபவர்கள்..மன உறுதி உடையவர்கள் கண்டிப்பாக தடுமாறுவதில்லை.. ஏன் பெரும்பாலும் நகரத்தில் பெரியப் பள்ளிகளில் படிக்கும் பெண்களைக் காதலித்துக் கை கழுவி விட முடிவதில்லை?

பொதுவாக பெண்கள் உணர்வுப் பூர்வமாணவர்கள்..எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள்..ஆனால் நடுத் தெருவில் நிற்கும் அவலம் பற்றி யோசித்து அவர்களை கல்வியில் இருந்து ஒதுக்குவது..அல்லது விருப்பப்பட்டபடி வளர விடாமல் செய்வது என்ன நியாயம்?

அடுத்து, பெண்களுக்கு சரியான தன்னம்பிக்கைக் கொடுத்து வளர்த்தாலே போதுமே..தானாகத் தனக்கு வேண்டிய வாழ்க்கையை சரியாகத் தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள். நன்கு உறுதியும், தைரியமும், கல்வியும், தன்னம்பிக்கையும் உள்ள பெண்களை அத்தனை எளிதில் ஏமாற்றி விட முடியுமா?

ஜாதிச் சங்கங்கள் இன்னும் அடிமைப் படுத்தவே செய்கின்றன...உங்கள் பெண்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்ற போர்வையில் அவர்களை இன்னும் முடக்கி போடுகிறீர்கள்..அதனால் நீங்கள் பெண்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.

உண்மையாக நீங்கள் பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எந்த வயதில் திருமணம் தேவை, எப்படி யாரிடம் பழக வேண்டும்..எப்பொழுது காதலித்துத் திருமணம் செய்தால் நம் சமூகத்தில் பாதுகாப்பாக வாழலாம்..எந்த அளவுக்கு பொருளாதாரம் அவசியம்..உணர்வு பூர்வமாக இருந்தாலும்..எந்த நேரத்தில் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்க வேண்டும்..இதெல்லாம் சிறு வயதில் இருந்து சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.. யாரும் போய் அப்படி கிணற்றில் விழ மாட்டார்கள்.

தங்கள் துணையை தேர்ந்து எடுக்கு தைரியம் , தெளிவு எப்பொழுது வர வேண்டும் என்று தீர்மானிக்க கற்றுக் கொடுங்கள். .இந்த வாழ்க்கை, வசதி வேண்டுமென்றால் தங்கள் காலில் சம்பாதிப்பது  அவசியம் என்று சொல்லுங்கள்..

சரியாக கல்வி கற்று, நல்ல வேலைக்குச் செல்லாவிட்டால் பெண் என்ன ஆண் என்ன குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு கொடுங்கள்..அஞ்சு பைசா இல்லாவிட்டாலும் தன்னை பாதுகாத்துக் கொண்டு துணிச்சலாக வாழ்வது எப்படி என்று புரியும்படி சொல்லிக்கொடுங்கள் .

தன்னம்பிக்கை இருந்தால் போதும்..எந்த வேலை வேண்டும் என்றாலும் செய்து பிழைத்துக் கொண்டு விடலாம். அது இல்லாவிட்டால் ஹையோ வாழ்வு போச்சே..ஆண் கை விட்டுவிட்டான் என்று கதறத்தான்  வேண்டும்.

ஏன் அமெரிக்க மாப்பிள்ளையை பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் அடுத்த ப்ளைட் பிடித்து கண் கசக்கிக் கொண்டு வரும் பெண்கள் இல்லையா..அவர்கள் வாழ்க்கைக்கு ஏன் பதில் சொல்வதில்லை..பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணங்கள் மட்டும் பத்திரமாக இருக்கிறதா..அதை சொல்லுங்கள்..

உங்கள் வீட்டில்  ஏன் ஜாதித் தலைவர் வீட்டில் கூட ஜாதி பார்க்காமல் கலப்பு திருமணம் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கிறது..எப்படி பொருளாதாரம் பின்னணி பார்த்துதான்..சுய ஜாதியாக இருந்தால் கூட ஒரு ஏழைக்கு கண்டிப்பாக திருமணம் செய்துவைக்க துணிய மாட்டீர்கள்..இங்கு ஜாதி என்பது ஏழை, பணக்காரர்கள் என்றாகிக் கொண்டு இருக்கிறது..

ஆனால் சொந்த அரசியலுக்கு மாத்திரம்..ஆழ்ந்து தான் ஆண் என்று நிரூபிக்க மட்டுமே பெண்களை நோக்கி இந்த ஜாதி அரசியல் கொடுரமாக இறங்கி இருக்கிறது. முதலில் தன்னம்பிக்கை உள்ள பெண்ணை வளர்த்து எடுத்தால் போதும்.  பாதுகாப்பு இல்லாத இடங்களுக்கு தனியாகப் போவது எப்படி தவறோ அதேப் போலதான் கணவரோடு போவதும். கணவர் மட்டுமே எந்த பெண்ணையும் பாதுகாக்க முடியாது.

ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவளின் சுய அறிவு மிக முக்கியம். அடுத்து தன்னம்பிக்கை..அடுத்து வசதியாக வாழ கல்வி ( ஆனால் கல்வி கற்பது அதற்கு இல்லை..ஆனால் பொருளாதாரம் சார்ந்து ஆகி விட்டது கல்வி வியாபாரம்).

தன்னம்பிக்கை ஊட்டும் கல்வியை  நமது மகளிருக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து தலைமைப் பண்பு..சிறுவயதில் தலைமைப் பண்போடு வளரும் குழந்தைகள்  சுயமாக இருப்பார்கள்.எளிதில் அவர்களை மாற்ற முடியாது.ஏமாற்றவும் முடியாது.  பெரும்பாலும் தானே எளிதில் ஏமாந்து போகும் பெண்களை கவனித்தால் அவர்கள் பெற்றோருக்கு அடங்கி நடக்கும் பெண்களாக இருப்பார்கள் ஏன் என்றால் யார் சொன்னாலும் கேட்கும் மனம். எனவே எளிதில் வசப்பட்டு விடும். தனக்கு எது நல்லது, கெட்டது என்று கூட அறியாத அப்பாவிப் பெண்கள்.

எங்கே பெண்கள் துணிச்சலாகப் பேசினாலே வாயாடி, பஜாரி, துடுக்கு என்று பட்டம் கட்டும் சமூகம்..பெண்களின் சாமுத்ரிகா லட்சணத்தில் என்றுமே தன்னம்பிக்கை , சுய அறிவு இருக்காது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொல்லிக் கொடுத்து வளர்த்தால் பதினேழு வயதில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் இச்சை உணர்வுகள் மட்டும்தான் இருக்கும்.

அப்படியே தப்பித் தவறி தவறாக முடிவெடுத்தாலும் மீண்டும் வரும் துணிச்சல், என்ன செய்துவிடுவாய் என்று இந்தச் சமூகத்தை பார்த்துக் கேள்வி கேட்கும் மனம்..எல்லாம் வர வேண்டும்..

நாளை பெண்கள் தனக்கு பொருத்தமில்லை என்று நிராகரிக்கும் வேளையில் அவர்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்வார்கள்.அந்த சமயத்தில் ஒரு சமமான சமுதாயம் உருவாகும். உணர்ச்சிகளைப் புறம் தள்ளிவிட்டு தனக்குப் பொருத்தமான தகுதியுள்ள ஆணைத் தேர்ந்தெடுக்கும் தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும்  வர வேண்டும்.

எப்படி முடியும்? முழுக்க முழுக்க பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு எந்தளவுக்கு உலகை எதிர்கொள்ள கற்றுக்கொடுகிறோம்..என்பதில்..
ஆண்களை நண்பர்களாகப் பார்ப்பதில் இருக்கிறது வளர்ப்பு..அனாவசிய கூச்சங்கள் தவிர்த்து நம்பிக்கைத் தோழியாக வளர்ப்பதில் இருக்கிறது அவள் வாழ்க்கை..

வாழ்க்கை நமக்கு எதிர்காலத்தில் என்ன வைத்து தரப் போகிறது என்பதை யாரும் அறிவதில்லை. ஆனால் அதை சமாளிக்கும் தன்னம்பிக்கை, தைரியம் அதற்கான கல்வி மற்றும் வளர்ப்பு இவை இருந்தால் போதும். எப்படிப்பட்ட கஷ்டங்களையும் சமாளித்து வளமோடு வாழலாம்.

இது மட்டும் போதும் பெண்களுக்கு. அவர்கள் வாழ்ந்து கொள்வார்கள்...

அதை விட்டு மகளிர் தினத்தையும் வருடத்திற்கொருமுறை வரும் ஏனைய சிறப்பு நாள் போல் கொண்டாடிவிட்டு மற்ற நாட்களில் அவள் உழைப்பை,பெருமையை,தியாகத்தை  மறந்து போவதும் தன்னலநோக்கில் பயன்படுத்துவதும் பெருந்தவறாகும். அவ்வாறு  செய்யலாகாது. ஆரோக்கியமான சமூகத்திற்கு மாற்றமான விளைவுகளுக்கே அது வித்திடும்.

 - கீர்த்திகா தரண் (சமூக ஆர்வலர், பெங்களூரு)
(ஆசிரியர் குறிப்பு :  கட்டுரையாளர் கீர்த்திகா தரண் பெங்களூருவில் வசிக்கிறார்.  ,சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதுகிறார். சமூக ஆர்வலர். மற்றும் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர். பெண்கள் குறித்தான பிரச்னைகளில் தொடர்ந்து தம் கருத்துகளை எளிமையாகவும் வலிமையாகவும் எடுத்துரைக்கும் கீர்த்திகா தனக்கென்று ஒரு பெரும் வாசக வட்டத்திற்குரியவர். தன்னைப் போன்ற இலட்சிய வேட்கையும் தன்னம்பிக்கையும் மிக்க பெண்களை வளர்த்தெடுக்கும் விருப்பத்தில் மலரும் கீர்த்திகாவின் இக்கட்டுரையை நாம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.)

நன்றி இந்நேரம்.காம்.

http://inneram.com/articles/special/1772-women-s-day.html